படக்குறிப்பு, கொழும்பில் சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நில மீட்புத் திட்டத்தின் கட்டுமானத்தளம்.(கோப்புப்படம்)கட்டுரை தகவல்
எழுதியவர், ராஜகோபால் யசிஹரன்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ‘தேவையற்ற வெளி அழுத்தங்கள்’ முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் (Qi Zhenhong) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இப்பிராந்தியத்தில் சீன முதலீடுகளைத் தடுக்கும் ‘பிராந்திய மிரட்டல்’ நடவடிக்கைகளைத் தமது நாடு வன்மையாக எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதோடு, 2019-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத் தீவுகளில் திட்டமிடப்பட்ட மின்சாரத் திட்டம் நிறுத்தப்பட்டதால் சுமார் பத்தாயிரம் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே போட்டி
பட மூலாதாரம், Handout
படக்குறிப்பு, சீனத் தூதுவர் கி ஜென்ஹாங்
சீனத் தூதுவரின் இந்தக் கருத்துக்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் வெறும் நிலப்பரப்பாக அன்றி, இருபெரும் ஆசிய நாடுகளுக்கிடையேயான போட்டி பிராந்தியமாக மாறியுள்ளதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. 2019-இல் யாழ்ப்பாணத் தீவுகளில் தொடங்கவிருந்த சீன மின்சக்தித் திட்டம் இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக இந்தியா அண்மையில் 11 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தில் தனது சொந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதனைச் சீனா “பிராந்திய மிரட்டல்” எனக் குறிப்பிட்டாலும், இந்தியாவின் பார்வையில் இது தனது “பிராந்திய பாதுகாப்பு” தொடர்பான விவகாரமாகும்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அருகிலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய சக்தியை உள்ளடக்கிய ‘கலப்பு மின் உற்பத்தி’ திட்டத்தை முன்னெடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை சீனாவின் ‘சினோசார்-எடெக்வின்’ நிறுவனம் வென்றிருந்தது.
இலங்கை அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஆரம்பிக்கப்படவிருந்த இத்திட்டம், இந்தியாவின் தென் மாநிலமான தமிழகக் கடற்கரையிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால், இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என புதுடெல்லி கடும் எதிர்ப்பை வெளியிட்டது.
இதன் விளைவாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் மூலோபாயப் பிரசன்னத்தைத் தடுக்கும் நோக்கில், இலங்கை அரசாங்கம் அந்தச் சீன ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. இறுதியில், 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதே திட்டத்தை இந்தியா தனது 11 மில்லியன் அமெரிக்க டாலர் முழுமையான ‘மானிய’ நிதியுதவியுடன் பொறுப்பேற்று, தற்போது அதன் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதையே சீனத் தூதுவர் ‘வெளி அழுத்தம்’ மற்றும் ‘முதலீட்டுத் தடை’ என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சர்ச்சைக்குரிய திட்டங்களின் கள நிலவரம் என்ன? சீனத் தூதுவர் குறிப்பிடும் அந்த ‘முட்டுக்கட்டைகள்’ மற்றும் ‘முதலீட்டு முயற்சிகள்’ எத்தகையவை என்பதைப் பின்வரும் முக்கிய அம்சங்கள் ஊடாகப் புரிந்துகொள்ள முடியும்:
1. யாழ்ப்பாணத் தீவுகளின் ‘ஹைப்ரிட்’ மின் திட்டம்
பட மூலாதாரம், Getty Images
2019-ஆம் ஆண்டு நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவுகளில் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத் திட்டத்தை முன்னெடுக்கச் சீன நிறுவனம் ஒப்பந்தம் கோரியது. ஆனால், தமிழகக் கடற்கரைக்கு மிக அருகில் சீன நிறுவனத்தின் நடமாட்டம் இருப்பது இந்தியா தனது பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாகக் கருதியது.
புதுடெல்லியின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு, தற்போது இந்தியாவின் முழுமையான மானிய நிதியுதவியுடன் அத்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவே சீனத் தூதுவர் நேர்காணலில் குறிப்பிட்ட மிக முக்கியமான ‘வெளி அழுத்தம்’ ஆகும்.
