• Wed. Apr 16th, 2025

24×7 Live News

Apdin News

அண்ணாமலை அரசியல் எதிர்காலம் என்ன? தமிழ்நாடு அரசியல் சூழல் பற்றிய ஓர் அலசல்

Byadmin

Apr 16, 2025


கே. அண்ணாமலை, பாஜக

பட மூலாதாரம், K Annamalai/X

கடந்த ஏப். 11-ஆம் தேதி நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டார்.

அதற்கு மறுநாள், (ஏப்.12) தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றின் இரண்டாம் ஆண்டு தொடக்க நிகழ்வில் பேசிய கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “முன்பு எனக்கு ஒரு பொறுப்புணர்வும் கட்டுப்பாடும் இருந்தது, இனி நான் ஃப்ரீயாக, அண்ணாமலையாக பேச முடியும். அடித்து ஆட வேண்டிய பாக்ஸிங் கலை அரசியல்வாதிகளுக்குத் தெரிய வேண்டும். இனி பக்குவமாக பேச நயினார் நாகேந்திரன் இருக்கிறார். சிக்ஸர் மட்டும் அடிப்பதுதான் என் வேலை” என பேசியிருந்தார்.

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, இப்படியான அதிரடி பேட்டிகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் இதுவரை இருந்த மாநில தலைமைகளை விட கூடுதலான கவனத்தை பல தரப்பிலிருந்து பெற்றார். 2020-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைந்த அண்ணாமலைக்கு, மிக விரைவிலேயே 2021 ஜூலை மாதம் மாநில தலைமை பொறுப்பு வழங்கப்பட்டதை கட்சிக்குள்ளேயே பலரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

பாஜகவில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியின்படி, மீண்டும் அண்ணாமலை தலைவராக்கப்படலாம் என்ற யூகங்கள் பொய்யாகி, நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். சில வாரங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கூட முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை, அண்ணாமலையை பார்த்து ‘தம்பி வா, தலைமையேற்க வா’ என கூறியிருந்தார்.

By admin