முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 471 நாட்களைச் சிறையில் கழித்த நிலையில், பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பிணை கிடைத்துள்ளது.
அவர் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட முயற்சிகள் எப்படியிருக்கும், வழக்கின் நகர்வுகள் எந்தத் திசையில் இருக்கும் என்பது பற்றிய விவாதங்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.
அது ஒருபுறமிருக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் வெளியில் வந்திருப்பது, திமுகவினரிடையே குறிப்பாக கோவை மண்டல திமுகவினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை வெளிப்படுத்தும் விதமாக, கோவை, கரூர் உள்ளிட்ட மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அக்கட்சியினர், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனால் இது தற்காலிகமான ஆசுவாசம்தான், இந்த வழக்கிலிருந்து செந்தில் பாலாஜியால் தப்பவே முடியாது என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம்.
இதற்கு முற்றிலும் முரணாக, ‘‘உதயநிதி துணை முதலமைச்சராகக் காத்திருக்கிறார், மோதியை ஸ்டாலின் சந்திக்கிறார், செந்தில் பாலாஜி பிணையில் வெளியே வந்துள்ளார். இந்த மூன்றையும் நாங்கள் இணைத்துப் பார்க்கிறோம்” என்கிறார் அதிமுக செய்தித் தொடர்பாளர் சத்யா.
செந்தில் பாலாஜி சிறைக்குச் செல்லும்போது அமைச்சராக இருந்தார். ஆனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘ஒரு சாதாரண அரசுப் பணியாளர் 48 மணிநேரத்திற்கு மேல் சிறையில் இருந்தால் இடைநீக்கம் செய்யப்படுகிறார்’ என்பதைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியன்று அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது.
இந்நிலையில், அவர் வெளியில் வந்ததும் மீண்டும் அமைச்சராவாரா என்ற எதிர்பார்ப்பும் கோவை திமுகவினரிடம் எழுந்துள்ளது.
கோவையில் திமுகவுக்கு கிடைத்த பலன்கள்
கோவையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில், 10 தொகுதிகளிலும் திமுக தோல்வியைத் தழுவியது. அதிமுக கூட்டணி, அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியது. ஜெயலலிதா இருந்தபோதும்கூட, 2011 சட்டமன்றத் தேர்தலில் பத்தில் ஒரு தொகுதியில் திமுக வென்ற நிலையில், அவர் மறைவுக்குப் பின், கோவை மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தோற்றதால், மாநிலத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தும், கோவை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போனது.
அதனால் மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு, இருவருக்கும் பதிலாக, அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியிடம் கோவை மாவட்டத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
அந்தத் தேர்தலில் கோவை மாநகராட்சி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகராட்சிகள் உட்படப் பெரும்பான்மையான நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளை திமுக கைப்பற்றியது. அதற்குப் பிறகே, செந்தில் பாலாஜி சிறை சென்றார். தற்போது கோவை மாவட்டத்துக்கான பொறுப்பாளராக அமைச்சர் முத்துசாமி இருக்கிறார்.
செந்தில் பாலாஜி வருகை திமுகவுக்கு வலு சேர்க்குமா?
சிறைக்குள் செந்தில் பாலாஜி இருந்தபோது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வென்றபோதிலும், கோவை தொகுதியில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலையை வென்றது பெரிதும் பேசப்பட்டது.
அதிலும் வேட்பாளர் தேர்வு உட்பட தேர்தல் பணிகளில் செந்தில் பாலாஜியின் பரிந்துரையும், ஆலோசனையும் இருந்ததாக, தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பின், கோவை திமுகவினரே சமூக ஊடகங்களில் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், “அவருடைய மீள் வருகை, மேற்கு மண்டலத்துக்கு, குறிப்பாக கோவை திமுகவுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்குமென்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கிறார்,” கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார்.
‘‘கடந்த உள்ளாட்சித் தேர்தலில், கோவையில் திமுகவுக்கு அசாத்தியமான வெற்றியைத் தேடித் தந்ததில் செந்தில் பாலாஜியின் பங்களிப்பு மகத்தானது. நீண்ட இடைவெளிக்குப் பின், அவர் மீண்டும் வந்திருப்பது, கோவைக்கு மட்டுமின்றி மேற்கு மண்டலம் முழுவதுமே திமுகவுக்கு மிகப்பெரிய எழுச்சியைத் தரும்” என்கிறார் அவர்.
“கடந்த இரண்டு தேர்தல்களிலும் திமுக மகத்தான வெற்றியைப் பெற்றது போலவே, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அவரது வருகை, நல்ல துவக்கமாக இருக்கும். கோவையின் மீது முதல்வர் ஸ்டாலின் தனி அக்கறை காட்டி வரும் நிலையில், இங்கு செந்தில் பாலாஜி களத்தில் இருந்து பணி செய்யும்போது, பெரும் பக்கபலமாக இருப்பார். அவர் மீண்டும் அமைச்சராவார் என்ற எதிர்பார்ப்பும் எல்லாத் தரப்பிலும் எழுந்துள்ளது. அது நிச்சயமாக நடக்குமென்று நம்புகிறோம்’’ என்று கோவை எம்.பி. ராஜ்குமார் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக முடியுமா?