2. கடல் அட்டை பண்ணைகள்: அபிவிருத்தியா? அச்சுறுத்தலா?
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் சீன ஆதரவுடன் பாரிய கடல் அட்டை பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாகச் சீனா கூறினாலும், இந்தப் பண்ணைகளால் தங்களின் பாரம்பரிய மீன்பிடி நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக உள்ளூர் மீனவ சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. ‘ஆராய்ச்சி’ மற்றும் ‘முதலீடு’ என்ற பெயரில் கடற்பரப்பில் சீனர்களின் ஆதிக்கம் அதிகரிப்பது எதிர்காலத்தில் தங்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிடும் என்பதே மீனவர்களின் பெரும் அச்சமாக உள்ளது.
இது குறித்து அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கையில், “அபிவிருத்தி அல்லது வேலைவாய்ப்பு என்ற போர்வையில் கொண்டுவரப்படும் இந்த கடல் அட்டைப் பண்ணைகள், வட பகுதி மீனவர்களின் பாரம்பரியக் கடற்பரப்பை திட்டமிட்டு ஆக்கிரமிப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடல் அட்டை வளர்ப்புக்காகக் கடலின் பெரும் பகுதிகள் கம்பிக் கூடுகள் மற்றும் வலைகள் மூலம் வேலிபோட்டு அடைக்கப்படுவதால், தலைமுறை தலைமுறையாக அங்கு மீன்பிடித்து வந்த சிறு மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். வெளிநாட்டு முதலீடுகள் என்ற பெயரில் எமது கடல் வளங்கள் சுரண்டப்படுவதையும், பாரம்பரிய மீனவச் சமூகம் தனது சொந்த மண்ணில் கூலிகளாக மாற்றப்படுவதையும் எம்மால் அனுமதிக்க முடியாது” என்று அவர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
3. மனிதாபிமான உதவிகள்: தமிழர்களின் ஆதரவை பெறும் முயற்சி?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடலில் இருந்து சேகரிக்கப்படும் ஒருவகை கடல் அட்டைகள். ( கோப்புப்படம் )
இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் போது, வடக்கு மீனவர்களுக்கு அரிசி, மீன்பிடி வலைகள் மற்றும் எரிபொருள் போன்றவற்றைச் சீனா தாராளமாக வழங்கியது. சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் நேரடியாகப் பலமுறை வடக்குக்கு பயணம் செய்து இந்த உதவிகளை வழங்கினார்.
இதனை வெறும் மனிதாபிமான உதவியாக மட்டும் பார்க்க முடியாது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவின் செல்வாக்கு மண்டலமான வடபுலத்தில், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் தமிழர்களின் “ஆதரவைப் பெறுவதற்கான” ஒரு மென்-அதிகார தந்திரோபாயமாகவே இது பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு கவசம் – வடக்கு அரசியல் தலைமைகள்
பட மூலாதாரம், Handout
படக்குறிப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
“சீனத் தூதுவர் இதனை மக்களின் தேவையை முடக்கும் ‘வெளி அழுத்தம்’ என்று வர்ணித்தாலும், வடக்கு – கிழக்கு தமிழ் அரசியல் தரப்புகள் இந்த இந்தியத் தலையீட்டை பெரும்பாலும் ஒரு பாதுகாப்பு கவசமாகவே பார்க்கின்றன. சீனாவின் வருகையைத் தமிழ் கட்சிகள் எதிர்ப்பதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
முதலாவது, இலங்கையின் இனப்பிரச்னை மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் போன்ற விவகாரங்களில் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் கொடுத்து வரும் அழுத்தத்தை, சீனா தனது (மற்ற நாடுகளின்) ‘உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை’ எனும் கொள்கை மூலம் நீர்த்துப்போகச் செய்துவிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
இரண்டாவது, வரலாற்று ரீதியாகத் தமக்கு அரசியல் ஆதரவு வழங்கி வரும் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராகச் சீனாவைத் தமது மண்ணில் அனுமதிப்பது, நீண்டகால ரீதியில் தமிழர்களின் அரசியல் பலத்தைக் குறைத்துவிடும் எனத் தமிழ் தலைவர்கள் கருதுகின்றனர். இதனால், ‘அபிவிருத்தி’ என்பதைத் தாண்டி, சீனா இப்பிராந்தியத்தில் காலூன்றுவது ஒரு ‘அரசியல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே’ பொதுச் சமூகத்தினாலும் தமிழ் தேசியக் கட்சிகளாலும் பார்க்கப்படுகின்றது.”
