14
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அதிகாலை வரை ரஷ்யா நடத்திய பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கீவ் முழுவதும் வெடிச் சத்தங்கள் கேட்ட நிலையில், நகர மேயர் விட்டாலி கிளிட்ஷ்கோ, “இது ஒரு கொடூரமான இரவு” என்று குறிப்பிட்டார்.
தலைநகரின் அனைத்து பகுதிகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதுடன், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
“கீவ் நகரில் 40க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்கப்பட்டன. இடிபாடுகள் குடியிருப்புக் கட்டடங்கள், கிடங்குகள், ஒரு பல்பொருள் அங்காடி மற்றும் ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்துகளை ஏற்படுத்தின” என நகரின் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
“தலைநகர் பாரிய பாலிஸ்டிக் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் ஏவுகணைகள் வர வாய்ப்புள்ளது” என கீவ் இராணுவ நிர்வாகத் தலைவர் டைமுர் தகசென்கோ நள்ளிரவை ஒட்டி டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்டாரோபில்ஸ்க் நகரில் மாணவர் தங்குவிடுதி மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பதிலடி கொடுப்போம் என்று உறுதியளித்ததை அடுத்தே, இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
எனினும், உக்ரைன் இராணுவத் தலைமையகம், வெள்ளிக்கிழமை இரவு ரஷ்ய ஆக்கிரமிப்பு கிழக்கு உக்ரைனில் உள்ள ஸ்டாரோபில்ஸ்க் அருகே தாங்கள் நடத்திய தாக்குதல், உயரடுக்கு ரஷ்ய இராணுவப் பிரிவைக் குறிவைத்ததே தவிர, பொதுமக்கள் மீதானது அல்ல என்று மறுத்துள்ளது.
இதற்கிடையே, உக்ரைன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டி, ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியதும் தற்போது இடைமறிக்க இயலாததுமான ‘ஓரேஷ்னிக்’ ஏவுகணையை உக்ரைன் மீது பிரயோகிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எச்சரித்திருந்தார்.
எனினும், இந்த சமீபத்திய குண்டுவீச்சில் அந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.