0
சைனீஸ் தாய்ப்பே தேசத்தில் அமைந்துள்ள தாய்ப்பே நகரில் வார இறுதியில் நடைபெற்ற தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி உட்பட இரண்டு பதக்கங்களை இலங்கை வென்றெடுத்தது.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானி லேக்கம்கே வெள்ளிப் பதக்கத்தையும் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சமோத் யோதசிங்க வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் 56.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த டில்ஹானி லேக்கம்கேவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. ஆனால், அவரது தூரப் பெறுதி திருப்திகரமாக அமையவில்லை. 2023இல் அவர் நிலைநாட்டிய 61.57 மீற்றர் என்ற தேசிய சாதனையை அவரால் இந்தப் போட்டியில் நெருங்க முடியாமல் போனது.
இப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு இராணி (56.82 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும் சைனீஸ் தாய்ப்பே வீராங்கனை பின் சுன் சூ (53.03 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.38 செக்கன்களில் சமோத் யோதசிங்க நிறைவு செய்து மூன்றாம் இடத்தைப் பெற்றார். முதலாவது தகுதிகாண் சுற்றை 10.29 செக்கன்களில் சமோத் யோதசிங்க நிறைவு செய்திருந்த போதிலும் இறுதிப் போட்டியில் அவரது நேரப் பெறுதி 3ஆவது இடத்தையே பெற்றது.
இப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஜோசப் அயோத் (10.34 செக்.) தங்கப் பதக்கத்தையும் ஜப்பானின் ப்ரோனோ டெடே (10.36 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குபற்றிய இலங்கையின் லெசந்து அர்த்தவிது 2.05 மீற்றர் உயரத்தைத் தாவி கடைசி இடமான 6ஆவது இடத்தைப் பெற்றார்.