தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி குறித்த தனது கருத்தை மீண்டும் தெளிவுபடக் கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் வேட்பாளர் பற்றி குறிப்பிட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார் என்று கூறிய அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்ததே அந்த சர்ச்சைக்கு காரணம்.
அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவானதில் இருந்தே பாஜகவின் இரும்புப் பிடியில் அதிமுக சிக்கிவிட்டதோ என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், அமித் ஷாவின் கருத்து பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டது. அதேநேரத்தில், அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாற்றப்பட்டது கூட்டணியில் அதிமுகவுக்கு இருக்கும் செல்வாக்கிற்கு எடுத்துக்காட்டு என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
அதிமுக – பாஜக கூட்டணியில் என்ன நடக்கிறது?
அதிமுக – பாஜக மீண்டும் கூட்டணி
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுகவும் பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலை தனித்தனியாக எதிர்கொண்டன. கூட்டணி முறிந்துபோன அறிவிப்பை கொண்டாடும் குரல்கள் இரு தரப்பிலுமே எழுந்தன. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு கால பிரிவுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக – பாஜக கூட்டணி உயிர்ப்பிக்கப்பட்டது.
அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று அமித்ஷா தெரிவிக்க, பாஜகவும் பங்கேற்கும் கூட்டணி ஆட்சியா, அதிமுக தலைமையில் தனிப் பெரும்பான்மை ஆட்சியா ? என்ற கேள்வி எழத் தொடங்கியது. கூட்டணி ஆட்சி என்ற பதம் தம்மை பலவீனப்படுத்தும் என்று கருதிய அதிமுக அந்த கருத்தில் இருந்து விலகி நின்றது.
பாஜகவுடனான கூட்டணி என்பது திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கும் என்று அதிமுகவினர் நினைக்கிறார்கள். ஆனால் பாஜகவுடன் கொள்கை அணியாக அதை முன்னிறுத்துவதில் அதிமுகவிற்கு தயக்கங்கள் உள்ளன. கூட்டணியில் பெரிய கட்சியாக அதிமுக இருப்பதால், கூட்டணிக்கு தலைமையேற்று தொகுதிப் பங்கீடுகளை முடிவு செய்யும் என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியிருந்தார்.
மதுரையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கெடுத்தார்கள். ஆனால், மாநாட்டின் நிகழ்ச்சிகள் தனது ‘மதச்சார்பற்ற’, ‘திராவிட’ அடையாளத்திற்கு ஆபத்தாகும் என்று கருதிய அவர்கள், முருக பக்தர்கள் என்ற முறையில் மட்டுமே மாநாட்டுக்குச் சென்றதாக கூறி பின்வாங்கினர்.
முருக பக்தர்கள் மாநாடு நிகழ்வில் வெளியிடப்பட்ட வீடியோவை குறிப்பிட்டு, திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறார்கள், அதை அதிமுகவினர் வேடிக்கைப் பார்க்கிறார்கள். அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது” என்று விமர்சித்தார்.
ஊடகங்களில் பேசிய அதிமுக தலைவர்கள், “அந்த வீடியோவை வெளியிட்டிருக்கக் கூடாது, முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை அதிமுக ஏற்கவில்லை” என்று விளக்கம் அளித்தனர். இதே போன்றதொரு சர்ச்சையின் காரணமாகவே கூட்டணியில் இருந்து அதிமுக முன்பு வெளியேறியதாக அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் கூறினார்.
கூட்டணி ஆட்சி சர்ச்சை
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி பற்றிய சர்ச்சையை மத்திய உள்துறை அமித்ஷா மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜனதா கட்சியின் பங்கு இருக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதல் அமைச்சர் அதிமுகவிலிருந்து வருவார்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி முன்பே தெரிவித்திருந்த நிலையில், அமித்ஷா இப்படி பேசியிருப்பது அதிமுகவுக்கு அளிக்கப்படும் நிர்பந்தமாகவே அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியின் பெயரை ஏன் நேரடியாக அவர் கூறவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இருப்பினும் அமித்ஷா கூறியது கூட்டணி ஆட்சியே இல்லை என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். பெயர் குறிப்பிட விரும்பாத அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவர், “அமித் ஷா கூறியது கட்சிகளின் ஆதரவு பற்றியது, நிர்வாகத்தில் பங்கு அல்ல. எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்யும் நோக்கிலேயே இதை கையில் எடுத்துள்ளார்கள்” என்றார்.
அதிமுக மூத்த செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், “அமித் ஷா மிக தெளிவாக கூறியுள்ளார் அதிமுக தான் தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது என்று. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான் என்று தெரிந்த பிறகு எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குழப்பம் செய்கின்றன.” என்றார்.
