உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
கி. ராமசுப்பிரமணியன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘பெட்ரோல் 100 ரூபாய், சிலிண்டர், 1,000 ரூபாய் என்று விலை கூடிக்கொண்டே போனால் எப்படி வாழ்வது’ என்று கேட்கும் சாமானிய மக்களிடையே தான், மூன்று மணி நேர பாட்டு கச்சேரி பார்க்க, 5,000 முதல், 50,000 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி பொழுதைப் போக்கும் சீமான்களும் உள்ளனர்.
அதே நேரம், சிலிண்டருக்கும், பெட்ரோலுக்கும் செலவு செய்ய முடியாத நடுத்தர வர்க்கத்தினர் சிலரும் கூட, எப்படியாவது நேரடியாக, துாரத்தில் இருந்தாவது ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்து, அவரது கச்சேரியை கேட்டு விட வேண்டும் என்ற ஆசையில் தான், 500 அல்லது 1,000 ரூபாய் டிக்கெட் வாங்கி, ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சிக்கு சென்றிருப்பர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மோசமான திட்டமிடல் மற்றும் பேராசை காரணமாக, கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில், நிகழ்ச்சியையும் பார்க்க இயலாமல், டிக்கட் கட்டணத்தையும் இழந்து திரும்பி வந்துள்ளனர் பலர்.
இதில் வருத்தம் என்னவென்றால், 4 – 5 வயது குழந்தைகளுக்கும் கூட டிக்கெட் வாங்கி நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்று, கூட்ட நெரிசலில் சிக்க வைத்துள்ளனர். விபரம் அறியா அவர்களுக்கு ரஹ்மானைப் பற்றி என்ன தெரியும் என்று அழைத்துச் சென்று அல்லாடினர் நம் மக்கள்?
![]() |
இந்தக் குளறுபடிகளுக்கு பொறுப்பு ஏற்பதாக அவர் கூறினாலும், ரசிகர்கள் பட்ட துன்பங்களுக்கு யார் பொறுப்பேற்பது? நிகழ்ச்சி நடந்த இடத்தின் கொள்ளளவுக்கும் அதிகமாக ஆயிரக்கணக்கில் டிக்கெட் விற்பனை செய்து பணம் பார்த்ததற்கு யார் பொறுப்பேற்பது?
இதுவும் ஒரு விதத்தில், ‘ஒயிட் காலர்’ கொள்ளையே. தான் ஆஸ்கர் விருது வென்றபோது, ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என, தன்னடக்கத்துடன் கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
தற்போது, அவரை வைத்து பணம் பார்க்க நினைத்த சிலரது பேராசையின் விளைவால், பல ஆயிரம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு என்ன பதில் தரப் போகிறார்?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்