0
ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி.. இவர்களின் பொதுவான பிரச்சனை முடி கொட்டுதல் தான். சிலர் முடி அதிகமாக கொட்டுகிறது அதனால் மொட்டை அடிக்கப்போகிறேன் என்பார்கள். ஏன்? என்று கேட்டால் மொட்டை அடித்தால் முடி அடர்த்தியாக வளரும் என்றும், அதன்பிறகு முடி கொட்டுதல் இருக்காது என்றும் கூறுவார்கள்.
உண்மையில் மொட்டை அடித்ததற்கு பிறகு முடி அடர்த்தியாக வளருமா? முடி கொட்டுவது இருக்காதா? இது உண்மையான கூற்று தானா எனபதைப் பற்றி தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
மொட்டை அடிப்பதால் கொஞ்ச நாளைக்கு முடி இல்லாமல் இருப்போமே தவிர முடி வளர்ச்சியில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஏனெனில் இந்த செயலின் போது முடியிலோ அல்லது மயிர்க்கால்களிலோ எந்த மாற்றமும் இருக்காது. குறுகிய மயிர்க்கால்கள் அடர்த்தியாக தெரிவது போன்றதொரு பிம்பம் மட்டுமே காணப்படும். மொத்தத்தில் மொட்டை அடித்தால் முடி நன்றாக , வேகமாக வளர்வதாக உணர்ந்தால் அது ஒரு மாயை தான். மொட்டை அடிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் கூட, மொட்டை அடிப்பதற்கும் முடியின் வளர்ச்சி, வேகம் மற்றும் அடர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தான் கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் மரபணுவைப் பொறுத்து தான் முடி வளர்ச்சியும் இருக்கும்.
முடி கொட்டாமல் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் வைட்டமின் ஏ,சி,டி,ஈ மற்றும் இரும்புச்சத்து, துத்தநாகம் முதலானவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
முக்கியமாக தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும். அதிலும் வாரத்தில் ஒருமுறையாவது எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் சல்பேட் இல்லாததாக இருக்க வேண்டும். உங்கள் ஷாம்பூ தான் உங்கள் முடியின் மென்மையையும், முடி உதிர்வதையும் தடுக்கும் திறன் கொண்டது. அதனால் ஷாம்பூ தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.
முடியை பராமரிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும், முடி அதிகமாக கொட்டுகிறது, அடர்த்தியாக இல்லை மொட்டை அடித்தால் மீண்டும் வளரும் போது நன்றாக வளரும், அடர்த்தியாக இருக்கும் என தவறாக நினைத்துக்கொண்டு மொட்டை அடித்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகி சரியான காரணங்களை தெரிந்துகொண்டு முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.