பத்லாபூரில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அக்ஷய் ஷிண்டே, போலீஸ் காவலில் இருந்தபோது இறந்ததால் மீண்டும் என்கவுன்டர் பற்றிய விவாதம் எழுந்துள்ளது.
ஒருபுறம், ‘உடனடி நீதி’ கிடைக்க வேண்டும் என்ற உணர்வு வெளிப்பட்டாலும், மறுபுறம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.
என்கவுன்டர் என்றால் என்ன? இதைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?
முக்கியமான கேள்விகளுக்கான பதில்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன.
என்கவுன்டர் என்றால் என்ன?
என்கவுன்டர் என்ற ஆங்கில வார்த்தைக்கு அகராதியில் ஒரு நபரை விரோதத்துடன் சந்திப்பது அல்லது நேருக்கு நேர் சந்திப்பது அல்லது வாக்குவாதம் செய்வது என்று பொருள். குற்றப் பின்னணி கொண்ட ஒருவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே நிகழும் சந்திப்பு என்பது இதன் பொருள்.
ஆனால், என்கவுன்டர் என்ற வார்த்தை சட்டத்தில் இல்லை. நீதி விசாரணை அல்லது சட்ட நடவடிக்கை இல்லாமல் ஒரு நபரை காவல்துறையினர் கொலை செய்வதை என்கவுன்டர் என்கின்றனர்.
இதுகுறித்து பிபிசி மராத்தியிடம் பேசிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஷிரிஷ் இனாம்தார், “என்கவுன்டர் என்பது உளவுத்துறையின் பின்னணியில் உள்ள ஒரு விஷயம். தேச விரோத, சமூக விரோத, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் ஒருவர், குறிப்பிட்ட ஒரு குற்றத்தைச் செய்வதற்காக ஓரிடத்திற்கு வருவதை உளவுத்துறை கண்டறியும்.
போலீசார் அங்கே சென்று, அந்தக் குற்றவாளி வந்தபின் அவரை அடையாளம் காண்கின்றனர். அந்த நேரத்தில் சரணடைந்தால், அவர் கைது செய்யப்படுகிறார். ஆனால், கைது செய்யப்படுவதை எதிர்த்தால், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படலாம். இதுதான் என்கவுன்டர்” என்கிறார் இனாம்தார்.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின்படி, சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கையைத் தவிர, எந்தவொரு நபரின் உயிரையும் அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தையும் பறிக்க முடியாது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 44-இன் கீழ் ஒவ்வொரு நபருக்கும் தற்காப்பு உரிமை உண்டு.
இந்திய குடிமைப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, காவல்துறை கைது செய்யும்போது ஒருவர் எதிர்த்தாலோ அல்லது தப்பிக்க முயன்றாலோ காவல்துறை கைவிலங்குகளைப் பயன்படுத்தலாம்.
‘என்கவுன்டர் நிபுணர்’ என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது?
என்கவுன்டர் மற்றும் என்கவுன்டர் நிபுணர் (ஸ்பெஷலிஸ்ட்) ஆகிய இரண்டு சொற்களின் பயன்பாடு 1980களில் தொடங்கியது.
கடந்த 1980-90களில், மும்பையில் குண்டர்கள், மாஃபியாக்கள், நிழல் உலக தாதாக்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்த கும்பல்களுக்கு இடையே தொடர்ந்து சண்டை நடந்து வந்தது.
மேலும், அந்த நேரத்தில் மும்பையில் இந்த கும்பல்களுக்கு இடையில் நடந்த சண்டைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக காவல் துறையும் அப்போதைய அரசும் சில நடவடிக்கைகளை எடுத்தது. சில குழுக்கள் அமைக்கப்பட்டன.
மும்பையின் என்கவுன்டர் வரலாற்றில் ‘1983 பேட்ச்’ (1983 batch) ஒரு மைல்கல்லாக அமைந்தது. மூத்த ஊடகவியலாளர் எஸ்.ஹுசைன் ஸைதி கட்டுரை ஒன்றில் 1983 பேட்ச்-ஐ ‘கில்லர் பேட்ச்’ எனக் குறிப்பிடுகிறார்.
இந்த பேட்ச் மும்பை குற்ற உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகள் பிரதீப் சர்மா, பிரபுல் போசலே, விஜய் சலாஸ்கர், ரவீந்திர ஆங்ரே, அஸ்லாம் மோமின் ஆகியோருக்கு நாசிக் காவல் பயிற்சிப் பள்ளியில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தக் குழு 1984இல் பணியில் இறங்கியது. பின்னர் இந்த அதிகாரிகள் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ என்று அறியப்பட்டனர்.
