பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ஃபியோனா மெக்டொனால்ட்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று, புளூட்டோனியம் அணுகுண்டு ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. இதன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு, பிபிசிக்கு அளித்த பேட்டியில், அந்த குண்டைத் தயாரித்து பொருத்த உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஒருவர், அந்த வெடிப்பை ஏன் தடுக்க முடியவில்லை என்பதையும், அதற்குப் பிறகான திட்டங்களையும் வெளிப்படுத்தினார்.
“மனித குலத்தின் மீது அக்கறை இல்லாததால் இது நடக்கவில்லை. மனித குலத்தின் மீதான அக்கறையால்தான் நடந்தது. ஒருவேளை அதுதான் பாவமாக இருக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாகசாகி மீது நடத்தப்பட்ட அணுகுண்டு வீச்சில் பங்கேற்ற முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க இயற்பியலாளர் பிலிப் மோரிசன் , அதற்கு முந்தைய நாட்கள் மற்றும் வாரங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிபிசியிடம் வெளிப்படையாகப் பேசினார்.
மோரிசன், முதல் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்காக நேச நாடுகள் மேற்கொண்ட மிக ரகசியமான திட்டமான ‘மன்ஹாட்டன் திட்டத்தில்’, லாஸ் அலமோஸ் ஆய்வகத்தில் பணியாற்றினார்.
அந்த ஆய்வகத்திற்கு அவரது முன்னாள் ஆசிரியரான ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமர் தலைமை வகித்தார்.
1945 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி நடத்தப்பட்ட முதல் அணுகுண்டு சோதனையான ‘டிரினிட்டி’ சோதனையிலும் மோரிசன் பங்கேற்றார். புளூட்டோனியம் அணுக்கருவை நியூ மெக்சிகோவுக்கு காரில் தனது மடியில் வைத்து எடுத்துச் சென்றார் மோரிசன் .
பின்னர் சிறிய தீவான டினியனுக்குச் சென்ற அவர், நாகசாகி மீது வீசப்பட்ட “ஃபேட் மேன்” என அழைக்கப்பட்ட புளூட்டோனியம் அணுகுண்டைத் தயாரித்து பொருத்துவதற்கு உதவினார்.
ஹிரோஷிமா மீது குண்டு வீசப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி, அந்தக் குண்டை பி-29 விமானத்தில் ஏற்றும் பணியை மோரிசன் மேற்பார்வையிட்டார்.
டினியன் தீவில் தான் அமெரிக்கப் படைகள் மோரிசன் கூறியபடி, “உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை” உருவாக்கின.
“ஒரு பெரிய பவளப்பாறைத் தொடர் பாதியளவு சமப்படுத்தப்பட்டு, கரடுமுரடான ஒரு சமவெளியை நிரப்ப பயன்படுத்தப்பட்டது. அங்கு ஆறு ஓடுபாதைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட இரண்டு மைல் நீளம் கொண்டவை…” என்று 1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்க செனட் குழுவிடம் அளித்த சாட்சியத்தில் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Hulton Archive/Getty Images
அழிவின் அளவு
மோரிசன் தனது சாட்சியத்தில், ஜப்பானிய நகரங்கள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தயாரிப்புகளின் அளவையும் வெளிப்படுத்தினார்.
“துறைமுகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான டன் விமான எரிபொருளை ஏற்றிய டேங்கர் கப்பல்கள் வந்து நின்றன… பெரிய ஓடுபாதைகளில் மிகப்பெரிய விமானங்கள் உருண்டு வரும்… ஒவ்வொரு 15 விநாடிகளுக்கும் ஒரு பி-29 விமானம் வானில் பறக்கும். ஒன்றரை மணி நேரத்துக்கு இது தொடர்ந்து நடைபெறும்… ஆயிரம் பி-29 விமானங்கள் மூலம் மீண்டும் மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஒரு நகரத்தின் பல சதுர மைல் பரப்பு தீக்கிரையானது” என்று அவர் கூறினார்.
இதற்கு மாறாக, “அணுகுண்டு என்பது முற்றிலும் வேறுபட்டது” என்று அவர் தெரிவித்தார்.
“வெடிகுண்டுகளை ஏற்றிய கப்பல்கள் எதுவும் இல்லை. ஆயுதங்களை கையாளும் பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கான ஆயுதக் கிடங்குகள் எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக, லாஸ் அலமோஸைச் சேர்ந்த சுமார் 25 பேர் இருந்தனர். சோதனை ஆய்வகங்களாக மாற்றப்பட்ட சில குவான்செட் [முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நெளிவான இரும்புத் தகடுகளால் ஆன] குடிசைகளும் , தடுப்புகளால் வேலியிடப்பட்ட ஒரு கட்டடமும் இருந்தன. நள்ளிரவுக்குப் பிறகு தாக்குதல் தொடங்கியது.
