பஹல்காம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
”ஏப்ரல் 22ம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்களை அவர்களது குடும்பத்தின் முன், அவர்களுடைய குழந்தைகளின் கண் முன்னால் கொல்லப்பட்டனர். இது நாட்டின் நம்பிக்கையை உடைப்பதற்கான செயல், இது என் மனதில் மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது.” என்றார் நரேந்திர மோதி.
இந்திய ராணுவத்திற்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுத்ததாக கூறிய மோதி, ” நமது நாட்டு பெண்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். மே 6 மற்றும் 7ம் தேதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நம்முடைய மன உறுதியை நாட்டு மக்கள் பார்த்தனர். பயங்கரவாத முகாம்கள் மீதும் பயங்கரவாதிகள் மீதும் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்தோம்.” என்றார்.
‘பயங்கரவாத தாக்குதல்களுக்கு தொடர்பு’
மேலும் தொடர்ந்த நரேந்திர மோதி,” இந்திய ராணுவமும், இந்தியாவின் டிரோன்களும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தின. பஹாவல்பூர், முரிட்கே போன்ற பயங்கரவாத முகாம்கள், ஒருவிதத்தில் உலகளாவிய பயங்கரவாத மையங்களாக இருந்தன. 9/11, லண்டன் டியூப் வெடிகுண்டு, இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்த பயங்கரவாத முகாம்களுடன் தொடர்பு உள்ளன” என்றார்
”இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டவர்களை, இந்தியா ஒரே அடியில் ஒழித்துவிட்டது. இதற்குப்பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காமல், இந்தியாவின் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், பொதுமக்களின் குடியிருப்புகள், ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.” என்றார் மோதி.
பாகிஸ்தானின் தாக்குதல்களை வானத்திலேயே இந்தியா வீழ்த்தியதாக கூறிய மோதி, ”இந்தியாவின் டிரோன், ஏவுகணைகள் துரிதமாக செயல்பட்டு, பாகிஸ்தானின் வான்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது” என்றார்
பட மூலாதாரம், PIB INDIA/YOUTUBE
‘உலகம் முழுவதிலும் சென்று பாகிஸ்தான் முறையிட்டது’
பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று உலகம் முழுவதிலும் சென்று பாகிஸ்தான் முறையிட்டது என்றார் நரேந்திர மோதி
”பாகிஸ்தான் தானே முன்வந்து நமது ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை தொடர்பு கொள்ளும்போது, இந்தியா, பாகிஸ்தானின் பயங்கரவாத இடங்களை சிதிலமாக்கிவிட்டது. பாகிஸ்தானின் தரப்பில் இருந்து எந்தவித பயங்கரவாத மற்றும் ராணுவ நடவடிக்கைகள் இருக்காது என்று கூறியபிறகு தான் நாம் ஒப்புக்கொண்டோம்.” என்றார்
எதிர்காலத்தில், பாகிஸ்தான் எப்படிப்பட்ட நிலையை எடுக்கிறது என்பதன் அடிப்படையில்தான் அந்த நாட்டுடன் விவகாரங்கள் முன்னெடுக்கபடும் என்றார் மோதி.
” ராணுவம் உட்பட முப்படைகளும் முழுமையான தயார் நிலையில் உள்ளன. ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், புதிய கோணத்தை காட்டியது. இந்தியாவின் மீது பயங்கரவாதிகள் தாக்கினால், பதிலைக் கொடுப்போம். பயங்கரவாதத்தின் வேர் தொடங்கும் இடத்திலேயே அதை முடிப்போம். அணு ஆயுத மிரட்டல்களின் பெயரில் பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது” என்றார்
”ஆபரேஷன் சிந்தூர் கொன்ற பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் கலந்துக் கொண்டது மூலமாக அவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை உலகம் பார்த்தது.” என்றார் நரேந்திர மோதி
‘ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது’
உரையை தொடர்ந்த மோதி, ” 21ம் நூற்றாண்டில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களின் தரத்தை உலகம் பார்த்தது. நமது ஒற்றுமை, நம் நாட்டின் மிகப்பெரிய சக்தி ஆகும். உண்மையில், இந்த காலம் போருக்கானது அல்ல. ஆனால், இந்த யுகம், பயங்கரவாதத்துக்கானது அல்ல. மேம்பட்ட உலகிற்கான காலம் இது.
பாகிஸ்தானின் அரசு, ராணுவம் பயங்கரவாதத்தை வளர்த்து வந்தால், பயங்கரவாதமே அந்நாட்டை அழித்துவிடும். நிலைக்க வேண்டுமானால், அந்நாடு அதை அழிக்க வேண்டும், அதைத்தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.” என்றார்
பயங்கரவாதமும், வர்த்தகமும் ஒன்றாக இயங்காது. ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது என்றார் மோதி
பாகிஸ்தான் பிரதமர் கூறியது என்ன?
ஷெபாஸ் ஷரீஃப் மே 10-ஆம் தேதி தனது நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “அனைவரின் நலனுக்காக” சண்டை நிறுத்தம் எட்டப்பட்டதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், டிரம்ப் மற்றும் சீனாவுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும்,” எங்கள் நாடு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என கூறினார்.
”நான் அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது” என்றார் ஷெபாஸ் ஷெரீஃப்
அத்துடன்,”மிகவும் நெருக்கமான, மிகவும் நம்பிக்கைக்குரிய, நல்ல நண்பன் சீனாவுக்கு நன்றி. அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி.” என்றார் அவர்.