• Sun. May 25th, 2025

24×7 Live News

Apdin News

அடுத்த ஆண்டு இந்த நாளில் மக்களால் இந்த ஆட்சியாளர்கள் துரத்தியடிக்கப்படுவர் | நளின் பண்டார

Byadmin

May 25, 2025


அரசாங்கத்துக்கு நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என அரச அதிகாரிகளும், நிறுவனத்தலைவர்களும், துறைசார் நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர். அடுத்த ஆண்டு இந்த நாளில் நாட்டு மக்களால் இவர்கள் ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

சனிக்கிழமை (24) கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் பயணம் சிறப்பானதாக இல்லை என தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களே கூறுகின்றனர். நாட்டில் அரசாங்கமென்ற ஒன்று இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்திடம் எந்த பதிலும் இல்லை. கொள்ளையற்ற அனுபவமற்ற இந்தக் குழுவிடம் நாட்டை கையளித்தால் என்னவாகும் என்பதை அன்றே நாம் தெரிவித்திருந்தோம்.

இன்று தேசிய மக்கள் சக்தி 23 இலட்சம் வாக்குகளை இழந்திருக்கிறது. நாம் மேலதிகமாக 3 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம். இந்த அரசாங்கத்துக்கு நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என அரச அதிகாரிகளும், நிறுவனத்தலைவர்களும், துறைசார் நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர். அடுத்த ஆண்டு இந்த நாளில் நாட்டு மக்களால் இவர்கள் ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்படுவார்கள்.

சுயேட்சை குழுக்களுடன் ஒப்பந்தமிட்டு கொழும்பு மாநகரசபையில் அரசாங்கம் ஆட்சியமைத்து, தோல்வியடைந்த அந்த பெண் வேட்பாளரிடம் கொழும்பு ஒப்படைக்கப்பட்டால் அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகும். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த ஆதரவாளர்களாலேயே இந்த அரசாங்கம் வீழ்த்தப்படும்.

மக்களுக்கு உப்பினைக் கூட வழங்க முடியாதுள்ள அரசாங்கம் ஏனைய காரணிகள் குறித்து பேசுவதில் பயன் என்ன? எதிர்க்கட்சிகளுக்கு பாதாள உலகக் குழுவினருடன் தொடர்பிருக்கிறது என்றால், ஆதரத்துடன் அதனை நிரூபித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு சவால் விடுக்கின்றேன்.

தேசிய மக்கள் சக்திக்க வாக்களித்தவர்களே நாடு தொடர்பில் தீர்வொன்றை எடுக்க வேண்டும். அந்த பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கின்றோம் என்றார்.

By admin