-
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
-
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அ.தி,மு.க. தலைவர்கள் முன்பாகவே திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்த விமர்சன படம் திரையிடப்பட்டதும் அடுத்த நாளே ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு விழா நிகழ்வு நடந்த இடத்துக்கு அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வந்திருந்ததும், அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். குறித்து முந்தைய அதிமுக முதலமைச்சர்கள் என்ன நினைத்தார்கள்? ஆர்எஸ்எஸ் மீதான எம்ஜிஆர், ஜெயலலிதா அணுகுமுறை எப்படி இருந்தது?
முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக தலைவர்கள்
மதுரையில் இந்து முன்னணியின் சார்பில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு, ஆளும் தி.மு.கவுக்கு நெருக்கடியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் நடந்த சில நிகழ்வுகள் எதிர்க்கட்சியான அ.தி.மு.கவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த முருக பக்தர்கள் மாநாட்டுக்கு, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்த போதே, அது குறித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கேள்வியெழுப்பின. ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த அந்த மாநாட்டில் அ.தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், அமைப்புச் செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா, அதிமுக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் ராஜ் சத்யன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் இந்து முன்னணி தயாரித்த வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அந்தப் படத்தில், பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிடக் கட்சித் தலைவர்களை விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
‘தர்மம் காக்க, அதர்மம் அகற்ற’ என்ற வார்த்தைகள் இடம்பெற்ற காட்சியில், ‘தர்மம்’ என்ற வார்த்தை ஒலிக்கும்போது இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலனின் படமும் ‘அதர்மம்’ என்ற வார்த்தை ஒலிக்கும்போது பெரியார், அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தன.
முருகன் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் மேடையில் அமர்ந்திருந்த போதே, முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை குறித்தும் பெரியார் குறித்தும் விமர்சனத்துடன் கூடிய காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதும் அதற்கு அ.தி.மு.கவைச் சார்ந்தவர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காததும் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது குறித்துப் பேச செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் போன்றவர்களை அணுக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெயரைக் குறிப்பிட விரும்பாத அ.தி.மு.க. தலைவர் ஒருவர், “தோழமைக் கட்சி நடத்தும் மாநாடு என்ற உணர்விலும் சொந்த மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வு என்ற முறையிலும் இதில் பங்கேற்றோம். நாங்கள் மேடையில் இருந்தோம். அங்கிருந்து பார்த்தபோது, அந்த வீடியோவில் என்ன ஒளிபரப்பானது என்பது அந்தத் தருணத்தில் தெளிவாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அங்கேயே எதிர்வினையாற்றியிருக்கக் கூடும். இது ஏற்கத்தக்கதல்ல” என்று மட்டும் கூறினார்.
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போது, “அண்ணா போன்ற தலைவர்களை அவ்வாறு கூறியதைத் தவிர்த்திருக்கலாம்” என்று மட்டும் சொன்னார்.
அ.தி.மு.க. ரத்தமா? பா.ஜ.க. பாசமா? – திமுக கேள்வி
ஆனால், எதிர்க்கட்சியான அ.தி.மு.கவை விமர்சிக்கக் கிடைத்த இந்த வாய்ப்பை தி.மு.க. விடுவதாயில்லை. திங்கட்கிழமை முழுவதும் சேகர் பாபு, ரகுபதி உள்ளிட்ட தி.மு.கவின் அமைச்சர்களும் ஆர்.எஸ். பாரதி போன்ற கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களும் இந்த விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.கவை கடுமையாக விமர்சித்தனர்.
“அண்ணாவைக் கேவலப்படுத்துவதை ‘அண்ணா’ என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அ.தி.மு.க. ரத்தமா? பா.ஜ.க. பாசமா? அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துகளைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள். இன்றைக்கு எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிமுகவில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இந்த அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறார்கள்” எனக் கடுமையாக அறிக்கை மூலம் விமர்சித்தார் ஆர்.எஸ். பாரதி.
இந்த விவகாரம் தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளாகிக் கொண்டிருந்த அதே நேரத்தில் கோயம்புத்தூர் பேரூர் ஆதினத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நுாற்றாண்டு விழாவில் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றார். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
இது குறித்தும் தி.மு.க. கேள்வியெழுப்பியது. “1956ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெறாத ஒரு சம்பவத்தைச் சொல்லி அண்ணாவை விமர்சித்தார் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலை. அதற்கு எதிர்வினை ஆற்றிய அ.தி.மு.க. இன்றைக்கு எங்கே ஓடி ஒளிந்து கொண்டது? நேற்று முருகன் மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டால், இன்றைக்குக் கோவையில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்கிறார். அடுத்து நாக்பூரில் எடப்பாடி பழனிசாமி தஞ்சம் அடைவாரா?” எனக் கேட்டிருந்தார் ஆர்.எஸ். பாரதி.
அதிமுக – பாஜக உறவு எவ்வாறு இருந்துள்ளது?
