- எழுதியவர், செரில்லன் மோல்லன்
- பதவி, பிபிசி நியூஸ், மும்பை
-
முன்னணி பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் 26 வயது பணியாளர் ஒருவரின் துயரமான மரணச் சம்பவம், பணியிடங்களில் பணியாளர்களின் நலன் மற்றும் கார்ப்பரேட் சூழல் குறித்த முக்கியமான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்டாக இருந்த ஆனா செபாஸ்டியன் பெராயில், வேலையில் சேர்ந்த நான்கு மாதங்களிலேயே கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார்.
புதிய வேலையில் “அதிகப்படியான வேலை காரணமாக ஏற்பட்ட அழுத்தம்” தனது மகளின் ஆரோக்கியத்தைப் பாதித்து அவரின் இறப்புக்கு வழிவகுத்ததாக ஆனாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம், மற்ற பணியாளர்களைப் போன்றே ஆனாவுக்கும் பணிகள் வழங்கப்பட்டதாகவும், பணிச்சுமை காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறுவதை நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஆனா திடீரென உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பெரும்பாலான கார்ப்பரேட் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பணியாளர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல், வேலை மற்றும் உற்பத்தியில் (productivity) மட்டும் கவனம் செலுத்தும் கலாசாரம் குறித்த விவாதம் இதனால் அதிகமாகியுள்ளது.
புதுமை மற்றும் வளர்ச்சிக்கு இத்தகைய பணிச்சூழல் வழிவகை செய்வதாகச் சிலர் வாதிடுகின்றனர். விருப்பம் மற்றும் லட்சியம் காரணமாகப் பலரும் விரும்பியே இத்தகைய நீண்டநேரம் வேலையில் ஈடுபடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
பணியாளர்கள் தங்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அதிகப்படியாக வேலை செய்ய நிர்வாகங்கள் நிர்பந்திப்பதாக மற்றவர்கள் கூறுகின்றனர்.
தாயாரின் கடிதம்
ஆனாவின் தாயார் அனிதா அகஸ்டின் எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்திற்கு எழுதிய கடிதம் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது. தன் மகளுக்கு பணியிடத்தில் ஏற்பட்ட அழுத்தம் தொடர்பான அனைத்து விவரங்களையும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன் மகள் நள்ளிரவிலும் வார இறுதி நாட்களிலும் வேலை செய்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
“தங்களின் பணிச்சூழலை மேம்படுத்தி, பணியாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான” நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் அந்நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் வேலையை மேன்மேலும் மகிமைப்படுத்துவது போலத் தோன்றும் பணிச்சூழலை ஆனாவின் இறப்பு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக,” அவர் தெரிவித்துள்ளார்.
“சாத்தியமற்ற இலக்குகளை முடிப்பதற்காகத் தொடர்ச்சியாக அவருக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தம், மிகுந்த திறமை வாய்ந்த ஓர் இளம்பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது.”
எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தின் “மோசமான பணிச்சூழல்” குறித்துப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்களின் அனுபவங்களைப் பலரும் ட்விட்டர், லிங்க்ட் இன் போன்ற சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். முன்னணி கன்சல்டன்ஸி நிறுவனம் ஒன்றில் ஒரு நாளில் 20 மணிநேரம் வேலை பார்க்க, அதற்கான ஊதியமே வழங்காமல் நிர்பந்திக்கப்பட்டதாக ஒருவர் பகிர்ந்துள்ளார்.
மற்றொரு சமூக ஊடக பயனர், “இந்தியாவில் பணிச்சூழல் மிக மோசமானது. ஊதியம் குறைவாக இருக்கும், ஆனால் சுரண்டல் அதிகமாக இருக்கும். எப்போதும் தங்கள் பணியாளர்களை கருணையே இல்லாமல் துன்புறுத்தும் நிறுவனங்கள், அதன் விளைவுகள் குறித்து பயப்படுவதுமில்லை, வருத்தப்படுவதும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அதிக நேரம் வேலை செய்வது மற்றும் குறைவான ஊதியம் வழங்குவது இரண்டையும் மேலாளர்கள் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவரும் அதன் பணிச்சூழலை விமர்சித்துள்ளார். குறித்த நேரத்தில் வீட்டுக்குச் செல்லும் பணியாளர்கள் “கேலி” செய்யப்படுவார்கள் என்றும் வார விடுமுறை எடுப்பதற்காக “அவமானப்படுத்தப்படுவார்கள்” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“நிறுவனங்களில் பயிற்சி எடுப்பவர்கள் (Interns) அதிகப்படியான வேலை மற்றும் சாத்தியமற்ற காலக்கெடு ஆகிய சுமைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களின் வருங்காலத்தை வடிவமைக்கும் வகையிலான, பணி குறித்த மதிப்பாய்வுகளின்போது அவமானப்படுத்தப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
நிறுவனம் என்ன கூறுகிறது?
எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தின் இந்திய தலைமை ராஜீவ் மேமானி, பணியாளர்களின் நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“எங்கள் பணியாளர்களின் நலன்தான் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். இந்த இலக்கை நான் தனிப்பட்ட ரீதியில் ஆதரிக்கிறேன்,” என லிங்க்ட் இன் பக்கத்தில் எழுதியுள்ளார்.
ஆனாவின் இறப்பு, இந்தியாவில் பணிச்சூழல் குறித்த விவாதத்தைக் கிளப்பிய முதல் சம்பவம் அல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை-நிறுவனர் நாராயண மூர்த்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.
