புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரையில் வரும் ஜன. 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து விளக்குவதற்காகவும், கிராம மக்களின் பிரச்னைகளைத் தெரிந்துகொள்ளவும் கடந்த 4 மாதங்களாக, தமிழகத்தில் கிராமங்கள்தோறும் சென்றேன். கடந்த மாதத்தில் திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். கிராமங்களில் இருக்கக்கூடிய பிரச்னைகள் அதிர்ச்சி மற்றும் வேதனை அளிக்கக்கூடியதாக இருந்தன. நெல்லை மாவட்டத்தில் தேவேந்திரகுலவேளாளர் மக்கள் வாழும் 60-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாக்கடை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கவில்லை. இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்திலும் 40 சதவீதம் வேளாண் தொழிலில் ஈடுபடும் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு பாசனவசதிக்கு வைகை நதி நீர் கொடுக்கவில்லை.
தேவேந்திர குல வேளாளர்கள், ஆதிதிராவிடர், அருந்ததியர், சிறுபான்மையினர் வாழும் பகுதியில் குடிநீர் வசதி செய்யவில்லை. இவர்கள் திட்டமிட்டு ஊராட்சி மன்றங்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறலாகும். எனவே, இந்த மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரி நவ.20-ம் தேதி நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கிறது. அதேநேரத்தில், இது வெளிப்படையாக இருக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.
எனவே, இந்த பட்டியலை ரத்து செய்ய வேண்டும். இதற்குப் பொறுப்பேற்று துறை அமைச்சர் கே.என்.நேரு பதவி விலகவேண்டும். அதிமுகவில் நடைபெறும் நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன. எங்கள் கட்சி மாநாட்டுக்கு பிறகு, புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு தெளிவுப்படுத்த முடியும். கூட்டணியில் பங்கு பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.