இது குறித்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கையில், ‘வடக்கு – கிழக்கின் அபிவிருத்திகளுக்கு நாம் ஒருபோதும் எதிரானவர்கள் அல்ல. அரசாங்கத்தின் ஊடாக எந்தவொரு நாட்டின் நிதியும் இங்கு வந்து அபிவிருத்திகள் செய்யப்படுவதைத் தமிழ் தரப்பு தடுத்ததும் இல்லை, தடுக்கப்போவதும் இல்லை” என்றார்.
ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கு – கிழக்கை சீனா ‘தவறாகப்’ பயன்படுத்த நினைத்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தாங்கள் எப்போதும் இந்தியாவையே சார்ந்துள்ளதாகவும், எமக்கும் இந்தியாவுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் சீனாவின் முயற்சிகளை எதிர்க்க வேண்டிய கட்டாயம் தமக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள அவர், ‘சீன திட்டங்களில் 90 சதவிகித ஊழியர்கள் சீனர்களாகவே உள்ளனர்; உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை.
எமது மக்களுக்குப் பயன் தராத இத்தகைய திட்டங்கள் எதற்கு? உலகமே இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும்போது, தமிழர்கள் விவகாரத்தில் சீனா இன்றுவரை அமைதி காக்கிறது. இதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. மாறாக, இந்தியாவைத் தமிழர்கள் பகைத்துக்கொள்ளும் நிலைமையையே சீனா உருவாக்குகிறது என்றால், அதனைத் தமிழ் அரசியல் பிரதிநிதிகளாக நாம் வன்மையாகக் கண்டிப்போம்’ என்றும் அவர் தெரிவித்தார்.’
சீன முதலீடுகளை வரவேற்கும் இலங்கை
“இலங்கையின் தற்போதைய அரசாங்கம், குறிப்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையிலான நிர்வாகம், சீனாவுடன் பொருளாதார ரீதியாக மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வருகிறது. 2025 ஜனவரியில் ஜனாதிபதி சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதில் முக்கியமாக ‘பெல்ட் அண்ட் ரோட்’ (BRI) திட்டத்தின் கீழ் விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் கடல்சார் அபிவிருத்தி போன்ற துறைகளில் பாரிய முதலீடுகளை ஈர்க்க அரசாங்கம் இணங்கியுள்ளது. குறிப்பாக, ஹம்பாந்தோட்டையில் அமையவுள்ள 3.7 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன ‘சினோபெக்’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திட்டம், தற்போதைய அரசாங்கம் சீனாவின் முதலீடுகளை எவ்வளவு தூரம் வரவேற்கிறது என்பதற்கு ஒரு பலமான சான்றாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை
பட மூலாதாரம், Handout
படக்குறிப்பு, அமைச்சர் விஜித ஹேரத்
“இலங்கையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சீனாவுடனான உறவில் ஒரு புதிய கட்டம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த காலங்களைப் போல இலங்கையை ‘கடன்பொறிக்குள்’ தள்ளும் பாரிய உள்கட்டமைப்புக் கடன்களைப் பெறுவதைத் தவிர்த்து, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலேயே புதிய நிர்வாகம் கவனம் செலுத்தி வருவதாக அரசாங்கம் கூறுகின்றது.
இதன் முதற்கட்டமாக, ஹம்பாந்தோட்டையில் சுமார் 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் அதி நவீன எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைக்கும் பணிகளைச் சீனாவின் ‘சினோபெக்’ நிறுவனத்துடன் இணைந்து அரசாங்கம் விரைவுப்படுத்தியுள்ளதாகவும், மேலும், விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் பல புதிய இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கையெழுத்தாகியுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கில் புதிய திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படக் காரணம் என்ன?