ஓலா நிறுவனத்தின் இந்திய தலைமை பாவேஷ் அகர்வால், நாராயணமூர்த்தியின் எண்ணங்களுடன் உடன்படுவதாகத் தெரிவித்தார். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையைப் பேணுவது என்பதை தான் நம்பவில்லை எனத் தெரிவித்த அவர், ”நீங்கள் உங்கள் வேலையில் ஆனந்தமாக இருந்தால், வாழ்க்கை மற்றும் வேலை இரண்டிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம், இரண்டையும் சமநிலையில் வைத்துக் கொள்ளலாம்” என்றார்.
பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் நிறுவனர் ஷாந்தனு தேஷ்பாண்டே பணிநேரம் குறித்து இளைஞர்கள் புகார் கூறக்கூடாது என்றும் தங்களின் பணிக்காலத்தின் முதல் 4 அல்லது 5 ஆண்டுகள் எந்தப் பணியாக இருந்தாலும் ஒரு நாளில் 18 மணிநேரம் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும் என்றும் 2022ஆம் ஆண்டு கூறியிருந்தார்.
ஆனால், இத்தகைய கருத்துகள் தவறானவை என்றும் பணியாளர்கள் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் மனநல நிபுணர்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனாவின் தாயார் அக்கடித்தத்தில், எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே தன் மகள் “ஓய்வின்மை மற்றும் தூக்கமின்மை” பிரச்னைகளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் கூறுவது என்ன?
உலகளவில் இந்தியாவில் உள்ள பணியாளர்கள் அதிகளவிலான பணிச்சுமையை எதிர்கொள்வதாக நம்பப்படுகிறது. சமீபத்தில் சர்வதேச தொழிலாளர் மையம் வெளியிட்ட ஆய்வறிக்கைப்படி, இந்தியாவில் வேலை செய்பவர்களில் பாதிப் பேர், வாரத்தில் 49 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை பார்ப்பதாகவும் இது உலகிலேயே அதிகப்படியான வேலை நேரத்தைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பூடான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
தொழிலாளர் பொருளாதார நிபுணர் ஷியாம் சுந்தர் கூறுகையில், 1990களில் சேவைத் துறைகள் தொடங்கப்பட்டு தொழிலாளர் சட்டங்கள் புறக்கணிக்கப்பட ஆரம்பித்ததில் இருந்து, 24 மணிநேரமும் வேலை செய்யத் தயாராக இருக்கும் வகையில் இந்தியாவின் பணிச்சூழல் மாறிவிட்டதாகக் கூறுகிறார்.
நிறுவனங்கள் இதைத் தங்கள் பணிச்சூழலின் உள்ளார்ந்த அங்கமாகக் கொண்டுள்ளதாகவும் ஆனால் தற்போது பணியாளர்களும் அதை ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் அவர் கூறுகிறார்.
“தொழிற்பயிற்சிப் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிகமாக சம்பாதிக்க நீண்டநேரம் வேலை பார்ப்பது சாதாரணமானதுதான், அதைச் சிலர் விரும்பி ஏற்பதாகவும் கூறுகின்றனர்” என்றார் அவர்.
கார்ப்பரேட் கலாசாரத்தின் மனநிலையில்தான் உண்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர் கூறுகிறார். அதாவது, நிறுவனங்களும் பணியாளர்களும் வேலை குறித்து சமமான கண்ணோட்டத்தை தழுவ வேண்டும் என்றும் வேலை முக்கியம்தான், ஆனால் வாழ்க்கையின் நோக்கம் அதுமட்டுமே அல்ல என்பதை உணர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“அதுவரை, மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது அல்லது மனநலம் தொடர்பாக மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து ஆலோசனை வழங்குவது ஆகியவை தற்காலிகமாக சிறந்த நடைமுறையாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸ் -இன் பேராசிரியர் சந்திரசேகர் ஸ்ரீபத் இந்தக் கருத்தை ஆமோதிக்கிறார். மோசமான பணிச்சூழல் என்பது “சிக்கலான, பன்முகம் வாய்ந்த பிரச்னை” எனக் கூறும் அவர், தொழில்துறையில் உள்ள நிறுவனர்கள், மேலாளர்கள், பணியாளர்கள், சமூகம் ஆகியவை உற்பத்தி குறித்த பார்வையை மாற்றினால்தான் உண்மையான மாற்றம் நிகழும் என்றார்.
அவர் கூறுகையில், “நாம் இன்னும் உற்பத்தியை எப்போதும் கடுமையான உடல் உழைப்புடன் இணைத்து குழப்பிக் கொள்கிறோம். தொழில்நுட்பத்தின் வேலை மனித உடல் உழைப்பைக் குறைப்பது, அப்படியிருக்கும்போது அவர்கள் ஏன் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும்” என்கிறார் அவர்.
“நிலையான வளர்ச்சியின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். சூழலியல் பார்வையில் மட்டுமல்லாது தொழிலாளர் உரிமைகள் பார்வையிலும் இதைச் செய்ய வேண்டும்,” என்கிறார் அவர்.
“ஸ்காண்டிநேவிய நாடுகள் மிகவும் நெகிழ்வுத்தன்மை வாய்ந்த பணிச்சூழலை உருவாக்கியுள்ளன. எனவே இந்தியாவும் பின்பற்ற இது ஒரு முன்மாதிரி. இதற்குத் தேவையானது மன உறுதி மட்டுமே” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு