துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவான், செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றும் போது காஷ்மீர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தபோது, அதற்கு அடுத்த மாதம் செப்டம்பரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றும் போது எர்துவான் காஷ்மீரை குறிப்பிட்டுப் பேசினார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து முடிவுக்கு வருவதை எர்துவான் எதிர்த்தார்.
இப்போது காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும், இது ஏன் என்பது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.
துருக்கி அதிபர் எர்துவான் 2019க்குப் பிறகும்கூட, ஐநா பொதுச் சபையில் காஷ்மீர் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வந்தார். பாகிஸ்தானும் அதை வரவேற்றது.
ப்ரிக்ஸ் அமைப்பில் துருக்கியை சேர்க்க எர்துவான் விரும்புவதாகவும், இதற்கு இந்தியாவின் சம்மதம் தேவை என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
ப்ரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம் குறித்துப் பேசப்படும் நிலையில், இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கியின் நிலைப்பாடு குறித்த கேள்விகள்
‘அட்லாண்டிக் கவுன்சில்’ என்ற அமெரிக்க சிந்தனைக்குக் குழுவின் மூத்த உறுப்பினரான வஜாஹத் எஸ் கான், துருக்கியின் நிலைப்பாடு குறித்த ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
அதில், “எர்துவான் தனது ஒவ்வொரு ஐநா பொதுச்சபை உரையிலும் காஷ்மீரை முக்கியமாகக் குறிப்பிடுவார், ஆனால் இந்த முறை பேசவில்லை. அவர் சைப்ரஸை குறிப்பிட்டார், லெபனான் மற்றும் இஸ்ரேல் பிரச்னையை எழுப்பினார். சிரியா பற்றிப் பேசினார். லிபியா குறித்தும் பேசினார், யுக்ரேனையும்கூட அவர் மறக்கவில்லை. ஆனால் காஷ்மீரை மறந்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.
மேலும், “கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீரை குறிப்பிட்டுப் பேசி வந்த ஒரு உலகத் தலைவர் (எர்துவான்) இப்போது காஷ்மீரை புறக்கணித்துள்ளார். துருக்கி, பாகிஸ்தானின் நட்பு நாடு, ஆனால் இப்போது அந்த நட்பு என்ன ஆனது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் கான்.
“மலேசியாகூட காஷ்மீர் பற்றிக் கவலைப்படவில்லை. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்று கூறினார். எர்துவான் தனது 20 நிமிட உரையில் எங்குமே காஷ்மீர் பற்றிக் குறிப்பிடவில்லை” என்றும் கூறுகிறார் கான்.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானி, “பல ஆண்டுகளாக, ஐநா தீர்மானங்கள் மூலம் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து பாகிஸ்தானியர்கள் பேசி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமரைத் தவிர, 193 ஐநா சபை உறுப்பினர்களில் ஒருவர்கூட காஷ்மீர் பற்றிப் பேசவில்லை. காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் உணர்வுகள் எவ்வளவு உண்மையானவை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பல வளைகுடா நாடுகளுக்கு இந்திய தூதராகப் பணிபுரிந்த தல்மீஸ் அகமதுவிடம், “எர்துவான் ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்தார்?” என்று கேட்கப்பட்டது.
காஷ்மீர் குறித்து எர்துவான் பேசாதது ஏன்?
“எர்துவானின் அணுகுமுறை மாறிவிட்டது. முன்பு ‘இஸ்லாமிய அரசியலை’ ஆதரித்து வந்தார். ஆனால் கடந்த பல வருடங்களாக அதிலிருந்து விடுபட்டு வருகிறார். இப்போதெல்லாம் அவர் பிராந்திய பிரச்னைகளை ‘இஸ்லாமிய அரசியல்’ கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பதில்லை” என்று தல்மிஸ் அகமது கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அகமது, “சௌதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நாடுகள் ‘இஸ்லாமிய அரசியலை’ ஆதரிக்கவில்லை. இந்த மூன்று நாடுகளுடனும் எர்துவான் நல்லுறவுகளை அதிகரித்து வருகிறார். இந்த மூன்று நாடுகளுக்கென தனிப்பட்ட கொள்கைகள் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் தனது பழைய அரசியல் பாணியை விட்டு வெளியேற வேண்டும்” என்கிறார்.
“பாகிஸ்தானுடனான நெருக்கத்துக்கும் எர்துவானின் இஸ்லாமிய அரசியல்தான் காரணம். அத்தகைய சூழ்நிலையில் எர்துவான் புதிய அரசியலை நோக்கி நகரும்போது, பாகிஸ்தானும் துருக்கியை விட்டு விலகி நிற்கவே முற்படும்” என்கிறார் அகமது.