விமானத் தளம் வெறிச்சோடியிருந்தது. ஒரு விமானம் மட்டும் ஓடுபாதையில் கர்ஜித்தபடி சென்று, புறப்பட்டு, எதிரி நாடுகளின் நகரங்களை நோக்கிப் பயணித்தது” என்று அவர் கூறினார்.
மதிப்பீடுகள் மாறுபட்டாலும், நாகசாகியில் அணுகுண்டு வெடித்ததில் ஆரம்பத்திலேயே 40,000 பேர் கொல்லப்பட்டதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தத் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடைய உயிரிழப்புகள் 100,000-க்கும் அதிகமாக இருந்ததாகவும் கருதப்படுகிறது.
ஹிரோஷிமாவில் குறைந்தது 80,000 பேர் உடனடியாக உயிரிழந்தனர். கடுமையான தீக்காயங்கள், காயங்கள் மற்றும் தீவிர கதிர்வீச்சு நோய் காரணமாக, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை சுமார் 1,40,000 ஆக உயர்ந்தது.
பின்னர், அதிகாரப்பூர்வ அறிவியல் சேத மதிப்பீட்டுக் குழுவின் ஒரு பகுதியாக, மோரிசன் ஜப்பானின் அந்த இரண்டு நகரங்களிலும் ஏற்பட்ட பேரழிவை நேரில் ஆய்வு செய்தார்.
குறிப்பாக , ஹிரோஷிமாவில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
“ஒரு ஜப்பானிய அதிகாரி இடிபாடுகளுக்கு நடுவே நின்று எங்களிடம், ‘இவையெல்லாம் ஒரே ஒரு குண்டால், இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ எனக் கூறினார்” என்று அவர் தெரிவித்தார்.
“ஒரே ஒரு விமானம், ஒரே ஒரு குண்டுடன், ஒரு நகரத்தின் பல சதுர மைல் பரப்பை அழித்திருந்தது. ஆயிரம் விமானங்கள் நடத்திய தாக்குதலை விட, இது முழுமையாக அந்தப் பகுதியை அழித்திருந்தது. அதேநேரத்தில், எதிர்ப்பதற்கும் தப்பிச் செல்வதற்கும் குறைவான வாய்ப்பையே விட்டுச் சென்றிருந்தது” என்று அவர் கூறினார்.
எனினும், அணுகுண்டை போரில் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படாது என்று மோரிசன் நம்பியிருந்தார்.
ஜப்பானில் அணுகுண்டை பயன்படுத்துவதற்கு முன்பாக, அதை பொதுவெளியில் சோதனை செய்து காட்ட வேண்டும் என்று விரும்பிய லாஸ் அலமோஸ் இளம் இயற்பியலாளர்கள் குழுவுக்கு அவர் தலைமை தாங்கினார்.
டினியனில் “ஃபேட் மேன்” குண்டை பொருத்தும் பணியை மேற்பார்வையிட்டபோது மோரிசனுக்கு 30 வயது.
1975 ஆம் ஆண்டில் பிபிசியின் மெல்வின் பிராக்கிடம் பேசிய அவர், “சர்வதேச பிரதிநிதிகள் குழுவை பாலைவனத்துக்கு அழைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்” என்று கூறினார்.
“ஆனால், போர்ச் சூழ்நிலையில், அது வெறும் ஆசையாகவே இருந்தது” எனவும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், MPI/Getty Images
‘தடுக்க முடியாத உத்வேகம்’
நாஜிக்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிந்த பிறகும், தடுக்க முடியாத ஒரு உத்வேகம் உருவாகியிருந்ததாக இயற்பியலாளர் மோரிசன் விவரித்தார்.
“போர் இன்னும் நடந்து கொண்டிருந்தது. பசிபிக் பகுதியில் நடைபெறவிருந்த மிகப்பெரிய போருக்காக நாங்கள் முன்னேறிக் கொண்டிருந்தோம்… எனவே அதை நிறுத்துவது சாத்தியமற்றதாக இருந்திருக்கும்” என்று அவர் விளக்கினார்.
அந்த நிலையை மாற்றியிருக்கக் கூடிய ஒரே காரணியாக அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் மரணத்தை மோரிசன் கருதினார்.
ரூஸ்வெல்ட் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உயிரிழந்தார்.
“அமெரிக்காவின் நிலைப்பாட்டை வலுவாக மாற்றுவதற்கான ஒரே வாய்ப்பு, ரூஸ்வெல்ட் உயிருடன் இருந்திருந்தால் மட்டுமே இருந்திருக்கும் என்று நான் கூறுவேன்.
அணுகுண்டின் செயல்பாடு குறித்து நமக்குத் தெரியவரும் முன்பும், அந்த குண்டுகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது தீர்மானிக்கப்படுவதற்கு முன்பும், அதன் உருவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அவர் இறந்துவிட்டார்” என்று மோரிசன் கூறினார்.
“இந்தப் பயங்கரமான உத்வேகத்தைத் திருப்பிவிடுவதற்குத் தேவையான அளவு செல்வாக்கும், அரசாங்கத்துக்குள் போதுமான அதிகாரமும் கொண்ட ஒரே நபர் அவர்தான் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
ஹாரி எஸ். ட்ரூமன் அதிபரான போது, இந்தத் திட்டம் குறித்து அவருக்கே தெரியாது. அவர் அதிபராக பதவியேற்ற சில மணி நேரத்திற்குப் பிறகுதான் அதைப் பற்றி அறிந்துகொண்டார்.
மூன்று மாதங்களுக்கும் சற்று அதிகமான காலத்துக்குப் பிறகு, அணுகுண்டுத் தாக்குதல்களுக்கு உத்தரவிட வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
“அந்த முடிவை அவர் எடுத்தார் என்பது உண்மைதான். ஆனால், அந்த முடிவு தான் அவரை உருவாக்கியது என்று கூறுவது நியாயமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று மோரிசன் வாதிட்டார்.
“பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அந்தச் செயல்முறையை மாற்றி, அதை நிறுத்துவது அவருக்கு மிகவும் துணிச்சலான நடவடிக்கையாக இருந்திருக்கும்… ரூஸ்வெல்ட்டின் மரணத்துடன் அந்த வாய்ப்பு அடிப்படையிலேயே இல்லாமல் போய்விட்டது” என்று அவர் கூறினார்.
அடுத்தடுத்து இரண்டு குண்டுகளை வீசும் முடிவுக்கும் இதேபோன்ற மாற்ற முடியாத வேகம் இருந்ததாக மோரிசன் தெரிவித்தார்.
“இது முதல் குண்டு, இரண்டாவது குண்டு என்று தனித்தனியாகக் கருதப்படவில்லை. தளபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவு, ‘முதல் குண்டை வீசுங்கள், பின்னர் உங்களால் முடிந்தவுடன் இரண்டாவது குண்டையும் வீசுங்கள்’ என்பதாகவே இருந்தது.
முதல் குண்டு ஏற்படுத்திய மிகப்பெரிய விளைவுகளைப் பார்த்துவிட்டு, ‘சரி, இரண்டாவது குண்டுக்காகக் காத்திருப்போம்’ என்று சொல்வதற்கு வாஷிங்டனில் இருந்த ஒரு வலிமையான மனிதரால் தான் முடிந்திருக்கும்.
அதற்கு உயர் மட்டத்தில் சிந்திக்கும் திறனும், சிக்கலான தொடர்புகளைப் பயன்படுத்தி, சரியான உத்தரவுகளை சரியான தளபதிகளிடம் கொண்டு சேர்க்கும் திறனும் தேவைப்பட்டிருக்கும்” என்று அவர் கூறினார்.
அதனால், அந்த இரண்டு அணுகுண்டு தாக்குதல்களும் நடைபெற்றன. மேலும் பல அணுகுண்டுத் தாக்குதல்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் மோரிசன் குறிப்பிட்டார்.
“தேவைப்பட்டால், ஓர் ஆண்டு காலத்துக்கு இந்தக் குண்டுகளைத் தொடர்ந்து வீச வேண்டும் என்பதுதான் ஆரம்ப முடிவு… அதற்கான திட்டத்தைத் தயாரிக்கும்படி என்னிடம் கூறப்பட்டது” என்று அவர் பிராக்கிடம் தெரிவித்தார்.
“என்னிடம் ஒரு திட்டமும், ஒரு செயல்முறையும், ஒரு கால அட்டவணையும் இருந்தன. எனக்குப் பதிலாகப் பணியாற்ற ஒரு நபரும், முன்னும் பின்னுமாகச் சென்று வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன” என்று அவர் கூறினார்.
ஆனால், லாஸ் அலமோஸ் விஞ்ஞானிகளும் அவரும் அணுகுண்டுத் தாக்குதல்களின் பின்விளைவுகளை நேரில் பார்த்த பிறகு, அவரால் தொடர்ந்து அந்தப் பணியைச் செய்திருக்க முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
“குறுகிய காலத்திலும், நீண்ட காலத்திலும் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து அறிவியல் ரீதியாக எங்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனால், அது ஒரு புத்தகத்தைப் படித்து, எண்களைப் பார்ப்பதன் மூலம் மட்டுமே தெரிந்துகொண்டதாக இருந்தது” என்று அவர் பிராக்கிடம் கூறினார்.
“அந்த எண்களுக்கும்… உயிருடன் இருந்த உண்மையையும், இறந்து கொண்டிருந்த உண்மையையும் நேரில் பார்ப்பதற்கும் இடையிலான வித்தியாசம், ஒவ்வொருவருக்கும், ஒட்டுமொத்த உலகத்துக்கும் மிகப்பெரிய வித்தியாசமாக இருந்தது. எனவே, அது எங்களுக்குத் தெரிந்திருந்தது என்று நினைக்கிறேன். ஆனால், அதை நாங்கள் உணரவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், National Archives/Newsmakers/GettyImages
ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட இரவில், பசிபிக் தீவில் இருந்த ராணுவத் தளத்தின் எதிர்வினையை அவர் நினைவுகூர்ந்தார்.
“அன்று இரவு ஒரு பெரிய விருந்து நடைபெற்றது. ஆனால், பெரும்பாலான விஞ்ஞானிகள் அதற்குச் செல்லவில்லை. விமானப்படையினர், வீரர்கள் மது அருந்தினார்கள். போர் முடிவுக்கு வரப்போகிறது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அது மிகப்பெரிய வெற்றியாகத் தெரிந்தது, அப்படியே உணரப்பட்டது” என்று அவர் கூறினார்.
ஆனால், விஞ்ஞானிகள் “சோகமாக அமர்ந்து கொண்டு, உலகத்தின் முடிவைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தனர்” என்று மோரிசன் நினைவுகூர்ந்தார்.
எனினும், அணுகுண்டுத் தாக்குதல்களுக்கு முந்தைய காலகட்டத்தில், மன்ஹாட்டன் திட்டத்திலிருந்து விலக வேண்டும் என்று மோரிசன் நினைக்கவில்லை.
“இதற்கு எதிராக உறுதியுடனும் விடாப்பிடியாகவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், நான் வேறு என்ன செய்திருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. எந்தக் கட்டத்திலும் இதை நிறுத்துவது பற்றி நான் நினைக்கவில்லை” என்று அவர் கூறினார்.
நாஜிக்கள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பே அணுகுண்டு தயாராக இருந்திருந்தால், நேச நாடுகள் பெர்லின் மீது அணுகுண்டை வீசியிருப்பார்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
“ஓ, நிச்சயமாக, கண் இமைக்கும் நேரத்தில் அது நடந்திருக்கும். நாங்கள் முதன்மையாக ஜெர்மானியர்களைப் பற்றித்தான் அஞ்சினோம். அவர்கள்தான் எங்கள் எதிரிகள்” என்று மோரிசன் கூறினார்.
போருக்குப் பிறகு, மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் மோரிசன் பேராசிரியரானார்.
அணு ஆயுதப் பெருக்கத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்த அவர், “மூன்றாவது குண்டு வேண்டாம்” என்ற இயக்கத்தின் முன்னணியில் இருந்தார்.
“இந்தத் திட்டத்தில் பணியாற்றிய பெரும்பாலான விஞ்ஞானிகளைப் போலவே, மற்றொரு போரை அனுமதிக்கக் கூடாது என்பதில் நான் முழுமையாக உறுதியாக இருக்கிறேன் என்பது சொல்லாமலேயே புரியும்” என்று 1945 ஆம் ஆண்டில் அமெரிக்க செனட் குழுவிடம் அளித்த சாட்சியத்தில் அவர் கூறினார்.
நேச நாடுகள் குறிப்பாக ஒரு விஷயத்தைச் செய்திருக்க வேண்டும் என்று அவர் நம்பினார்.
“முறையான ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பின்னோக்கிப் பார்க்கும் போது, முறையான மற்றும் பொருத்தமான எச்சரிக்கையை வழங்காததற்கு எந்த நியாயமும் இல்லை” என்று அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு