- எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்ததாக எழுந்த சர்ச்சை பூதாகரம் ஆகியுள்ளது.
தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) அளித்த அறிக்கையில், லட்டு பிரசாதத்தின் ‘எஸ் மதிப்பில்’ (S value) வேறுபாடு இருந்ததால், தரம் குறித்து சந்தேகம் எழுந்ததாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
‘எஸ் மதிப்பு’ என்றால் என்ன? தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் வேறு என்ன உள்ளது?
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் பணிபுரியும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) துணை இயக்குநர் மட்ட அதிகாரிகளிடம் பிபிசி பேசியது.
அவர்கள் அளித்த விவரங்கள்…
‘S-Value’ என்றால் என்ன?
S-மதிப்பு என்பது நெய்யில் உள்ள கொழுப்பின் தரத்தைக் கண்டறியும் ஒரு ரசாயன சோதனை.
இங்கே S என்பது ‘standard’ என்ற வார்த்தையைக் குறிக்கிறது.
ஐ.எஸ்.ஓ (ISO) விதிமுறைகளின்படி, எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் மற்றும் பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் ஆகியவை வெவ்வேறு S-மதிப்புகளைக் கொண்டுள்ளன.
எனவே இந்த இரண்டுக்கும் ஒரே மாதிரியான சமன்பாடுகளைக் கொண்டு S-மதிப்பைக் மதிப்பிடக் கூடாது.
பசும்பால் மற்றும் எருமைப்பால் நெய்யின் தரம் தூய்மையானதா என்பதை கேஸ் லிக்விட் குரோமடோகிராபி (Gas Liquid Chromatagraphy – GLC) கருவி மூலம் துல்லியமாகத் தீர்மானிக்க முடியும்.
நெய்யில் தாவர எண்ணெய்கள், விலங்குகளின் கொழுப்புகள் மற்றும் மினரல் எண்ணெய்கள் போன்ற கலப்படங்கள் உள்ளனவா என்பதை கண்டறிய இது மிகவும் துல்லியமான முறை.
தூய்மையான நெய்யில் உள்ள கொழுப்புகளின் சதவீதம் 98.05% முதல் 104.32%-க்கு இடையில் இருந்தால், அது S- மதிப்பைப் பூர்த்தி செய்கிறது என்று அர்த்தம்.
குறிப்பிட்ட வரம்பில் ஏதேனும் சிறிய வித்தியாசம் இருந்தால், நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அதனால்தான் நெய்யில் உள்ள கொழுப்பை அளவிடுவதற்கான நிலையான மதிப்பாக எஸ்-மதிப்பு கணக்கிடப்படுகிறது.
எஸ்-மதிப்பு ஐந்து வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு வகையான கலப்படத்தைக் குறிக்கிறது.
இந்த சோதனைகள் அனைத்தும் ISO 17678:2010 என்ற தரநிலையின்படி மேற்கொள்ளப்படுகின்றன.
கலப்பட நிலைகள்
- S-மதிப்பு வரம்பு 98.05-104.32 – இதுதான் மொத்த S-மதிப்பு என்று அழைக்கப்படுகிறது.
- S2-மதிப்பு 98.05 – 101.95 இடையே இருப்பது – S-மதிப்பு இந்த வரம்பிற்குள் வரவில்லை என்றால், நெய்யில் சோயாபீன், சூரியகாந்தி, உளுந்து விதைகள், கோதுமை மாவு, சோள மாவு, பருத்தி மற்றும் மீன் எண்ணெய்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
- S3-மதிப்பு 99.42 – 100.58 இடையே இருப்பது – நெய்யில் இந்த மதிப்பு அதிகமாக இருந்தால், அதில் தேங்காய் அல்லது பனை கொழுப்பு (பனை எண்ணெயில் இருந்து கிடைப்பது) உள்ளது என்று அர்த்தம்.
- S3-மதிப்பு 95.90 – 104.10 ஆக இருப்பது – அந்த மதிப்பை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும், நெய்யில் கலக்கப்பட்டிருக்கும் பாமாயிலின் அளவு கணக்கிடப்படும்.
- S5-மதிப்பு 97.96 – 102.04 க்கு இடையில் இருப்பது – இந்த அளவுக்கு அதிகமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும், அதில் பன்றிக்கொழுப்பு உள்ளது என்று அர்த்தம்.
நெய்யின் தரத்தை நிர்ணயிக்கும் சோதனைகள்
மேலும் சில சோதனைகள் மூலமும் நெய்யில் கலப்படம் உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய முடியும். ஆனால் இவை அனைத்தும் ஆய்வகத்தில் செய்யப்பட வேண்டும். 50 முதல் 55 சோதனைகள் மூலம் நெய்யின் தரம் அல்லது அதில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்பதை அறிய முடியும்.
குறிப்பாக, கேஸ் லிக்விட் குரோமடோகிராபி சோதனை மூலம் நெய்யில் கலப்படம் இருக்கிறதா என்பதைத் துல்லியமாகத் தீர்மானிக்க முடியும்.
நெய்யின் தரம் குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) அறிக்கையில் உள்ள சில முக்கியமான சோதனைகளை தெரிந்து கொள்வோம்.
- Baudouin சோதனை – நெய்யில் எள் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.
- Reichert – Meissl மதிப்பு (RM மதிப்பு) – கொழுப்பு அமிலங்களை (அசிட்டிக் அமிலம், புரோபியோனிக் அமிலம், ப்யூட்ரிக் அமிலம், வலேரிக் அமிலம், கேப்ரோயிக் அமிலம்) அளவிட பயன்படுகிறது.
- Milk fat – பாலில் உள்ள கொழுப்பின் சதவீதத்தை தீர்மானிக்கிறது.
- அயோடின் சோதனை – உருகிய நெய்யில் சில துளிகள் அயோடின் சேர்க்கப்படும் போது, அது நீலம் அல்லது ஊதா நிறமாக மாறினால், அது கலப்பட நெய் என்று அர்த்தம். அதில் மாவுச்சத்து சேர்க்கப்பட்டுள்ளது என்பதைத் தீர்மானிக்க முடியும். தூய்மையான நெய் அயோடினுடன் வினைபுரியாது.
- சப்போனிஃபிகேஷன் மதிப்பு (Saponification Value) – சப்போனிஃபிகேஷன் மதிப்பை அறிந்து கொள்வதன் மூலம், நெய்யில் ‘சோப்பு’ போன்ற கடினத்தன்மை உள்ளதா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
தூய நெய் vs கலப்பட நெய் – என்ன வேறுபாடு?
தூய்மையான நெய்: எருமை மற்றும் பசுக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
கலப்பட நெய் : காய்கறி (சோயாபீன், பாமாயில், சூரியகாந்தி) எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. விலங்குக் கொழுப்புகள், அல்லது நிறம் மற்றும் சுவைக்காகச் சேர்க்கப்படும் செயற்கைப் பொருட்கள் கொண்டும் தயாரிக்கப்படுகிறது.
பாலில் இருந்து வெண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு, அதிலிருந்து தூய்மையான நெய் தயாரிக்கப்படுகிறது.
கலப்படம் செய்யப்பட்ட நெய், தாவர எண்ணெய்கள் மற்றும் விலங்குகளின் கொழுப்புகள் மற்றும் செயற்கை வண்ணங்கள் மற்றும் சில ரசாயனங்கள் (preservatives) கொண்டு தயாரிக்கப்படுகிறது.
தூய நெய்யின் நிறம்: தங்க மஞ்சள் முதல் வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
கலப்பட நெய்யின் நிறம்: அசல் நெய்யை விட வெளிர் அல்லது அடர் நிறமாக இருக்கும்.
தூய்மையான நெய்யின் வாசனை: சர்க்கரை பாகு (கேரமல்) போன்ற வாசனையைக் கொண்டிருக்கும்.
கலப்பட நெய்யின் வாசனை: செயற்கை வாசனையை கொண்டிருக்கும்.
தூய்மையான நெய்யின் சுவை: தயிரில் செய்யப்பட்ட இனிப்பு போல் இருக்கும்.
கலப்பட நெய்யின் சுவை: கொஞ்சம் கசப்பான உணர்வைத் தரும். அழுகிய பொருள் அல்லது எண்ணெய்ப் பசையைச் சாப்பிடுவது போல் இருக்கும்.
தூய்மையான நெய்: தொடுவதற்கு மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.
கலப்பட நெய்: எண்ணெய்களைத் தொடுவது போன்ற உணர்வை கொடுக்கும்.
தூய நெய்யின் வாழ்நாள்: 6 மாதங்கள் (குறைந்த ஈரப்பதத்தின் காரணமாக).
கலப்பட நெய்: 3 மாதங்கள் வரை மட்டும் இருக்கும் (அதிக ஈரப்பதம் காரணமாக).
சுத்தமான நெய்யின் ஊட்டச்சத்து மதிப்பு: இதில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே நிறைந்துள்ளன.
கலப்பட நெய்யின் ஊட்டச்சத்து மதிப்புகள்: ஊட்டச்சத்து மதிப்பு இல்லாததுடன். ரசாயனங்கள் சேர்ப்பதால் உடல் நலத்துக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படுத்துகிறது.
கலப்பட நெய்யை வீட்டிலேயே கண்டறிவது எப்படி?
இந்தியாவில் நெய் பயன்படுத்தும் குடும்பங்கள் அதிகம். அதன் தரத்தை வீட்டிலேயே சோதிக்க சில வழிகள் உள்ளன.
- ஒரு பாத்திரத்தில் சூடாக்கும் போது நெய் மஞ்சள் நிறமாக மாறினால் அது கலப்பட நெய்.
- உள்ளங்கையில் சிறிதளவு நெய்யை வைத்தால், அது உருகி, அல்லது வாசனை வரவில்லை என்றால், அது கலப்பட நெய்.
- சுத்தமான நெய் மென்மையாக இருக்கும்.
- சுத்தமான நெய்யை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலக்கும் போது அது கரைந்துவிடும். அப்படியில்லாமல் நெய் மிதந்தாலோ அல்லது உறைந்தாலோ அது கலப்பட நெய் என்றே கருத வேண்டும்.
- கலப்பட நெய் கசப்பான சுவையில் இருக்கும். கலப்பட நெய்யை ஃப்ரிட்ஜில் வைத்தால் உறையாது.
நெய்யில் பல வழிகளில் கலப்படம் செய்கிறார்கள். இப்படிக் கலப்படம் செய்யப்பட்ட நெய்யை மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களில் உட்கொள்வது ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். இதய நோய் தொடங்கி புற்றுநோய் வரை வாய்ப்பு உள்ளது. கலப்பட நெய்யை பயன்படுத்துவதால் ஒவ்வாமையும் அதிகம் ஏற்படுகிறது.