காஷ்மீர் குறித்துப் பேசப்படாதது இந்தியாவின் சாதனையா?
ஐநா பொதுச் சபையில் காஷ்மீர் குறித்துப் பேசப்படாதது இந்தியாவின் சாதனையா?
இதற்குப் பதில் கூறிய தல்மீஸ் அகமது, “நான் அதை நம்பவில்லை, ஏனென்றால் இது இந்தியாவுக்கு முக்கியமில்லை. எர்துவான் தனது சொந்த நலன்களுக்காக இதைச் செய்துள்ளார், இந்தியாவுக்காக அல்ல. தற்போதைய இந்திய அரசு உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதுபோன்ற எந்த அறிக்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம் என்பது இந்தியாவின் நிலைப்பாடு” என்கிறார்.
மேலும், “நமது நிலைப்பாடு உள்நாட்டு விவகாரங்கள் சார்ந்ததாக மாறிவிட்டது. இதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. இந்த அணுகுமுறை சரியானது இல்லை. உள்நாட்டுக் கொள்கைக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையே சமநிலையில் இருக்க வேண்டும். வரலாற்றில் நம்முடைய நிலைப்பாடுகள் என்பது சர்வதேச நலன்கள் சார்ந்தே இருந்துள்ளது. எனவே இரண்டையும் நாம் குழப்ப முடியாது” என்கிறார் அகமது.
“கடந்த 2021இல் இருந்து எர்துவான் தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டார். சௌதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நாடுகளுடன் உறவுகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் நம்பினார். அவர்களுக்கு பொருளாதாரம்தான் முக்கியம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சௌதி ஆகியவை, துருக்கிய வங்கிகளில் நிறைய பணத்தை வைத்துள்ளன.
சௌதியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ‘இஸ்லாமிய அரசியலில்’ இருந்து விலகி இருக்கின்றன, அதே பாதையில்தான் துருக்கியும் செல்கிறது” என்று விளக்குகிறார் தல்மீஸ் அகமது.
சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள், ஐநா சபையில் காஷ்மீர் பற்றி எதுவும் பேசவில்லை. மேலும் அவை இந்தியாவுடனான வர்த்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.
காஷ்மீர் குறித்த எர்துவானின் கருத்துகள்
எர்துவான் பல ஆண்டுகளாக ஐநா பொதுச் சபையில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பி வருகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் ஒருவித மென்போக்கையே கடைப்பிடித்து வந்தார்.
எர்துவான் கடந்த ஆண்டு, ஐநா பொதுச் சபையில் உரையாற்றியபோது, காஷ்மீர் பற்றிக் குறிப்பிட்டு, “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தை காரணமாக காஷ்மீரில் அமைதி நிலை உருவானால், அது தெற்காசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும்” என்று கூறியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 77வது பொதுச் சபையில் (2022) உரையாற்றிய எர்துவான், “75 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்த அரசியல் அதிகாரம் கொண்ட இரண்டு நாடுகளாக மாறின. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியும் ஒற்றுமையும் நிறுவப்படவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. காஷ்மீரில் அமைதி நிலைநாட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், பிரார்த்தனை செய்கிறோம்” என்று கூறினார்.
ஆகஸ்ட் 5, 2019 அன்று, அரசியலமைப்பின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது.
அன்று முதல் எர்துவான் காஷ்மீர் பிரச்னையை உலக அரங்கில் எழுப்பி வருகிறார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் குறித்து எர்துவானின் முந்தைய அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்தியா கூறி வருகிறது. துருக்கி, மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று இந்தியா கூறியிருந்தது.
“ஜம்மு காஷ்மீர் முழுவதும் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு இருப்பதாக” 2019இல் எர்துவான் கூறியிருந்தார். 2020இல் “காஷ்மீர் என்பது பற்றி எரியும் ஒரு பிரச்னை” என்றும், “370ஐ நீக்கியது இந்தப் பிரச்னையை மேலும் சிக்கலாக்கியுள்ளது” என்றும் அவர் கூறினார்.
அதுவே 2021இல், “ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்” என கருத்து தெரிவித்தார்.
அதன் பிறகு 2022இல், “காஷ்மீர் பிரச்னை- இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விவகாரம்” என்று விவரிக்கத் தொடங்கினார் எர்துவான்.
காஷ்மீர் தொடர்பான எர்துவானின் நிலைப்பாடு குறித்து, 2022ஆம் ஆண்டில், ‘தி ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனின்’ மூத்த உறுப்பினர் தன்வி மதன் பின்வரும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
“உண்மையில், கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீர் விவகாரத்தில் ஒருவித மென்போக்கையே எர்துவான் கடைப்பிடித்து வருகிறார். இது தவிர, பாகிஸ்தான் பிரதமருடனான செய்தியாளர் சந்திப்பில் காஷ்மீர் பிரச்னைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின்படி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் எர்துவான் கூறியிருந்தார்.”
