24
ஆண்டுதோறும் கிளி மக்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் மாரத்தான் ஓட்டம், இவ்வாண்டும் மிகச் சிறப்பாக நடைபெற்றது
ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பரோவில் நேற்று சனிக்கிழமை (மே 23) எடின்பரோ மாரத்தான் விழா 2026 நடைபெற்றது. இந்த விளையாட்டு நிகழ்வில், மனிதாபிமானப் பணிகளை முன்னிறுத்தி, கிளி மக்கள் அமைப்பு (Kili People) மற்றும் JMFOA ஆகிய அமைப்புகள் கைகோர்த்துப் பங்கேற்றன.
“இன்று கற்போம், நாளை வழிநடத்துவோம்” (Learn Today Lead Tomorrow) மற்றும் “பசுமை உலகை நோக்கி” (Go Green Globe) ஆகிய வாசகங்களுடன் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை இவ்வமைப்புகள் முன்னெடுத்தன.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆரம்பகாலக் கண்டறிதல் (Cancer Prevention & Early Detection) தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அதற்காக நிதி சேகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இந்த ஓட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த மனிதாபிமானப் பணியில் கிளி மக்கள் அமைப்பு சார்பாக 125க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இவ் விளையாட்டு நிகழ்வில், 10 கி.மீ மற்றும் 5 கி.மீ தூரங்களைக் கொண்ட ஓட்டப் பந்தயங்கள் நடத்தப்பட்டன.
பெருந்திரளான பங்காளர்களுடனும், தன்னார்வலர்களின் எழுச்சியுடனும் இந்த மனிதாபிமான ஓட்டம் இனிதே நிறைவு பெற்றது. புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காகப் புலம்பெயர் சமூகத்தினர் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