ஆனால் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு, சட்டரீதியாகவோ அல்லது அரசியல்ரீதியாகவோ கடும் எதிர்ப்புகள் கிளம்பும் என்ற கருத்து, சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இப்போதைய நிலையில், அவர் நாளையே அமைச்சராகப் பதவியேற்க எந்தத் தடையுமில்லை என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
‘டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கியபோது, முதலமைச்சர் அலுவலகத்துக்கே போகக்கூடாது என்பது உட்பட 5 நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்தது. ஆனால் செந்தில் பாலாஜிக்கு அதுபோன்ற எந்த நிபந்தனைகளும் இல்லை என்பதால், அவர் நாளையே அமைச்சராகப் பதவி ஏற்கலாம் என்றார் அவர்.
மேலும், “இந்த வழக்கில் தண்டனை பெற்றால் மட்டுமே செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வதில் சிக்கல் ஏற்படும்’’ என்றார்.
செந்தில் பாலாஜியின் வருகை, கோவை மண்டல திமுகவுக்கு பெரும் பலம் சேர்க்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று கூறும் ராதாகிருஷ்ணன், ‘‘எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணிக்கு நிகராக கோவை மண்டலத்தில் அரசியல் செய்வதற்கு செந்தில் பாலாஜிதான் சரியான நபர் என்பது ஏற்கெனவே அரசியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவரின் வருகை கோவை திமுகவுக்கு நிச்சயமாக வலு சேர்க்கும்,” என்று குறிப்பிடுகிறார்.
எல்லாவற்றையும்விட, செந்தில் பாலாஜியின் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி இருப்பதாகக் குறிப்பிடும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், “பாரதிய ஜனதா அரசு அல்லது வேறு எந்தத் துறை எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், திமுகவை சேர்ந்தவரைக் கைவிட மாட்டேன் என்பதை ஸ்டாலின் உணர்த்தியிருப்பதாக” கூறுகிறார்.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதில் சட்டப்பூர்வமாக எந்தத் தடையுமில்லை என்று சொல்லும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘‘அவரை மீண்டும் அமைச்சராக்குவது குறித்து, முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்.’ என்றார்.
அவருடைய வருகை, கோவை மண்டல திமுகவுக்கு எந்தவிதத்தில் பலம் சேர்க்குமென்று நினைக்கிறீர்கள் என்று அவரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ‘‘திமுகவின் வெற்றிக்கு அவருடைய உழைப்பு நிச்சயம் தேவை. அது கண்டிப்பாகப் பயன்படும். அவரின் உழைப்பு பெரிதும் மதிக்கத்தக்கது. அது கோவை மண்டலத்துக்கு வலு சேர்த்தது என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனால் திமுகவை பொறுத்தவரை, எந்தத் தனிநபரையும் நம்பி இருக்கவில்லை. எம்ஜிஆர் இந்த இயக்கத்தைவிட்டுப் போனபோதே, கவலைப்பட்டதில்லை. இது ஓர் இயக்கம், இங்கே எல்லாமே கூட்டு முயற்சிதான். அவருடைய வருகை, கூடுதல் பலம்தான்’’ என்றார்.
இது திமுக, பாஜக இணக்கத்தின் அறிகுறியா?
ஆனால் இது தற்காலிகமான ஆசுவாசம்தான், இந்த வழக்கிலிருந்து செந்தில் பாலாஜியால் தப்பவே முடியாது என்கிறார் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘இந்த வழக்கில், இவர்கள் என்ன வாதம் வைத்தாலும் அது இறுதியில் எடுபடாது,” எனக் கூறுகிறார் முருகானந்தம்.
மேற்கொண்டு பேசியபோது, ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சி ஏற்பட்டு வருவதாகக் கூறிய அவர், “தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் தப்பிவிட முடியாது. நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி விடுதலையானாலும் மக்கள் மன்றத்தில் தப்பவே முடியாது. பிணையில் வந்ததை வழக்கிலிருந்தே விடுதலை பெற்றதைப் போலக் கொண்டாட திமுகவினரால் மட்டுமே முடியும்’’ என்றார்.
இதற்கு முற்றிலும் முரணாக, இந்தப் பிணைக்குப் புதியதொரு கோணத்தில் காரணத்தை விளக்குகிறார், அதிமுக செய்தித் தொடர்பாளர் சத்யா.
பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், ‘‘உதயநிதி துணை முதல்வராகக் காத்திருக்கிறார், மோதியை ஸ்டாலின் சந்திக்கிறார், செந்தில் பாலாஜி பிணையில் வெளியே வந்துள்ளார். இந்த மூன்றையும் நாங்கள் இணைத்துப் பார்க்கிறோம்,” என்கிறார் சத்யா.
இரண்டு முறை பெரும்பான்மையுடன் இருந்த பாரதிய ஜனதா, இந்தமுறை போதிய பலம் இல்லாமல் தவிப்பதாகக் கூறிய அவர், பாஜக அதனால் யார் மீது பத்து ஆண்டுகளாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியதோ, அவர்களிடமெல்லாம் ஒருவித இணக்கத்தைக் காண்பித்து வருவதாகத் தனது கருத்தை முன்வைத்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு