• Mon. Sep 30th, 2024

24×7 Live News

Apdin News

பெண்களின் ஆரோக்கியம்

Byadmin

Sep 30, 2024


பெண்களின் உடல் மற்றும் உணர்வு நலத்தைப் பாதிக்கும் நோய்களையும் சூழலையும் கண்டறிந்து அதற்கான சிகிச்சையில் கவனம் செலுத்தும் மருத்துவத்தின் ஒரு கிளையையே பெண்களின் ஆரோக்கியம் என்பது குறிக்கிறது.

மனிதகுல நலத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் நலம்பயக்கும் ஒரு காரணியே ஆரோக்கியம்.

தற்போது இந்தியப் பெண்கள் எண்ணற்ற சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது. சுகாதாரத்தைப் பேணுவதில் குறுக்கிடும் பால், வர்க்க, இன வேறுபாடுகளைக் களைவதின் மூலம் கிடைக்கும் தரமான மனித மூலதனம், அதிக சேமிப்பு, முதலீடு ஆகியவற்றால் பொருளாதார நன்மைகளை அடையமுடியும்.

பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் என்ன?

ஊட்டச்சத்தின்மை, தாய்நலக் குறைவு, எய்ட்ஸ், மார்பகப் புற்று போன்ற நோய்கள், வீட்டு வன்முறை போன்ற பல பிரச்சினைகளை இந்தியப் பெண்கள் சந்திக்கின்றனர்.

ஊட்டச்சத்தின்மை

சத்துணவு ஒருவருடைய மொத்த ஆரோக்கியத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. ஊட்டச்சத்தின்மையால் மனநலமும் உடல்நலமும் பெரும்பாதிப்பை அடைகின்றன.

இந்தியா, வளர்ந்து வரும் நாடுகளில், அதிக அளவு சத்துணவற்ற பெண்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகும். ஆரம்ப வளரிளம் வயதினரில் இருபாலரும், ஏறத்தாழ ஒரே அளவிலேயே சத்துணவு உட்கொள்ளுகின்றனர். ஆனால் வளர்ந்த பின் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைகிறது.

தாய்க்கு ஊட்டச்சத்தின்மையோடு தாய் இறப்பு விகிதமும், குழந்தைகளின் பிறப்புக் குறைபாடுகளும் இணைந்துள்ளன. ஊட்டச்சத்தின்மைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பலன் ஏற்படும்.

தாய்நலக் குறைபாடு

தாய்நலக் குறைபாடே தாய்க்கும் குழந்தைக்கும் பொருளாதார தாழ்வுநிலையை ஏற்படுத்துகிறது.

தாயின் உடல்நலக்குறைவு குழந்தையின் நலத்தையும், பொருளாதார செயல்பாட்டில் தாய் பங்கு கொள்ளும் திறனையும் பாதிக்கிறது. இதனால் இந்தியா முழுவதும் தாய் நலத்தைப் பேண தேசிய ஊரக சுகாதார இயக்கம், குடும்ப நலத் திட்டம் போன்ற தேசிய சுகாதாரத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த இருபதாண்டுகளில் இந்தியா வியத்தகு வளர்ச்சியை அடைந்திருந்தாலும், பல வளர்ந்து வரும் நாடுகளோடு ஒப்பிடும் போது மகப்பேறு மரண விகிதம் அதிக அளவிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. பொருளாதார ஏற்ற தாழ்வுகளும், தாய்நலம் பேணலை அடைவதில் குறுக்கிடும் கலாச்சார தடைகளுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.

எனினும், மகப்பேற்று மரணம் இந்தியா முழுவதிலுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலோ ஒரே மாதிரியாக இல்லை. போதுமான அளவுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதால் நகர்ப்புறங்களில் மகப்பேறு மரணவிகிதம் குறைவாக உள்ளது. கல்வி மற்றும் வளர்ச்சி விகிதம் கூடுதலாக உள்ள மாநிலங்களில் தாய்நலம் சிறப்பாகவும் குழந்தை இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது.

தற்கொலை

தற்கொலை இந்தியாவின் ஒரு முக்கியப் பிரச்சினையாகும். இந்தியாவின் தற்கொலை விகிதம் வளர்ச்சி பெற்ற நாடுகளை விட ஐந்து மடங்கு அதிகமாகும். ஆண்களை விட அதிக அளவில் பெண்களே தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தற்கொலைக்கான முக்கிய காரணங்கள் பின்வருவனவற்றுடன் நேரடித் தொடர்புடையது:

மனவழுத்தம்
மனக்கலக்கம்
பாலியல் பாரபட்சம்
வீட்டு வன்முறை
பாலியல் மற்றும் தொழில் ரீதியாக பெரும் பாரபட்சங்களை எதிர்கொள்ளும் இந்தியப் பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகமாகும்.

வீட்டு வன்முறை

வீட்டு வன்முறை இந்தியாவில் ஒரு பெரும் பிரச்சினையாகும். பெண்களுக்கு எதிரான உடல், உள, பாலியல் வன்முறையே வீட்டு வன்முறை என வரையறுக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் காணப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு இதனை ஒரு மறைமுகத் தொற்றுநோய் எனப் பார்க்கிறது.

மத்திய வருவாய்ப் பெண்களை விட ஏழைப் பெண்களே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.

