• Fri. Nov 14th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் நவ.16 முதல் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் | Heavy rains in Tamil Nadu for 3 days from tomorrow Meteorological Department

Byadmin

Nov 14, 2025


சென்னை: தமிழகத்தில் நவ.16 முதல் 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பாவது: தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (நவ.15) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 16 முதல் 19-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 20, 21 தேதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 16-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், 17-ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், 18-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 15, 16 தேதிகளில் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 7 செமீ, நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட், ராமநாதபுரம், பாம்பன் ஆகிய இடங்களில் தலா 5 செமீ, நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி), செங்கம் (திருவண்ணாமலை) தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது’ இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



By admin