ஆனால், “காவல் துறையில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற தனிப் பொறுப்பு இல்லை, அனைவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி அளிக்கப்படுகிறது” என்று மும்பை முன்னாள் காவல் ஆணையர் ஜூலியோ ரிபெய்ரோ விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவின் பிரபலமான என்கவுன்டர்கள்
கடந்த 1990களுக்கு முன், மும்பையில் என்கவுன்டர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 1982ஆம் ஆண்டில், பல குற்றங்களில் ஈடுபட்ட மான்யா சர்வே என்பவரை ஐசக் பக்வான் என்ற காவல்துறை உயரதிகாரி என்கவுன்டர் செய்தது மும்பை மட்டுமல்லாது நாட்டிலேயே முதல் என்கவுன்டராக கருதப்படுகிறது.
கடந்த 1987ஆம் ஆண்டு ராமா நாயக் என்பவரை காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திர கதர் என்கவுன்டர் செய்த சம்பவம், 1987இல் மெஹ்மூத் கலியா என்பவரை காவல்துறை உதவி ஆய்வாளர் இம்மானுவேல் அமோலிக் நடத்திய என்கவுன்டர் ஆகியவை பிரபலமானவை.
கடந்த 1990களுக்கு பிறகு குறிப்பாக 1993 குண்டுவெடிப்புக்குப் பிறகு மும்பையில் என்கவுன்டர்கள் சகஜமாகிவிட்டன. பின்னர் 1995ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரி ஆர். டி. தியாகி ஒவ்வொரு பிரிவிலும் தேடப்படும் 10 குற்றவாளிகள் அடங்கிய பட்டியலை தயாரிக்குமாறு சிபிசிஐடி துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
டெல்லியில் 2008இல் பாட்லா ஹவுஸ் என்கவுன்டர், 2006இல் சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி என்கவுன்டர், 2004இல் குஜராத் காவல்துறையினரின் இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் ஆகியவை சர்ச்சையாகின.
என்கவுன்டர் குறித்த விவாதங்கள்
முந்தைய அரசில் மத்திய உள்துறை இணையமைச்சராக இருந்த நித்யானந்த ராய், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போது, இந்தியாவில் நடந்த என்கவுன்டர் குறித்த புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார்.
கோவிட் காலகட்டத்தில், என்கவுன்டர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டில் மீண்டும் அதிகரித்தது.
இந்த ஆறு ஆண்டுகளில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒருமுறை மட்டுமே நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தது. அதேநேரம், ஏப்ரல் 2016 மற்றும் மார்ச் 2022-க்கு இடையில் 107 போலீஸ் என்கவுன்டர் இறப்பு வழக்குகளில், மொத்தம் ரூ. 7,16,50,000 இழப்பீடு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டறிந்தது.
என்கவுன்டர் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
கடந்த 2009ஆம் ஆண்டில் நடந்த ராம் நாராயண் குப்தா அல்லது லக்கன் பாய்யா என்கவுன்டர் மிகவும் சர்ச்சைக்குரியது.
அப்போது போலீஸ் பணியில் இருந்த பிரதீப் சர்மா, மும்பையில் உள்ள வெர்சோவாவில் உள்ள நானா-நானி பூங்காவில் என்கவுன்டர் செய்தார். இது ஒரு போலி என்கவுன்டர் என்று குற்றம் சாட்டப்பட்டது.
மார்ச் 2024இல், மும்பை உயர்நீதிமன்றம் பல வருட நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு பிரதீப் சர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இளம் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, குற்றவாளிகள் காவல்துறையினரின் கைத்துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகவும் இதையடுத்து, போலீசார் நடத்திய என்கவுன்டரில் இந்த நால்வரும் கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. எஸ். ஷிர்புர்கர் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தினால் மரணம் ஏற்படும் என்று தெரிந்திருந்தும், உயிரைப் பறிக்கும் நோக்கில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அந்தக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
என்கவுன்டர் குறித்து உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் மற்றும் மகாராஷ்டிரா அரசுக்கு இடையிலான வழக்கில், என்கவுன்டர் மரணங்கள் தொடர்பான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் 16 வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
சாட்சியங்களைப் பாதுகாத்தல், உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்தல், பிரேத பரிசோதனை நடைமுறைகளை வீடியோ பதிவு செய்தல், சிஐடி அல்லது பிற காவல் நிலையக் குழுவின் சுயாதீன விசாரணை, மாஜிஸ்திரேட் விசாரணை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் சம்பவம் குறித்துப் புகாரளித்தல் மற்றும் சரியான நேரத்தில் வழக்கை முடிப்பது போன்ற வழிமுறைகள் இதில் அடங்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு