6
நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலத்திற்கு பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை (13) மாலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (14) பிற்பகலில் மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணம், பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
அதிகாலை வேளையில் மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.