பட மூலாதாரம், Getty Images
இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதிலும், அதை வழங்குவதிலும் ஏற்படும் தாமதம் குறித்து கவலை தெரிவித்தார். அத்துடன், சில தீவிரமான முக்கிய கேள்விகளையும் அவர் எழுப்பினார்.
2025 மே 29-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, எந்தவொரு பாதுகாப்பு குறித்த திட்டமும் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதில்லை என்றும், உள்நாட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து சில முக்கியமான விஷயங்களையும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய விமானப்படை, ராணுவ தளவாட பற்றாக்குறையால் நீண்ட காலமாக போராடி வருகிறது என்பதும், அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானங்கள் இந்தியாவிடம் இல்லாததும் குறையாகவே இருக்கிறது.
‘ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த்’ போர் விமானங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அவை உற்பத்தி செய்யப்படுவதற்கும், தயாரிக்கப்பட்ட பிறகு அவற்றை பயன்படுத்துவதற்கும் இன்னும் நீண்ட காலம் எடுக்கும்.
ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் தெரிவித்த கவலைகள் உண்மையானவை என இந்திய விமானப்படையின் முன்னாள் தலைவர் வி.ஆர். செளத்ரி ஆமோதிக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
“கொள்முதல் செய்ய யாரிடம் ஒப்புக்கொள்கிறீர்களோ அவர்களிடம் இருந்து உறுதியான உத்தரவாதத்தைப் பெற வேண்டிய அவசியம் உள்ளது. வாக்குறுதியளிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வேலையை முடிப்பார்கள் என்ற உறுதியான உத்தரவாதத்தை அவர்களிடம் இருந்து பெற வேண்டும்.
அவர்கள் வேலையை முடிக்கத் தவறினால், அல்லது சில ஆண்டுகளுக்கு முன்னரே, காலக்கெடுவிற்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது என்று அவர்கள் நம்மிடம் கூறியிருந்தால், மாற்று வழிகளைக் கண்டறிந்திருக்கலாம்,” என்று NDTV செய்தி சேனலிடம் பேசிய இந்திய விமானப்படையின் முன்னாள் தலைவர் வி.ஆர். செளத்ரி தெரிவித்தார்.
பாதுகாப்பு கொள்முதல் மற்றும் விநியோகங்களில் காணப்படும் நீண்ட இடைவெளி மற்றும் திட்டமிடப்பட்ட நேரத்தை விட பல மடங்கு காலதாமதம் ஏற்படுவது போன்றவற்றால் விரக்தி அதிகரித்து வருவதாகக் கூறும் பாதுகாப்பு நிபுணர்கள், இதையே விமானப்படை ஏர் சீஃப் மார்ஷலின் அறிக்கை பிரதிபலிப்பதாக கூறுகின்றனர்.
கடந்த மாதம் ஏப்ரல் 22ஆம் நாளன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலும், அதற்கு பதிலடி கொடுக்க மே 7ம் தேதியன்று பாகிஸ்தானுக்குள் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதலும், அதனையடுத்து சில நாட்கள் நடைபெற்ற சண்டையின் பின்னணியில் ஏர் சீப் மார்ஷலின் கவலை பார்க்கப்படுகிறது.
நான்கு நாள்கள் நடைபெற்ற ராணுவ மோதலுக்குப் பிறகு, பாதுகாப்பு தளவாட உற்பத்தியை தீவிரப்படுத்துவது தொடர்பான வாத-விவாதங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளன.
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மேலும் முனைப்பு காட்ட வேண்டிய அவசியத்தின் பின்னணியில் விமானப்படைத் தளபதியின் அறிக்கையைப் பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், PIB
விமானப்படைத் தளபதி என்ன சொன்னார்?
வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) வருடாந்திர வணிக மாநாட்டில் பேசிய விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங், ‘ஒரு திட்டம் கூட சரியான நேரத்தில் முடிக்கப்படவில்லை’ என்று கூறினார்.
“ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே, அவை ஒருபோதும் சரியான நேரத்தில் வந்து சேராது என்பது எங்களுக்குத் தெரியும். காலக்கெடு என்பது முக்கியமான பெரிய பிரச்னை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை ஏன் வழங்க வேண்டும்?” என்று ஏர் மார்ஷல் கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “தற்போது நாம் மேக் இன் இந்தியா’ என்பதுடன் சேர்த்து ‘டிசைன் இன் இந்தியா’ என்பதையும் சிந்திக்க வேண்டிய நேரம் இது” என்று கூறினார்.
உள்நாட்டிலேயே ஆயுதங்களை உருவாக்க இந்திய அரசு முயற்சிக்கிறது. இருந்தபோதிலும், தற்போதும்கூட இந்தியாவிற்கு தேவையான ஆயுதங்களில் பெரும்பகுதி வெளிநாட்டிலிருந்தே வாங்கப்படுகிறது. பல சமயங்களில், இவற்றை வாங்குவதற்கான முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்றால், அவற்றை வழங்குவதிலும் நிறுவனங்கள் பெரும்பாலும் தாமதம் செய்கின்றன.