ஜெயலலிதா மறைந்த போது ஆளுங்கட்சியாக வலுவாக இருந்த அதிமுக, உட்கட்சி பிரச்னைகள், தொடர் தேர்தல் தோல்விகள் என அரசியல் களத்தில் தடுமாறுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த பிறகு, 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட இடங்களில் 23.5% வாக்குகளையும் பாஜக கூட்டணியாக 19.8% வாக்குகளையும் பெற்றிருந்தது. அதிமுக 24 தொகுதிகளில் இரண்டாம் இடத்தையும் ஒன்பது தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும் பிடித்திருந்தது. அதே நேரம் பாஜக, ஒன்பது தொகுதிகளில் இரண்டாம் இடமும், 13 தொகுதிகளில் மூன்றாம் இடமும் பிடித்திருந்தது. (தேர்தல் ஆணையத்தின் இணையதள புள்ளிவிவரம்)
அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியின் பலவீனமே பாஜகவுக்கு பலமாக அமைந்துள்ளது என்கிறார், திமுக மூத்த தலைவர் டி கே எஸ் இளங்கோவன். “பாஜகவுடனான கூட்டணி அதிமுகவுக்கு தேவையில்லை, எடப்பாடி பழனிசாமிக்கு தான் தேவைப்படுகிறது. அவரது மகன், நண்பர்கள் உட்பட பலரை காப்பாற்றுவதற்காக. களத்தில் அதிமுக தொண்டர்கள் இந்த கூட்டணி குறித்து சந்தோசப்படவில்லை. அவர்களுக்கு இந்த கூட்டணி வேண்டாம். ஜெயக்குமார் (முன்னாள் நிதியமைச்சர்) போன்ற தலைவர்கள் அதை வலுவாகவே கூறினார்கள்” என்று கூறுகிறார். அதே நேரம், பாஜகவுக்கு இந்த கூட்டணி அவசியமாகிறது என்கிறார் அவர். “நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் இடத்தில் கூடுதலாக ஒரு உறுப்பினர் கிடைத்தால் கூட லாபம் தானே என்று பாஜக நினைக்கிறது” என்றார்.
பட மூலாதாரம், X/AIADMK
அதிமுக-பாஜக விலகி நிற்கும் விவகாரங்கள் எவை?
சி.ஏ.ஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்த அதிமுக, வக்பு வாரிய சட்ட திருத்தம், மும்மொழிக் கொள்கை, நீட் தேர்வு ஆகிய அம்சங்களில் பாஜகவுடன் முரண்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக அண்ணாமலை முன்வைத்த கருத்துக்கள், பெரியார், அண்ணா மீதான விமர்சனங்கள் அவ்வப்போது அதிமுகவுக்கு நெருடலை கொடுத்துள்ளது. இதனால் பாஜகவுடனான கூட்டணியை தொகுதி உடன்பாடு என்ற நிலையில் நிறுத்திக் கொள்ளவே அதிமுகவினர் விரும்புகிறார்கள். ஆனால், பாஜகவின் பிடி இறுக்கமாக இருப்பதால் அதிமுகவால் அதை உரக்கச் சொல்ல முடியவில்லை என்று விமர்சனங்கள் தொடர்கின்றன.
இந்த விமர்சனங்கள் குறித்து கேட்ட போது, ” காங்கிரஸ் -திமுக இடையே கருத்து வேறுபாடுகள் இல்லையா? மேகதாது விவகாரத்தில் இரு கட்சிகளும் ஒரே நிலைப்பாடு கொண்டுள்ளனவா? காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றுவார்களா? நாங்கள் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டவே இந்த கூட்டணியை அமைத்துள்ளோம்” என்று கூறுகிறார் அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன்.
” இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த பிறகு மூன்றாவது முறை ஆட்சியை குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே இழந்தோம். இந்த முறை அப்படி எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்று தான் கூட்டணி அமைத்துள்ளோம். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட, 2024-ம் ஆண்டு தேர்தலில் எங்கள் வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தது. களத்தில் அதிமுகவும் பாஜகவும் கைகோர்த்து நிற்கின்றன” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், NARAYANAN THIRUPATHY /X
படக்குறிப்பு, பாஜக மாநில பொதுச் செயலாளர் நாராயணன் திருப்பதி
‘அதிமுக-பாஜக கூட்டணி வலுவடைந்து வருவதை திமுகவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதிமுகவுக்கு எந்த தர்ம சங்கடமான நிலையும் ஏற்படவில்லை.’ என்று கூறிய பாஜக மாநில பொதுச் செயலாளர் நாராயணன் திருப்பதி “சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாத விசிக, மிகக் குறைந்த தொகுதிகளை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் தான், அதிமுக பாஜகவிடம் சிக்கியிருப்பதாக பேசுகிறார்கள்.” என்று பதிலடி தருகிறார்.
அதிமுக – பாஜக கூட்டணியில் பாஜகவின் கை ஓங்கியுள்ளதா என்று கேட்டதற்கு பதிலளித்த கோவை சத்யன், “அதிமுக-பாஜக கூட்டணி வேண்டும் என்று யார் கேட்டது? பாஜக தானே. கடந்த முறை கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்ட போது என்ன நடந்தது? நாங்கள் வெளியேற தயங்க மாட்டோம் என்று அவர்களுக்கு தெரியும்” என்றார்.