பட மூலாதாரம், American marin VANO SHLAMOV AFP via Getty Images
படக்குறிப்பு, இரான் நாட்டில் தரைவழித் தாக்குதலைத் தொடங்க அமெரிக்கா தயாராகி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது (கோப்புப் படம்).
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்தியாவிலுள்ள இரான் தூதரகம், ‘தெஹ்ரான் டைம்ஸ்’ பத்திரிகையின் ஒரு சிறப்புப் பதிப்பின் பக்கத்தைப் பகிர்ந்துள்ளது.
தெஹ்ரான் டைம்ஸின் அந்தப் பக்கத்தின் தலைப்பே ‘நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்’ என்பதுதான். அதில், “இரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் மட்டுமே திரும்புவார்கள்” என்றும் எழுதப்பட்டுள்ளது.
முன்னதாக, பென்டகன் இரான் மீது பல வாரங்களுக்கு தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஆங்கில இதழ் எழுதியிருந்தது.
“பேச்சுவார்த்தை ஒருபுறம், தாக்குதல் சதி மறுபுறம்”
பட மூலாதாரம், Ghalibaf NurPhoto via Getty Images
படக்குறிப்பு, இரான் சரணடைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த இரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், இரான் “அவமானத்தை” ஏற்காது என்று கூறினார் (கோப்புப் படம்).
இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் விடுத்த செய்தியை இரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ உள்ளிட்ட பல இரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
போர் தொடங்கி 30 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி விடுத்த இந்தச் செய்தியில் காலிபாஃப் கூறுகையில், “எதிரி பகிரங்கமாகப் பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளைத் தருகிறது, ஆனால் திரைக்குப் பின்னால் தரைவழித் தாக்குதலுக்கான சதியைத் தீட்டுகிறது” என்றார்.
மேலும் அவர், அமெரிக்கா “போரின் மூலம் அடைய முடியாத 15 அம்சப் பட்டியலுடன் தனது விருப்பங்களை முன்வைக்கிறது” என்றும் கூறினார்.
” அவர்கள் மீது நெருப்பை மழை எனப் பொழிவதற்காக அமெரிக்க வீரர்கள் தரை இறங்குவதற்காக இரான் படைகள் காத்திருக்கின்றன, ” என்றும் காலிபாஃப் கூறினார்.
இரான் சரணடைவது குறித்த கேள்விக்கு, அரபு மொழியில் பதிலளித்த காலிபாஃப், இரான் வழங்கும் செய்தி ‘மிகவும் தெளிவானது’ என்றும் அது ‘அவமானத்தை’ ஏற்காது என்றும் கூறினார்.
இதற்கிடையில், சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள், டிரம்ப் நிர்வாகம் காலிபாஃப்பை ஒரு சாத்தியமான பங்காளியாகவும், வருங்காலத் தலைவராகவும் கருதுவதாகக் கூறுகின்றன.
தரைவழித் தாக்குதலுக்குத் தயாரா?
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ‘யுஎஸ்எஸ் திரிப்போலி’ போர்க்கப்பல் இப்பகுதிக்கு வந்து சேர்ந்ததாக அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளது.
ஆங்கில நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, பென்டகன் இரான் மீது பல வாரங்களுக்கு தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது.
அப்பத்திரிகையின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தால், போரின் ஒரு புதிய கட்டம் தொடங்கும். இது முதல் நான்கு வாரங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க வீரர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமையன்று, ‘யுஎஸ்எஸ் திரிப்போலி’ போர்க்கப்பல் இப்பகுதிக்கு வந்து சேர்ந்ததாகத் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளப் பதிவின்படி, யுஎஸ்எஸ் திரிப்போலி தலைமையிலான பிரிவில் 5,000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள் உள்ளனர், அவர்கள் பல போர்க்கப்பல்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய திட்டங்களின்படி, இத்தகைய தரைவழி நடவடிக்கைகள் முழு அளவிலான தாக்குதலாக இருக்காது, மாறாக சிறப்பு அதிரடிப் படைகள் மற்றும் வழக்கமான காலாட்படை வீரர்களின் கூட்டுத் தாக்குதல் நடவடிக்கைகளாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடலில் உள்ள கப்பல்களில் 4,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படை வீரர்கள் இருப்பதாகவும், அவர்கள் வளைகுடா பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் கருதப்படுகிறது. இது தவிர, 82-வது ஏர் போர்ன் டிவிஷனின் பாராட்ரூப்பர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் கூடுதல் வீரர்களை அனுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு மத்தியில் எகிப்து, செளதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிக்க பாகிஸ்தானில் கூடியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது.
இதுவரை அமெரிக்கா என்ன கூறியுள்ளது?
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, எந்தவொரு தரைவழிப் படையும் இல்லாமலேயே அமெரிக்கா தனது இலக்குகளை எட்ட முடியும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமையன்று கூறினார்.
இந்த மாதத்தில் முன்னதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் எங்கும் படைகளை அனுப்பவில்லை” என்றார், ஆனால் உடனடியாக அவர், “ஒருவேளை நான் அனுப்பிக் கொண்டிருந்தால், நிச்சயமாக உங்களிடம் சொல்ல மாட்டேன்” என்றும் சேர்த்துக் கொண்டார்.
வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், “எந்தவொரு தரைவழிப் படையும் இல்லாமலேயே” அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும் என்றார்.
சமீபத்திய ராணுவ நகர்வுகள் டிரம்பிற்கு வாய்ப்புகளை வழங்குவதற்காகவே என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். அவர் கூறுகையில், “சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை மாற்ற அதிபருக்கு அதிகபட்ச வாய்ப்புகளை வழங்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்றார்.
யுஎஸ்எஸ் திரிபோலி போர்க்கப்பல் அந்தப் பகுதியை அடைந்துவிட்டதாக அமெரிக்க செண்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமை தெரிவித்தது.
அமெரிக்கா மீதான அவநம்பிக்கை புதியதல்ல
அமெரிக்கா மீது காலிபாஃப் அவநம்பிக்கை தெரிவிப்பது இது முதல் முறையல்ல.
திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது குறித்த விரிவான தகவல்கள் பிபிசிக்குத் தெரியவில்லை என்றாலும், ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. 1979 புரட்சிக்குப் பிறகு, இரான் கொள்கைகள் பெருமளவிற்கு மேற்கத்திய அரசியல், கலாச்சார மற்றும் கருத்தியல் செல்வாக்கிற்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன. மேலும் அது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத் தனது முக்கிய எதிரிகளாகப் பார்க்கிறது.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய தற்போதைய போர், ஜெனிவாவில் அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தையின் மூன்றாவது சுற்று முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தொடங்கியது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, முகமது பாகர் காலிபாஃப், இரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர்.
கடந்த கோடைகாலத்திலும், அமெரிக்காவும் இரான் நாடும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தபோது இரான் மீதான தாக்குதல்கள் தொடங்கின.
இதன் காரணமாக இரான் மற்றும் இஸ்ரேல் இடையே 12 நாட்கள் போர் நடந்தது, மேலும் அமெரிக்கா இரான் நாட்டின் மூன்று முக்கியமான அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.
2015 ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் வெளியேறிய பிறகு, அமெரிக்காவை நம்ப முடியுமா இல்லையா என்ற அளவுகோலிலேயே இரான் அதிகாரிகள் எந்தவொரு ஒப்பந்தத்தையும் பார்க்கிறார்கள்.
இப்போது அவர்கள் முன்பை விட அதிக சந்தேகத்துடன் உள்ளனர்.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் செளதி அரேபியா கடந்த சில மணி நேரங்களில் 10 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் உள்ளிட்ட பிற வளைகுடா நாடுகளும் இரவு முழுவதும் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறியுள்ளன.
கத்தாரின் அல் அரபி தொலைக்காட்சி நிறுவனம், தெஹ்ரானிலுள்ள அதன் அலுவலகம் ஏவுகணைத் தாக்குதலால் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனம் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது, அதில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் மற்றும் இடிபாடுகள் காணப்படுகின்றன. இந்த ஏவுகணையை யார் ஏவினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேல் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
துபையிலுள்ள எமது செய்தியாளரின் கூற்றுப்படி, கடந்த 24 மணிநேரத்தில் இப்பகுதியில் பலமுறை தாக்குதல்கள் நடந்துள்ளன.