பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேட்டி:
சனாதன தர்மத்தை விமர்சித்து வரும் தி.மு.க., அரசு, விநாயகர் ஊர்வலங்களை அத்துமீறி தடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. பதற்றமானதாக கூறப்படும் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த என் தலைமையில், விநாயகர் ஊர்வலங்கள் நடப்பது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும். அதையும் மீறி முன்னெச்சரிக்கை நடவடிக்கை என, கைது செய்தால் சிறை செல்லவும் தயார்.
அப்படி எதுவும் நடந்துடக் கூடாதுன்னு தானே இவ்வளவு இடையூறுகளும் பண்றாங்க… அது புரியலையா இவருக்கு?
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க நிறுவனர் லியாகத் அலிகான் பேட்டி:
வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி நிச்சயமாக அமையும். இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டால், கோவை, கன்னியாகுமரி போன்ற நான்கைந்து தொகுதிகளில் தான் வெற்றி பெற முடியும். தி.மு.க., – காங்., கூட்டணிக்கு, 35 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம், லோக்சபா தேர்தலில் தி.மு.க., – காங்., கூட்டணிக்கு பலன் கொடுக்கும்.
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத ஏமாற்றத்தில் இருப்போரால், அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணிக்கும் பலன் கிடைக்கும்னு தான் தோணுது!
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:
தேர்தல் செலவுகளை குறைத்தால் தான், நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றுக்கு செலவு செய்ய முடியும். இதற்கு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மிக அவசியம். அது மட்டுமல்ல; இப்போதைய சூழலில், அனைத்து மாநிலங்களும் வளர, இது அவசியம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தமிழகத்திற்கும் பொருந்தும்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கிற அரசியல் கட்சிகளுக்கும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நல்லது தான்… அதையும் சேர்த்து சொல்லுங்களேன்!
தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேட்டி:
எதிர்க்கட்சிகள் இணைந்து, ‘இண்டியா’ என்ற பெயரை வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு தேர்தல் கமிஷன் தடை விதிக்க வேண்டும். மத்திய அரசும், இந்தியாவின் பெயரை, ‘பாரத்’ என மாற்றும் முடிவு முட்டாள் தனமானது. ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஒரு வரியில் பதில் சொல்ல முடியாது.
காங்., – பா.ஜ., ஆகிய இரண்டு கூட்டணியிலும், தே.மு.தி.க.,வுக்கு இடமில்லை என்பதை நன்றாகவே உணர்ந்துட்டாங்க போல தெரியுது!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்