பணிச்சூழலில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர்?
வேலை செய்தலும், பணியமர்த்தமும் வெவ்வேறு பாலினத்துக்கு வெவ்வேறு விதமாக உள்ளது. வேலை செய்யும் பல பெண்களுக்குத் தொற்று, வன்முறை, தசையெலும்பு காயங்கள், உழைக்கும் சக்தி இழத்தல் போன்ற அபாயங்கள் உள்ளன. பொதுவாக ஆண்களைவிட பெண்களே, அதிலும் குறிப்பாகப் பரம்பரைத் தொழில் அல்லாத பிற தொழில்களில், பாரபட்சத்தையும் கொடுமையையும் அனுபவிக்கின்றனர்.

20 அல்லது 30 வயது பெண்களுக்கு மருத்துவ சோதனை
எடை பார்த்தல்: எடை கூடுதலினால் பிற்கால வாழ்க்கையில் பலவிதமான நோய்கள் உண்டாகும் ஆபத்து இருப்பதால் அடிக்கடி எடை பார்ப்பது அவசியம்.

இரத்த அழுத்தம்: எளிதாகவும், விரைவாகவும் அதிக செலவின்றியும் அளக்கலாம்.

கொழுப்பின் அளவு: கொழுப்பின் அளவையும் சோதித்துப் பார்க்க வேண்டும். 20 வயதுக்கு மேற்பட்ட எவரும் தங்கள் கொழுப்புச்சத்து எண்ணைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை சோதனை செய்யவும் வேண்டும்.

பெண்களுக்கு மட்டும்: மார்பக, இடுப்பு மற்றும் மார்புக் காம்பு சோதனை. மார்பக மற்றும் 10 நிமிடம் அசௌகரியத்தை அளிக்கும் இடுப்பு சோதனைகளால் பெரும் நன்மைகள் விளையும். புற்று நோயில் இருந்தும் மலட்டுத் தன்மையை விளைவிக்கும் நோய்களில் இருந்தும் காக்கும். முன்னர் அசாதாரணமான மார்புக் காம்புகள் இருந்திருந்தால் மருத்துவர் ஆலோசனையுடன் மார்புக்காம்பு சோதனை செய்யவும். அசாதாரணமான மார்புக்காம்பு இல்லையென்றால் ஓராண்டுக்குப் பதிலாக மூன்றாண்டுக்கு ஒருமுறை இப்பரிசோதனை செய்யலாம்.

கண்களைப் பாதுகாத்தல்: இதைப்பற்றி சிந்திக்காமல் இருந்திருந்தாலும், நாற்பது வயதுக்குப் பின், கண் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

நோய்த்தடுப்பைப் பரிசோதித்தல்: எடுக்காமல் விட்ட தடுப்பு மருந்தை உடனடியாக உட்கொள்ளவும்.

40 வயது பெண்களுக்கு மருத்துவ சோதனை

இரத்த சர்க்கரை: பல்லாண்டுகளாகத் தவறான உணவை உட்கொள்வதாலும் (காபி, தின்பண்டங்கள், வறுவல்கள் போன்றவை) எடை கூடுதலாலும் (பெரும்பாலும் இயக்குநீர் மாற்றங்களால்) கணையம் அதிகப்படியான வேலையைச் செய்திருக்கக்கூடும். 45-வது வயதில் இரத்த சர்க்கரை அளவைச் சோதிக்க வேண்டும்; பின் குறைந்தபட்சம் மூன்றாண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து சோதிக்க வேண்டும்.

மார்புப் பரிசோதனையும் மார்பூடுகதிர் சோதனையும்: வீட்டில் மார்பகப் பரிசோதனை தொடர்ந்து செய்து வந்தாலும் மருத்துவர் ஆண்டுக்கு ஒருமுறை சோதனை செய்ய வேண்டும். 40 வயதுக்கு மேல் முலையூடுகதிர் சோதனை செய்ய வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இரத்த அழுத்தம்: பொதுவாக வயதுக்கு ஏற்ப இரத்த அழுத்தமும் அதிகரிக்கக் கூடும். நல்ல வேளையாக ஒருவர் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தியானம் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

எடை அளத்தல்: எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிக முக்கியமானது. ஏனெனில் அதிக எடையால் நீரிழிவு, இதய நோய்கள் போன்ற பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இடுப்பு மற்றும் முலைக்காம்பு சோதனை: உடலுறவில் செயல்திறனுடன் இருக்கும் ஒரு பெண் குறிப்பாக இச்சோதனை செய்து கொள்ள வேண்டும். மச்சங்கள் இருப்பதைச் சோதித்தல்: அசாதாரணமான மச்சங்கள் அல்லது தோல் மாற்றங்கள் புற்று நோய் அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம்.

கண்களைப் பாதுகாத்தல்: கணினியில் படித்தலும் வேலைபார்க்கவும் பிரச்சினையாக உள்ளதா? இது வழக்கத்துக்கு மாறானதல்ல. 40 வயதுக்கு மேல் ஈராண்டுக்கு ஒருமுறை 60 வயது வரை வெள்ளெழுத்து, கண்ணழுத்த நோய் போன்ற பொதுவான பிரச்சினைகளுக்காக கண்களை சோதித்து வரவேண்டும்.

முறையாகத் தடுப்பு மருந்துகள் எடுத்தல்: மருத்துவரிடம், நரம்பிசிவு நோய்க்கான தடுப்பு மருந்தின் ஊக்க அளவு, நச்சுக்காய்ச்சல், நிமோனியா ஆகியவற்றுக்கான தடுப்பு மருந்துகள் ஆகியவற்றை எப்போது எடுக்க வேண்டும் என்பதைக் கேட்டறிய வேண்டும்.

The post பெண்களின் ஆரோக்கியம் appeared first on Vanakkam London.

By admin