பட மூலாதாரம், Handout
படக்குறிப்பு, அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான்
“இருப்பினும், தென்னிலங்கையில் சீன முதலீடுகளை வரவேற்கும் புதிய அரசாங்கம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை முற்றிலும் மாறுபட்ட ஒரு ‘மௌனமான தந்திரோபாயத்தையே’ கையாண்டு வருகிறது. தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், வடக்கு-கிழக்கு பிராந்தியத்தில் புதிய பாரிய முதலீட்டுத் திட்டங்கள் எதற்கும் சீனாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தமிழகக் கடற்கரையிலிருந்து மிக அருகில் இருக்கும் யாழ்ப்பாணம், மன்னார் அல்லது திருகோணமலை ஆகிய பகுதிகளில் சீனாவின் மூலோபாய அல்லது உள்கட்டமைப்பு ரீதியான பிரசன்னம் ஏற்படுவதை இந்தியா தனது தேசியப் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் நேரடி அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. புதிய அரசாங்கம் இந்தியாவின் இந்த அதிருப்தியைச் சம்பாதிக்கத் தயாராக இல்லை.
அதேபோல், இந்தியாவை ஆத்திரமூட்டும் வகையில் வடக்கில் சீனாவுக்கு இடமளிப்பது, பிராந்திய ஸ்திரத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புதிய அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது. இதனால்தான், ‘பொருளாதாரத்துக்கு சீனா – பாதுகாப்புக்கு இந்தியா’ என்ற இரட்டைக் கொள்கையை அரசாங்கம் கடைப்பிடிக்கிறது,” என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக சுட்டிக்காட்டுகின்றார்.
“அரசாங்க மட்டத்தில் புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், சீனா தற்போது வடக்கு-கிழக்கில் தனது உத்தியை மாற்றியமைத்துள்ளது. பாரிய முதலீடுகளுக்குப் பதிலாக, மனிதாபிமான உதவிகள் மற்றும் மானியங்கள் மூலம் உள்ளூர் மக்களின் மனங்களை வெல்லும் ஒரு ‘மென்-அதிகார’ தந்திரோபாயத்தைச் சீனா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இதன் கீழ், வட பகுதி மீனவ குடும்பங்களுக்கு வீடுகள், உலர் உணவுப் பொதிகள் மற்றும் இலவச மீன்பிடி வலைகளைச் சீனத் தூதரகம் நேரடியாக வழங்கி வருகிறது. தற்போதைய அரசியல் சூழலில், உத்தியோகபூர்வ திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகள் விழுந்தாலும், பொதுச் சமூக மட்டத்திலான தொடர்புகள் மூலம் வடக்கில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளச் சீனா முயல்கிறது. ஆனால், இந்த மனிதாபிமான முயற்சிகளும் கூட, உள்ளூர் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மீனவ அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே நகர்கின்றன.” என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
மேலும் அவர், “இறுதியாக, இலங்கை அரசாங்கம் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் சமமான நட்புறவைப் பேண விரும்புவதாகக் காட்டிக்கொண்டாலும், வடக்கு-கிழக்கு என்ற புள்ளியில் இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாட்டுக்கு மாறாக சீனாவுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கத் தயாராக இல்லை என்பதே யதார்த்தம். சீனா தனது பொருளாதார பலத்தைக் கொண்டு வடபுலத்துக்குள் நுழைய முற்படும் ஒவ்வொரு முயற்சியும், இந்தியாவின் பூகோள அரசியல் அழுத்தம் மற்றும் உள்ளூர் தமிழ் மக்களின் அரசியல் ஐயப்பாடுகள் ஆகிய இரட்டைச் சுவர்களால் முறியடிக்கப்பட்டு வருகின்றன.
சீனத் தூதுவரின் ஆதங்கமான நேர்காணல் உணர்த்துவது ஒன்றையே, அபிவிருத்தித் திட்டங்கள் எத்தகைய கவர்ச்சிகரமானவையாக இருந்தாலும், இலங்கையின் வடக்கு-கிழக்கு மண்ணைப் பொறுத்தவரை, அது இந்தியாவின் பாதுகாப்புத் தராசிலும் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளிலும் இணக்கம் காணாதவரை, சீனாவின் கனவுகளை செயல்படுத்துவதில் சிக்கல்கள் நீடிக்கலாம்.” என்றார்.