கோவை: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
கோவை சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று பொதுமக்களிடையே அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கோவையில் தொழில் வளம் சிறப்பாக இருந்தது. 3 ஷிப்ட்களில் தொழிலாளர்கள் பணியாற்றினர். தற்போது ஒரு ஷிப்ட்டில் மட்டும்தான் பணியாற்றுகின்றனர். அதிமுக ஆட்சியில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு பணிகள் முடிவு பெறும் நிலையில், திமுக ஆட்சியில் திட்டம் முடங்கிவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் விமான நிலைய விரிவாக்கப்பணி முடிக்கப்படும்.
கோவையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்புப் பணி அதிமுக ஆட்சியில் தொடங்கியநிலையில், அத்திட்டத்தை முடக்கி வைத்துள்ளனர். திமுக ஆட்சியில் புதிதாக எந்த திட்டத்தையும் தொடங்கவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர்ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை.
தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. சொத்துவரி, மின் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை தொழில் நிறுவனத்தினர் வேறு மாநிலத்துக்கு செல்கின்றனர். கட்டுமானப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏ-க்கள் அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.