“கொள்முதல் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் போது, அது விரைவில் செயல்படுத்தப்படாது என்பது தெரிந்தாலும்கூட அடுத்து என்ன செய்வது என்பதை பிறகு பார்த்துக் கொள்வோம் என்ற நினைப்பிலேயே கையெழுத்திடுகிறோம். இயற்கையாகவே, செயல்முறைகள் தடம் புரண்டு விடுகின்றன” என்று இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் கூறினார்.
83 தேஜாஸ் எம்கே 1ஏ இலகுரக போர் விமானங்கள் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதத்தின் பின்னணியில் விமானப்படைத் தளபதியின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம், 2021ஆம் ஆண்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உடன் கையெழுத்தானது.
70 எச்டிடி-40 ரக பயிற்சி விமானங்களை வாங்குவதற்காக எச்ஏஎல் உடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
“விமானப்டையை பொறுத்தவரை, எங்கள் கவனம் திறன் மற்றும் திறமையை சார்ந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வது பற்றி மட்டுமே இனி பேச முடியாது, இந்தியாவிலேயே வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் தொடங்க வேண்டும்” என்று விமானப்படைத் தளபதி கூறினார்.
பாதுகாப்புப் படைகளுக்கும் தொழில்துறைக்கும் இடையே நம்பிக்கை மற்றும் வெளிப்படையான உரையாடலின் அவசியத்தை வலியுறுத்திய அவர், “மேக் இன் இந்தியா திட்டத்தைப் பொருத்தவரை, ஐஏஎஃப், சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.
முன்னதாக, இந்திய விமானப்படை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தன்னிறைவு மட்டுமே ஒரே தீர்வு என்பதை உணர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
“எதிர்காலத்தில் தயாராக இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இப்போது நாம் செயல்பட வேண்டும் என்பதே கவலையாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியத் தொழில்துறையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (DRDO) அதிக உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தாலும், இன்றைய தேவைகளை இப்போதே பூர்த்தி செய்யவேண்டும்” என்று விமானப்படைத் தளபதி தெரிவித்தார்.
“இப்போதைய தேவைகளுக்காக துரிதமான சில மேக் இன் இந்தியா திட்டங்கள் தேவைப்பட்டாலும், எதிர்காலத்தில் டிசைன் இன் இந்தியா திட்டங்களே தொடர்ந்து பலனைத் தரும்” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
நிபுணர்களின் கருத்து என்ன?
இது குறித்து பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடியிடம் பிபிசி பேசியது. “பாதுகாப்பு அமைச்சகத்தில் செயல்படும் அமைப்பு, காலவரையறை இல்லாமல் செயல்படுவது ஆயுதப்படையினரிடமும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.
“எந்தவொரு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் செயல்முறையிலும், ஒப்பந்தம் தொடங்கிய பிறகு, திட்டம் 36 முதல் 40 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், திட்டம்12 கட்டங்களைக் கடக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் சிற்சில தடைகளும் தாமதங்களும் ஏற்படுவதால் தான், இந்தத் திட்டங்கள் முடிவடைய சராசரியாக ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகிறது” என்று ராகுல் பேடி கூறுகிறார்.
இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் (AMCA) பற்றி பேசும் ராகுல் பேடி, “இதற்கு தற்போதுதான் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அதன் முதல் மாடல் 2035 இல் வரும், அதற்கு பிறகு உற்பத்தி செய்ய மேலும் மூன்று ஆண்டுகள் ஆகும். அதாவது, அது விமானப்படையில் சேர சுமார் 13 ஆண்டுகள் ஆகும், அதுவும் திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால்மட்டுமே” என்று கூறினார்.
மேலும், “5வது தலைமுறை போர் விமானத்தை உருவாக்க இந்தியா 2007-08 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் 11 ஆண்டுகள் தொடர்ந்தன, அதற்காக சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர்களும் செலவிடப்பட்டன, ஆனால் 2018 இல் அது தோல்வியுற்றதாகக் கருதப்பட்டு கைவிடப்பட்டது. ஆனால் ரஷ்யா AFGFAவில் தொடர்ந்து பணியாற்றி, சுகோய்-57 ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கிவிட்டது. நாம் அந்த பேச்சுவார்த்தையை ஆக்கப்பூர்வமாக முடித்திருந்தால், தற்போது நம்மிடம் ஒரு ஸ்டெல்த் போர் விமானம் இருந்திருக்கும்.”
“இந்திய விமானப்படைக்கு சுமார் 42 ஸ்குவாட்ரன் போர் விமானங்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதில் 30 ஸ்குவாட்ரன்கள் தான் இருக்கிறது. இவற்றிலும், இரண்டு முதல் மூன்று ஸ்குவாட்ரன் போர் விமானங்கள் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளன. இதன் பொருள் விமானப்படையில் சுமார் 28 ஸ்குவாட்ரன்கள் மட்டுமே இருக்கும்” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Reuters
2018-19 ஆம் ஆண்டில் 114 போர் விமானங்கள் தேவை என இந்திய விமானப்படை முன்மொழிந்திருந்தது. அதில் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறும் ராகுல் பேடி, விமானப்படைத் தளபதியின் ஆதங்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும் என்று சொல்கிறார்.
மேலும் “ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளில் இந்திய விமானப்படையின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவின் சில விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து இந்தியத் தரப்பில் இருந்து எதுவுமே தெளிவாகக் கூறப்படவில்லை. நிச்சயமாக இந்திய விமானப்படை தனது தயார்நிலையை மதிப்பீடு செய்து வருகிறது.”
ரஃபேல் ஒப்பந்தத்தை பாதுகாப்பு கொள்முதல் தாமதத்திற்கு மற்றொரு உதாரணமாக கூறலாம். 2007-08இல் தொடங்கிய பேச்சுவார்த்தை, 2016இல் பிரதமர் மோடி பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டபோது இறுதியானது, அதன் விநியோகம் 2018இல் தொடங்கியது.
“தேஜாஸ் வடிவத்தில் இன்று நமக்கு முன் இருக்கும் இலகு ரக போர் விமானம் (LCA) தொடர்பான பேச்சுவார்த்தை 1981 இல் தொடங்கியது. அதன் வன்பொருளில் 45 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது என்று CAG அறிக்கை கூறியது. விமானத்தின் மிக முக்கியமான பகுதி என்ஜின் தான். அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெல்த் போர் விமானத்திற்கான என்ஜினையும் நாம் உருவாக்கவில்லை. நம்மால் சொந்தமாக எந்தவொரு என்ஜினையும் உருவாக்க முடியவில்லை” என்று ராகுல் பேடி கூறுகிறார்.
“ஹெலிகாப்டர் என்ஜின்களுக்கான தொழில்நுட்பம் பிரான்சிலிருந்து வாங்கப்பட்டு, உரிமத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது. அர்ஜுன் டேங்கில் ஜெர்மன் என்ஜின் என்றால், தேஜாஸின் என்ஜின் அமெரிக்காவிலிருந்து வருகிறது. மிகச்சிறிய என்ஜின் கூட இறக்குமதி செய்யப்படுகிறது. இது உள்நாட்டு போர் விமானத்தை உருவாக்குவதில் பெரிய தடையாக இருக்கிறது” என்கிறார் அவர்.
ராகுல் பேடியின் கூற்றுப்படி, “விமானப்படைத் தளபதியின் கவலையின் அர்த்தம் என்னவென்றால், உள்நாட்டில் தயாரிக்க முடியாத எந்தவொரு உபகரணத்தையும் வெளிநாட்டிலிருந்து வாங்கி இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்.”
பட மூலாதாரம், ANI
இந்திய ராணுவத்தின் பலம்
குளோபல் ஃபயர் பவர் கூற்றுப்படி, ராணுவ பலத்தின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எட்டு இடங்கள் இடைவெளி உள்ளது.
2025ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் ராணுவ பலத்தைப் பொருத்தவரை, 145 நாடுகளில் இந்தியா தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தானின் 12ஆம் இடத்தில் உள்ளது.
இந்திய ராணுவத்தில் சுமார் 22 லட்சம் ராணுவ வீரர்கள், 4,201 டாங்கிகள், சுமார் 1.5 லட்சம் கவச வாகனங்கள், 100 தானியங்கி பீரங்கிகள் மற்றும் 3,975 இழுத்துச் செல்லப்படும் பீரங்கிகள் உள்ளன. இது தவிர, மல்டி-பேரல் ராக்கெட் பீரங்கிகள் 264 உள்ளன.
இந்திய விமானப்படையில் 3 லட்சத்து 10 ஆயிரம் வீரர்கள் மற்றும் மொத்தம் 2,229 விமானங்கள் உள்ளன.
இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளிடமும் மொத்தம் 899 ஹெலிகாப்டர்கள் உள்ளன, அவற்றில் 80 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகும்.
இந்திய கடற்படையில் 1.42 லட்சம் வீரர்கள் உள்ளனர், இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்கள், 13 டெஸ்ட்ராயர் கப்பல்கள், 14 போர்க்கப்பல்கள், 18 நீர்மூழ்கிக் கப்பல்கள், 18 சிறிய ரக போர் கப்பல்கள் உட்பட மொத்தம் 293 கப்பல்கள் உள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு