பட மூலாதாரம், Getty Images
இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் நிறுவனங்கள், முந்த்ரா துறைமுகம் வழியாக இரானிய திரவ பெட்ரோலிய எரிவாயுவை (எல்பிஜி) இந்தியாவிற்கு இறக்குமதி செய்தாரா இல்லையா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருவதாக, ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ என்ற அமெரிக்க செய்தித்தாள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால் அதானி எண்டர்பிரைசஸ், இந்த அறிக்கையை “ஆதாரமற்றது” என்று கூறி மறுத்துள்ளது.
“இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறித்து எங்களுக்குத் தெரியாது” என அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்துக்கும், பாரசீக வளைகுடாவுக்கும் இடையில் பயணித்த சில சரக்கு கப்பல்களின் நடவடிக்கைகள், பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கும் கப்பல்கள் வழக்கமாக பயன்படுத்துவதை ஒத்ததாக இருந்தது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இவை, தடையில் இருந்து தப்பிக்க பயன்படுத்தப்படும் வழிமுறைகள் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த விவகாரத்தை நன்கு அறிந்தவர்களின் தகவலை மேற்கோளாகக் கொண்டு, அதானி குழுமத்தின் முக்கியப் பிரிவான அதானி எண்டர்பிரைசஸுக்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பல எல்பிஜி சரக்கு கப்பல்களின் செயல்பாடுகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரானில் இருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மே மாதம் முழுமையான தடை விதித்து உத்தரவிட்டார்.
இரானுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் அல்லது நபரும் உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் அறிவித்த நேரத்தில் இந்த விசாரணை நடைபெறுகிறது.
அறிக்கை என்ன சொல்கிறது?
பட மூலாதாரம், Getty Images
ஆசியாவின் இரண்டாவது பணக்காரரான கௌதம் அதானி, தன் மீதான கடந்த கால குற்றச்சாட்டுகளை நிராகரிக்க முயற்சிப்பதாக அமெரிக்கன் ஜர்னல் தனது அறிக்கையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், அமெரிக்காவில் கௌதம் அதானி மீது மோசடி மற்றும் லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புரூக்ளினில் உள்ள அமெரிக்க அட்டர்னி அலுவலகம் நடத்தும் விசாரணை அதானிக்கு பெரும் சவாலானதாக மாறக்கூடும் என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
அதானி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவர் என்றும் செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு தொடக்கத்தில் முந்த்ரா துறைமுகத்திலிருந்து பாரசீக வளைகுடாவிற்குச் செல்லும் கப்பல்களின் நகர்வுகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.
கப்பல்களை கண்காணிக்கும் நிபுணர்கள் கூறுகையில், கப்பல்களின் நகர்வுகளைக் கண்காணிக்கும் போது, பொதுவாக தங்களது அடையாளத்தை மறைத்து இயக்கும் கப்பல்கள் பயன்படுத்துவதைப் போன்ற சில நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எல்பிஜி சரக்கு கப்பல்களைக் கண்காணிக்கும் லாயிட்ஸ் லிஸ்ட் இன்டலிஜென்ஸில் கடல்சார் ஆபத்து ஆய்வாளராக இருக்கும் டோமர் ரானன், கப்பலின் உண்மையான இருப்பிடம் அல்லது அடையாளத்தை மறைக்க, கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) மீது குறுக்கீடு செய்வது பொதுவான முறை என்று விளக்குகிறார்.
கப்பலின் நிலை குறித்த தகவல்களை வழங்கும் அமைப்பு தான் இந்த தானியங்கி அடையாள அமைப்பு (AIS).
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதானிக்காக எல்பிஜியை எடுத்துச் சென்ற பனாமா கொடியுடன் கூடிய எஸ்எம்எஸ் பிரதர்ஸ் சரக்குக் கப்பலில் இதேபோன்ற செயல்முறை காணப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது.
லாயிட்ஸ் லிஸ்டின் கடல் தேடல் தளத்தைப் பயன்படுத்தி கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பை (AIS) ஆய்வு செய்த இந்த இதழ், அந்தக் கப்பல் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி தெற்கு இராக்கில் உள்ள கோர் அல்-ஜுபைரில் நங்கூரமிட்டிருப்பதைக் கண்டறிந்தது.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், இராக்கில் எஸ்எம்எஸ் ப்ரோஸ் (SMS Bros) அதன் இருப்பிடத்தில் காணப்படவில்லை என அறிக்கை கூறுகிறது.
எனினும், இராக்கின் டோன்புக் பகுதியில் உள்ள எல்பிஜி முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, எஸ்எம்எஸ் ப்ரோஸுடன் பொருந்தக் கூடிய ஒரு கப்பலின் படங்களை செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது.
இந்தச் செய்தி அறிக்கையில், செயற்கைக்கோள் படங்களைப் பகுப்பாய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளனர். இரானில் நின்ற கப்பல் உண்மையில் எஸ்எம்எஸ் ப்ரோஸ் (SMS Bros) தான் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதானி குழுமம் பதில்
பட மூலாதாரம், Getty Images
வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கை குறித்து, அதானி குழுமம் மும்பை பங்குச் சந்தைக்கு தகவல் அளித்துள்ளது.
“அதானி குழும நிறுவனங்களுக்கும், இரானிய எல்பிஜிக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை ஆதாரமற்றது. இரானிய எல்பிஜி தொடர்பான தடைகளைத் தவிர்க்க அல்லது அதில் ஈடுபட திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகள் நடத்தும் எந்த விசாரணையும் எங்களுக்குத் தெரியாது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை முற்றிலும் தவறான கணிப்புகள் மற்றும் ஊகங்களை அடிப்படையாகக் கொண்டது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
“அதானி குழுமம் இரான் மீதான அமெரிக்கத் தடைகளை வேண்டுமென்றே மீறுகிறது என்ற கூற்றை நாங்கள் மறுக்கிறோம். கொள்கை ரீதியாக, அதானி குழுமம் அதன் எந்த துறைமுகத்திலும் இரானிய சரக்குகளைக் கையாளுவதில்லை. இதில் இரானில் இருந்து வரும் எந்தவொரு பொருளோ அல்லது இரானியக் கொடியின் கீழ் இயங்கும் கப்பல்களும் அடங்கும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“இரானியர்களுக்குச் சொந்தமான எந்தவொரு கப்பலையும் அதானி குழுமம் நிர்வகிக்கவோ அல்லது எந்த வசதிகளையும் வழங்கவோ இல்லை. இந்தக் கொள்கை எங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது.”
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கப்பல், நேரடியாக தங்களால் கையாளப்படவில்லை, மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது என்றும் அதானி குழுமம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கப்பல் ஓமனின் சோஹர் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது என்பதை காட்டும் ஆவணங்களால் இந்தக் கூற்றை அக்குழுமம் உறுதிப்படுத்துகிறது.
எஸ்எம்எஸ் ப்ரோஸ் உள்ளிட்ட எந்தக் கப்பலையும் இயக்கவில்லை என்றும், அவை எங்களுடைய சொத்துகள் அல்ல என்று அதானி எண்டர்பிரைசஸ் தெரிவித்துள்ளது. எனவே, இந்தக் கப்பல்களின் தற்போதைய அல்லது கடந்த கால நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்காவில் அதானிக்கு எதிரான பழைய வழக்குகள்
பட மூலாதாரம், ANI
கடந்த ஆண்டு, அமெரிக்காவில் தனது நிறுவனங்களில் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெறுவதற்காக அதானி 250 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் வழங்கி, அந்த விஷயத்தை மறைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம், அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்றும் கூறியது.
அமெரிக்காவில் இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முதல் இந்தியத் தொழிலதிபர் அதானி தான்.
கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் மற்றும் மேலும் 6 பேர் மீது , சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டதாக, நியூயார்க்கின் கிழக்கு மாகாணத்துக்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தனது அறிக்கையில் கூறியிருந்தது.
கௌதம் அதானியின் சில பிரதிநிதிகள் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் சில அதிகாரிகளைச் சந்தித்ததாகவும், அதில் கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளைத் தள்ளுபடி செய்வது குறித்து விவாதம் நடந்ததாகவும், கடந்த மாதம் தான் புளூம்பெர்க் தனது அறிக்கைகளில் ஒன்றில் கூறியது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னலும் தனது அறிக்கையில் இந்த சந்திப்பைக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் அதானி குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது.
இதில், அதானி குழும உரிமையாளர்களான கௌதம் அதானி மற்றும் வினோத் அதானி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அதானி குழுமத்தின் உரிமையாளர் கௌதம் அதானி, 2020 முதல் தனது 7 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை மோசடி செய்து 100 பில்லியன் டாலர்கள் சம்பாதித்ததாக அந்த அறிக்கை குற்றம்சாட்டியது.
கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மீதும் அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவர் 37 போலி நிறுவனங்களை நடத்தி வருவதாகவும், அவை பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அறிக்கை வெளியான ஒரு மாதத்திற்குள், அதானியின் நிகர சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக அல்லது ரூ.6.63 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது. உலகின் முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் கௌதம் அதானி வெளியேறினார்.
ஆனால், இந்த ஆண்டு ஜனவரியில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு