செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோதி பங்கேற்றுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலை தனித்தனியே கூட்டணி அமைத்து சந்தித்த அதிமுகவும் பாஜகவும் அதன் பிறகு மீண்டும் இணைந்தன. இரு கட்சிகளும் இணைந்தே வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கப் போவதாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதமே மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா அறிவித்தார்.
இதையடுத்து, பெரிதாக வேறெந்த கட்சிகளும் இந்த கூட்டணியில் இணையாத நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இக்கூட்டணியில் இணைந்தார்.
இந்நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்காக சமீபத்தில் தமிழகம் வந்திருந்தார் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல். இவருடைய முன்னிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஜனவரி 21 அன்று அக்கூட்டணியில் இணைந்தார்.
“எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் கூட்டணியில் தான் இருக்க மாட்டேன்” என தொடர்ந்து கூறிவந்த டிடிவி தினகரன் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தார்.
இந்த நிலையில்தான், தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், அக்கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பட மூலாதாரம், Narendra Modi/ Youtube
டிடிவி தினகரன் கூறியது என்ன?
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் விரோத, குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த கூட்டணியில் நாங்கள் வரவேண்டும் என பிரதமர் மோதி விரும்பினார். எடப்பாடி பழனிசாமியை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு இந்த கூட்டணிக்கு வந்திருக்கிறோம்.” என்றார்.
மேலும்,” நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள், எம்ஜிஆர் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவு இருந்தது உண்மைதான். மனதில் இருந்த கோபங்களை விட்டுவிட்டு, 2021-ல் அமைக்க முடியாமல் போன ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் உருவாக்கிட எந்தவொரு தயக்கமும் இன்றி, எந்த அழுத்தமும் இன்றி அமமுக இந்த கூட்டணியில் இணைந்துள்ளது. ”என்றார்
”அமமுகவின் தொண்டர்கள் இதற்காக பாடுபடுவார்கள். இந்த உறுதியை மோதிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அளிக்கிறேன். (அதிமுகவுடன்) எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மைதான். ஆனால், அவற்றை தூக்கியெறிந்துவிட்டு, ஜெயலலிதா-எம்எஜிஆர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ளோம்.” என்றார்.
பட மூலாதாரம், Narendra Modi/ Youtube
அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று ஒரு தொடக்கம். தகுதியில்லாத, நேர்மையில்லாத திமுக அரசை விரட்டியடிக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த 13% வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.” என்றார்.
ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை தங்கள் அரசு நிறைவேற்றிவிட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கூறியிருந்தார்.
பட மூலாதாரம், Narendra Modi/ Youtube
‘குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி’ – எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “இந்த ஆட்சியில் திமுக மக்களுக்கு கொடுத்தது வேதனைதான். ஒரு குடும்பம் வாழ எட்டு கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். இப்போது ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். பின்னர், உதயநிதி ஸ்டாலின் வர வேண்டும் என ஸ்டாலின் எண்ணுகிறார். கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குதான் கட்சியிலும் ஆட்சியிலும் இடம். எந்தவொரு தகுதியும் இல்லாத உதயநிதி எம்எல்ஏ ஆனார், பிறகு அமைச்சர், இப்போது துணை முதல்வர் ஆக்கப்பட்டிருக்கிறார். இந்த தேர்தல்தான் திமுகவுக்கு இறுதி தேர்தல்.” என்றார்
மேலும், ”இந்த கூட்டணி வலிமையான கூட்டணி. கூட்டணி கட்சி தொண்டர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கொடி நாட்டுவோம். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. இக்கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமையும். அதிமுக ஆட்சிக் காலத்தில் நாங்கள் கேட்ட திட்டங்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றிக் கொடுத்தது.
அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இது இந்தியாவில் வேறெங்கும் நடக்காதது. நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம். கேட்ட திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. திமுக ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே மத்திய அரசை குறை கூறுகிறது.” என தெரிவித்தார்.