பட மூலாதாரம், X/AIADMK
எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லாத காலகட்டத்தில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் தேதி, கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் துவக்கிவைத்தார். அடுத்த இரு நாட்களில் அவர் வகித்துவந்த அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்தும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். பிறகு நவம்பர் மாதத்தில், இந்த நிகழ்வு தொடர்பாக வருத்தம் தெரிவித்ததால், மீண்டும் அவருக்கு அதே பொறுப்புகள் வழங்கப்படுவதாக அறிவித்தார் எடப்பாடி கே. பழனிசாமி.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் பா.ஜ.க. மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தியது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான விஜயகுமார் அதில் பங்கேற்று, கையெழுத்திட்டார். இதையடுத்து, அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார் எடப்பாடி கே. பழனிசாமி.
“திராவிட இயக்கத் தலைவர் மீதான விமர்சனத்தை ஏற்க முடியாது”: அ.தி.மு.க.
இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், இது குறித்து அ.தி.மு.கவின் ஐ.டி. விங் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் “திராவிடத்தை அழிக்க முருகா வா என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா? திராவிடம் என்ற கொள்கையைத் தான் யாராவது அழித்துவிட முடியுமா? அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் திராவிடத்தை வலுவற்ற கொள்கை போல கட்டமைக்க முயலும் தி.மு.கவின் சதிச்செயல் கடும் கண்டனத்துக்குரியது.
எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே அந்த மாநாட்டில் கலந்து கொண்டனரே தவிர எந்தவித அரசியல் நோக்கத்திலும் அல்ல. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மேலும், “அதே போல் அந்த மாநாட்டில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு அதிமுகவின் சார்பில் எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். உண்மையில் அப்படிப்பட்ட வீடியோ வெளியிட்டதாக எங்கள் கவனத்துக்கு வரவோ, நாங்கள் யாரும் பார்க்கவோ இல்லை. மாநாடு முடித்து வந்த பிறகே இதுபற்றிய செய்திகள் வாயிலாக தான் நாங்களும் அறிந்து கொண்டோம்.” என அதில் கூறப்பட்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ் விழாவில் வேலுமணி?
அடுத்ததாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “எனது தொகுதிக்கு உட்பட்ட பேரூர் ஆதினத்தின் மகா சன்னிதானம் சாந்தலிங்க அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கு மருதாச்சல அடிகளார் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பின் பெயரில் அதில் பங்கேற்றேன். பேரூர் ஆதினத்தின் நிகழ்வுகளில் நான் ஆண்டுதோறும் பங்கேற்பது உண்டு என்ற அடிப்படையில் இந்த நூற்றாண்டு நிகழ்விலும் பங்கேற்றேன். அதே விழாவுக்கு மோகன் பகவத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவரும் வந்திருந்தார். ஆர்.எஸ்.எஸ்சின் நூற்றாண்டு விழாவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று விளக்கமளித்தார்.
ஆர்.எஸ்.எஸ்சின் நூற்றாண்டு விழாவும் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவும் ஒன்றாக இணைத்தே நடத்தப்பட்டதாக மேடையிலேயே குறிப்பிடப்பட்டிருந்தும் இதுபோன்ற ஒரு விளக்கத்தை அளித்தார் எஸ்.பி. வேலுமணி.
நடந்திருக்கும் ஒட்டுமொத்த நிகழ்வும் அ.தி.மு.க. பலவீனப்பட்டு வருவதையே காட்டுகிறது என்கிறார், மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.
“டி.கே.சியின் மணிவிழாவுக்காக இலஞ்சி முருகன் கோவிலுக்கு பெரியார் போயிருக்கிறார். காமராஜர் கூட தி.நகர் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த ஆர்.எஸ்.எஸ். விழாவுக்குப் போயிருக்கிறார். ஆனால், அங்கு போய் தங்கள் இயக்க முன்னோடிகள் விமர்சிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பதுதான் பிரச்னை. முருகன் மாநாடு ஒரு அரசியல் மாநாடு என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்த ஒன்றுதான். அவர்கள் அதை வாக்குகளைத் திரட்டவே செய்தார்கள். வெளிப்படையாகவே செய்தார்கள். அதில் அ.தி.மு.க. பங்கேற்றதுதான் சிக்கலானது. அவர்களைப் பொருத்தவரை, பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் இணைந்து போட்டியிட்டால் கொங்கு மண்டலத்தில் சில இடங்களைக் கட்டாயம் வென்றுவிடலாம் என நினைக்கிறார்கள். அதற்காக இவ்வளவு இறங்கிவர வேண்டுமா?” என்கிறார் ஷ்யாம்.
“எஸ்.பி. வேலுமணியைப் பொறுத்தவரை, ஆர்.எஸ்.எஸ். விழாவுக்கு செல்லவில்லை என மறுத்தாலும் எடப்பாடி கே. பழனிசாமியின் அனுமதியுடனேதான் சென்றிருக்க வேண்டும்; பொதுச் செயலாளரின் அனுமதியில்லாமல் சென்றிருக்க வாய்ப்புக் குறைவு” என்கிறார் ஷ்யாம்.
ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருக்கடி அளித்த ஜெயலலிதா
பட மூலாதாரம், Getty Images
அ.தி.மு.கவின் நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரனும் அவருக்கு அடுத்தபடியாக கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஜெ. ஜெயலலிதாவும் தாங்கள் முதலமைச்சர்களாக இருந்த காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளுடன் சற்று விலகல் போக்கையே கடைப்பிடித்தனர்.
ஜெ. ஜெயலலிதா, 2011ல் முதலமைச்சரான பிறகு 2016ல் உயிரிழக்கும் வரை ஆர்.எஸ்.எஸ். தொடர்பான விவகாரங்களில் கடுமையாகவே நடந்துகொண்டார். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுத்தார். நீதிமன்றங்கள் அனுமதி அளித்தால்கூட, உடனடியாகத் தடை வாங்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டது அவரது தலைமையிலான அரசு.
இருந்தபோதிலும் 1993ல் சென்னை சேத்துப்பட்டில் இருந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவெடித்து, அந்த அலுவலகம் முழுமையாக சேதமடைந்த போது, அதனைக் கட்டித்தர அப்போது முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா முன்வந்ததாக விஸ்வ சம்வாத் கேந்திரா இணையதளம் குறிப்பிடுகிறது.
ஆர்.எஸ்.எஸ்.சை விமர்சித்த எம்.ஜி.ஆர்
பட மூலாதாரம், ADMK
அ.தி.மு.கவின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி. ராமச்சந்திரன், ஆர்.எஸ்.எஸ். மீது தடை விதிக்க செய்ய வேண்டியதைச் செய்வோம் என ஒரு கட்டத்தில் குறிப்பிட்டார்.
1982ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையின் மானியக் கோரிக்கை மீது பேசிய அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன், “(மண்டைக்காடு கலவரத்தின் பின்னணியில்) ஆர்.எஸ்.எஸ்சுக்கு தடை விதியுங்கள் எனக் கேட்கிறார்கள். இந்தக் கோரிக்கையை எங்கே வைக்க வேண்டும் என்று சட்டம் படித்தவர்களுக்குத் தெரியும். தடையை விதிப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை இந்த மன்றத்தில் உள்ளவர்கள் உதவியால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “இந்து முன்னணியினர் தேவையில்லாமல் பேரணி நடத்துவது நாட்டுக்கு நன்மை பயக்காது. அவர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகள் தவறு செய்கிறார்கள். மடாதிபதிகள், குன்றக்குடி அடிகளாரைப் பின்பற்ற வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஏதோ பயிற்சியளிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு செய்யும் செயல்களை அனுமதிக்க முடியாது. அவர்கள் அதை நிறுத்திவிட வேண்டும். அரசே என்.சி.சி. போன்ற பயிற்சிகளைத் தருகிறது” என்று குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், ADMK
மேலும் 1983ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., ஆர்.எஸ்.எஸ். குறித்தும் இந்து அமைப்புகள் குறித்தும் கடுமையான கருத்துகளை முன்வைத்தார். ஆர்.எஸ்.எஸ்சுக்கு தடை விதிக்கப்படுமா என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர். “தில்லியில் நேற்று நான் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தேன். அப்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இந்து மஞ்ச் என்ற இயக்கத்தைச் சேர்ந்த 15, 16 பேர் அங்கு வந்தனர். நாகர்கோவிலில் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் இறந்து போய்விட்டார்களாமே அது பற்றி பேச வந்துள்ளோம் என்றார்கள். ஏற்கெனவே நேரம் குறித்தபடி, மத்திய அமைச்சரைப் பார்க்கப் போகிறேன். இப்போதைக்கு நேரமில்லை. சென்னைக்கு வாருங்கள். பேசுவோம் எனக் கூறினேன். அவர்கள் எம்.ஜி.ஆர். ஒழிக என கோஷம் போட்டார்கள். இப்படிப்பட்ட நடைமுறைதான் ஆர்.எஸ்.எஸ். நடைமுறையா?
நேரம் குறித்துக் கொள்ளாமல் திடீரென வந்து உண்மைக்கு மாறான தகவலைக் கூறிக் கொண்டு இப்போதே பேச வேண்டுமெனக் கேட்பது என்ன நியாயம்? அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை அவர்கள் தள்ளிவிட்டனர். இப்படி ஒரு அமைப்பு, அது ஆர்.எஸ்.எஸ். என்றாலும் அல்லது வேறு எந்த அமைப்பு என்றாலும் அது பெருமை தரத்தக்க செயல் அல்ல. இதன் மூலம் இந்து மதத்தைக் காக்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பற்றி மற்றவர்கள் கூறியவற்றை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படிப்பட்ட செயல்கள் நல்லதல்ல. இந்து முன்னணியில் ஆதிக்கம் செலுத்துவது ஆர்.எஸ்.எஸ்சா அல்லது ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்து முன்னணியில் உள்ளனரா? இதுதான் கட்டுப்பாடு, ஒழுங்கா என்ற கேள்விகள் எழுகின்றன” என்று தெரிவித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு