தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3.30 மணிக்கு துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலங்களுக்கான துணை முதலமைச்சர் பதவி என்பது பொதுவான ஒன்றாகவே உள்ளது. நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, எடியூரப்பா, மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் துணை முதலமைச்சர்களாக இருந்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் 14 மாநிலங்களில் துணை முதலமைச்சர்கள் உள்ளனர். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகார், மேகாலயா, ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்களில் இரண்டு துணை முதலமைச்சர்கள் பதவியில் உள்ளனர்.
கூட்டணி ஆட்சி அமையும்போது, முக்கிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அல்லது ஒரு கட்சிக்குள் இரு முக்கிய தலைவர்கள் இருக்கும் போது மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க, அதிகாரப் பகிர்விற்கு உள்ளிட்ட பல காரணங்களுக்காக பல்வேறு சூழ்நிலைகளில் துணை முதலமைச்சர் பதவிகள் தரப்பட்டுள்ளதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால், இங்கே எழும் கேள்வி என்னவென்றால் துணை முதலமைச்சர் பதவிக்கான அதிகாரங்கள் என்ன? இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுவது என்ன?
அரசியலமைப்புச் சட்டம் கூறுவது என்ன?
கடந்த பிப்ரவரி மாதம், உச்சநீதிமன்றத்தில் ‘பப்ளிக் பொலிடிகல் பார்ட்டி’ (Public political party) எனும் கட்சியின் சார்பாக ஒரு பொது நல மனு (PIL) தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்தியாவின் பல மாநிலங்களில் ‘துணை முதலமைச்சர்’ என்ற பதவி வழங்கப்படுகிறது, இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
‘கட்சியின் முக்கியத் தலைவர்களை சமாதானப்படுத்த, கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள, சாதி-மத சமன்பாடுகளை பேணுவதற்கு என பல்வேறு காரணங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுகிறது, எனவே இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது’ என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஒருவருக்கு துணை முதலமைச்சர் என்ற பதவி அளிக்கப்பட்டாலும் கூட, நடைமுறையில் அவர் ஒரு அமைச்சர் மட்டுமே. அதாவது முதலமைச்சரால் வழிநடத்தப்படும் அமைச்சரவையின் ஒரு உறுப்பினர். மற்ற அமைச்சர்களுடன் ஒப்பிடுகையில் அவருக்கு கூடுதல் சம்பளமோ, பயன்களோ கிடையாது.” என்று கூறியது.
“ஆட்சியதிகாரத்தில் அவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படலாம், ஆனால் அவர்கள் ஒரு அமைச்சராக தான் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். எனவே இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது இல்லை” எனக் கூறி பொதுநல மனுவை உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.
துணை முதலமைச்சரின் அதிகாரங்கள்
‘துணை முதலமைச்சர்’ என்ற பதவிக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளனவா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன், ‘துணை பிரதமர்’ என்ற பதவி குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.
சர்தார் வல்லபாய் பட்டேல், மொரார்ஜி தேசாய், எல்.கே. அத்வானி உள்ளிட்ட சில தலைவர்கள் இந்தியாவின் துணை பிரதமர்களாக பதவி வகித்து உள்ளனர்.
1989ஆம் ஆண்டு, பிரதமர் வி.பி.சிங் அமைச்சரவையில் தேவிலால் துணை பிரதமராக பதவி வகித்தார்.
அதற்கு முன்னதாக வல்லபாய் பட்டேல், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள் துணை பிரதமராக பதவி வகித்திருந்தும் கூட தேவிலாலின் பதவியேற்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 1990ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “துணை பிரதமர் என்பவர் மத்திய அமைச்சரவையின் ஒரு அமைச்சர் மட்டுமே. பிரதமர் பதவிக்கான எந்த அதிகாரமும் ‘துணை பிரதமர்’ பதவிக்கு வழங்கப்படவில்லை.” என்று கூறியது.
இதன் மூலம், துணை பிரதமர், துணை முதலமைச்சர் ஆகிய பதவிகளுக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி எந்தவித சிறப்பு அதிகாரங்களும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
“துணை முதலமைச்சர் பதவிக்கு என பிரத்யேக அதிகாரங்கள் அரசியலமைப்பில் வழங்கப்படவில்லை தான், ஆனால் அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் அவர் இருப்பார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில், அவரது பணிகளையும் கூட துணை முதலமைச்சர் மேற்கொள்ளலாம்” என்று பிபிசி தமிழிடம் கூறினார் வழக்கறிஞரும், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன்.
“அதேபோல எந்தெந்த துறைகள் துணை முதலமைச்சருக்கு ஒதுக்கப்படுகின்றன என்பதும் முக்கியம். தமிழ்நாட்டின் நிர்வாகத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று கூறுகிறார் வில்சன்.
தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளார் உதயநிதி ஸ்டாலின். முதன்முதலில் 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
பிறகு 2017இல், அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார்.
‘பொறுப்புடன் கூடிய அதிகாரம்’
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “அமைச்சர் உதயநிதியின் கட்டுப்பாட்டில் இருப்பது இளைஞர் நலன், விளையாட்டுத் துறை மட்டும் அல்ல, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை என்ற பிரிவும் தான். ‘மகளிர் உரிமைத் தொகை’ போன்ற எந்தவொரு சிறப்பு திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டாலும், அதில் உதயநிதியின் பங்கும் இருக்கும். அப்படி பார்க்கும்போது, அவர் ஒரு துறைக்கான அமைச்சராக மட்டுமல்லாமல், பல துறைகளிலும் அதிகாரம் கொண்டவராகத் தானே இருக்கிறார். எனவே துணை முதலமைச்சர் என்பது அவருக்கு ஏற்கனவே இருக்கும் அதிகாரத்திற்கான ஒரு அடையாளம் அல்லது அங்கீகாரம் மட்டுமே” என்கிறார்.
இந்தியாவின் பிற மாநில ‘துணை முதலமைச்சர்களுக்கும்’ உதயநிதிக்கு மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்றும் ப்ரியன் கூறுகிறார்.
“மற்ற மாநிலங்களில், அதிகாரப் பகிர்வு என்பது பெயரளவுக்கு மட்டுமே இருக்கும். ஆந்திராவைப் போல ஒரு கூட்டணி கட்சித் தலைவரை சமாதானப்படுத்த அல்லது கர்நாடகாவைப் போல ஒரு கட்சியின் தலைவர்களுக்குள் மோதல் ஏற்படாமல் தடுக்க ‘துணை முதலமைச்சர்’ பதவி வழங்கப்படும். ஆனால், தமிழ்நாட்டில் நிலை அப்படி இல்லை. அதேநேரத்தில், இனி அரசின் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. ஒரு துணை முதலமைச்சராக உதயநிதியின் வருங்கால செயல்பாடுகள், 2026 தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்” என்றும் கூறுகிறார் ப்ரியன்.