மோதி அரசும் துருக்கியும்
கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா- துருக்கி இடையிலான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன. பிரதமரான பிறகு, நரேந்திர மோதி மத்திய கிழக்கின் அனைத்து முக்கிய நாடுகளுக்கும் பயணம் செய்தார், ஆனால் துருக்கிக்கு செல்லவில்லை.
அக்டோபர் 20, 2019 அன்று, ஆங்கில நாளிதழான ‘தி இந்து’, “2019ஆம் ஆண்டின் இறுதியில் மோதி துருக்கிக்கு செல்லவிருந்ததாகவும், ஆனால் காஷ்மீர் குறித்த எர்துவானின் நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது” என்றும் ஒரு செய்தியை வெளியிட்டது
அப்போது இந்தியாவுக்கான துருக்கியின் தூதர் சாகிர் ஓஸ்கான், “பிரதமர் மோதி அங்காராவுக்கு (துருக்கியின் தலைநகரம்) வருவார் என்று எங்கள் அரசாங்கம் நம்பிக்கையுடன் இருந்தது. அவரது பயணத்தை துருக்கி எதிர்பார்த்தது மட்டுமின்றி, சமீபத்தில்தான் பேச்சுவார்த்தையும் நடந்தது. இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்றாலும்கூட, இது பற்றி நிச்சயமாக விவாதிக்கப்பட்டது” என்று ‘தி இந்து’ நாளிதழிடம் கூறினார்.
காஷ்மீர் விவகாரத்தில் சீனாவும் இந்தியாவை விமர்சித்ததாகவும் ஆனால் அதன் பிறகுகூட சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்ததாகவும் துருக்கி தூதர் கூறியிருந்தார்.
காஷ்மீர் மற்றும் எஃப்ஏடிஎஃப் (FATF) அமைப்பு குறித்த விஷயங்களில் பாகிஸ்தானுக்கு துருக்கி அளித்த ஆதரவும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட முக்கியக் காரணம்.
வடக்கு சிரியாவில், குர்துகள் மீது துருக்கி தாக்குதல்களைத் தொடங்கியபோது, இந்தியாவும் துருக்கியை விமர்சித்து, “இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று கூறியது.
துருக்கியின் ‘அனடோலு கப்பல் கட்டும் தளத்தில்’ இந்தியாவிற்கான கடற்படை உதவிக் கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்தது. காஷ்மீர் மற்றும் எஃப்ஏடிஎஃப் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் துருக்கி நிற்பதற்குப் பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கம் காணப்பட்டது. துருக்கியில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்தியா உதவியது.
பாகிஸ்தான்-துருக்கி இடையிலான நட்பு
பாகிஸ்தானுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாகவே உள்ளது. இரு நாடுகளும், இஸ்லாமிய உலகில் ‘சன்னி இஸ்லாமியர்கள்’ ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாக உள்ளன. எர்துவான் எப்போதும் பாகிஸ்தானுடன் நல்லுறவையே கொண்டுள்ளார்.
ஜூலை 2016இல் துருக்கியில் எர்துவானுக்கு எதிரான ராணுவப் புரட்சி தோல்வியடைந்தபோது, பாகிஸ்தான் வெளிப்படையாக எர்துவானை ஆதாரித்தது. அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், தொலைபேசி வாயிலாக எர்துவானை தொடர்புகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் ஷெரீஃப் துருக்கிக்கும் விஜயம் செய்தார். அதன் பின்னர் எர்துவானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டன.
துருக்கி, 2017 முதல் இதுவரை பாகிஸ்தானில் ஒரு பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. துருக்கி, பாகிஸ்தானில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு ‘மெட்ரோபஸ் ரேபிட் டிரான்ஸிட்’ அமைப்பையும் வழங்கி வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட ‘தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ தொடர்பான பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும்கூட எர்துவானை பாராட்டி வருகிறார்.
பிப்ரவரி 2020இல், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவான் பாகிஸ்தானுக்கு சென்றபோது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘துருக்கியர்கள் இந்தியாவை 600 ஆண்டுகள் ஆண்டதாக’ ஒரு செய்தியாளர் சந்திப்பில் பெருமையுடன் கூறினார்.
“உங்கள் வருகையால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். ஏனென்றால் துருக்கியுடன் எங்களுக்குப் பல நூற்றாண்டுகளாக உறவு உள்ளது. துருக்கியர்கள் இந்தியாவை 600 ஆண்டுகள் ஆண்டனர்” என அப்போது இம்ரான் கான் கூறியிருந்தார்.