படக்குறிப்பு, இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுடன் செய்யப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில், நாட்டின் விவசாயிகள் மற்றும் பால் துறையின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில வேளாண் பொருட்கள்மீது எந்த வரியும் விதிக்கப்படாது என்று கூறினார்.
கோயலின் கூற்றுப்படி, மசாலாப் பொருட்கள், தேநீர், காப்பி மற்றும் அவற்றின் தயாரிப்புகள், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய், தாவர மெழுகு, பாக்கு, பிரேசில் நட்ஸ், முந்திரி, செஸ்நட் உள்ளிட்ட பல இந்திய வேளாண் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படும். மேலும், பல வகை பழங்கள் மற்றும் காய்கறிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.
அமெரிக்காவும் இந்தியாவும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து கோயல் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் சந்தை அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு திறக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம்சாட்டி வந்த நிலையில், கோயலின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய சந்தைக்கு திறக்கப்படும் அமெரிக்கப் பொருட்கள் எவை என்பதையும் அவர் விளக்கினார்.
“இந்திய விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் அதே நேரத்தில், எத்தனால் தயாரிப்பின் போது கிடைக்கும் உலர் தானியங்கள் (Distillers Dried Grains with Solubles), மது மற்றும் மதுபானங்கள் போன்ற சில அமெரிக்கப் பொருட்களுக்கு இந்திய சந்தையைத் திறந்துள்ளோம். இவற்றுக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
மேலும், “இந்தியா–அமெரிக்கா இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்துவதே எங்கள் இலக்கு. இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிறகு முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
முன்னதாக அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. இரு நாடுகளும் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
பிப்ரவரி 2 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தார். மேலும், இந்தியாவுக்கு எதிரான 50 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் அறிவித்தார்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒரு நிர்வாக உத்தரவில், “ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியா அமெரிக்காவிலிருந்து எரிசக்தி பொருட்களை வாங்குவதாகக் கூறியுள்ளது. இது தவிர, அடுத்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.” என்று கூறினார்.
டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள மற்றொரு நிர்வாக உத்தரவில், ரஷ்யாவிலிருந்து இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் வாங்கினால், அமெரிக்கா எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில், நிர்வாக உத்தரவு 14329-ன் பிரிவு 7-ன் கீழ், ரஷ்ய எண்ணெயை நேரடியாக அல்லது மறைமுகமாக இந்தியா மீண்டும் இறக்குமதி செய்கிறதா என்பதை வர்த்தகம், வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் நிதி செயலர்கள், மற்றொரு மூத்த அதிகாரியுடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்ய எண்ணெயை மீண்டும் நேரடியாக அல்லது மறைமுகமாக இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக வர்த்தக செயலர் உறுதிப்படுத்தினால், இந்தியாவுக்கு எதிராக என்ன கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கலாம், எவ்வளவு அளவில் எடுக்கலாம் என்பதைக் குறித்து, வெளிநாட்டு விவகாரங்கள், நிதி, வர்த்தகம், உள்துறை செயலர்கள், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அதிபரின் உதவியாளர் மற்றும் பொருளாதாரக் கொள்கைக்கான உதவியாளர் ஆகியோருடன் ஆலோசனை செய்து பரிந்துரை செய்வார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்மீது கூடுதல் 25 சதவீத வரியை மீண்டும் விதிக்கலாமா என்பதும் அடங்கும்.
டிரம்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு முன்னர், இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த விரிவான தகவல்கள் வழங்கப்படவில்லை. ஆனால் இப்போது கூட்டு அறிக்கை வெளியான பிறகு, பல விஷயங்கள் தெளிவாகியுள்ளன.
இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் சந்தையைத் திறக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான பரஸ்பர வரியைக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த குறைப்பு இந்தியப் பொருட்கள் மீதான வரி விகிதத்தை 18% ஆகக் குறைக்கும்.
25% வரியை நீக்கும் முடிவு வாஷிங்டன் நேரப்படி பிப்ரவரி 7-ஆம் தேதி அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வரும்.
வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான ஒரு கட்டமைப்பு இறுதி செய்யப்பட்டு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இடைக்கால ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர்களை இறக்குமதி செய்யும் என்று வர்த்தக ஒப்பந்தத்தின் விதிமுறைகள் கூறுகின்றன.
வெள்ளை மாளிகை அறிக்கையின்படி, அனைத்து அமெரிக்க தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் எத்தனால் தயாரிப்பின் போது கிடைக்கும் உலர் தானியங்கள் (Distillers Dried Grains), கால்நடை தீவனத்திற்கான சிவப்பு சோளம், கொட்டை வகைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின், மதுபானங்கள் மற்றும் இதர விவசாய தயாரிப்புகள் மீதான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.
இந்தியாவின் கொள்முதலில் அமெரிக்க எரிசக்தி தயாரிப்புகள், விமானங்கள் மற்றும் விமான பாகங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் நிலக்கரி ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தரவு மையங்களுக்கான மேம்பட்ட சிப்கள் உட்பட, இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப தயாரிப்புகளின் வர்த்தகம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்தியாவின் முதலீட்டு ஒப்பந்தம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 500 பில்லியன் டாலர் மதிப்பிலான கொள்முதல் ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும். இது தரவு மையங்கள் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளையும், ஏற்கனவே உள்ள சில திட்டங்களையும் உள்ளடக்கும்.
இந்தியாவின் ஜவுளி, தோல், காலணிகள், பிளாஸ்டிக், ரப்பர், கரிம ரசாயனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 18 சதவீத வரி விதிக்கப்படும்.
ஜெனரிக் மருந்துகள், ரத்தினக் கற்கள், வைரங்கள் மற்றும் விமான பாகங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா மேலும் நீக்கும்.
மருந்து மற்றும் அதன் மூலப்பொருட்கள் குறித்த ‘பிரிவு 232’ விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில், ஜெனரிக் மருந்துகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளிலிருந்து இந்தியா பயனடையும்.
அமெரிக்காவும் இந்தியாவும் அந்தந்த பிராந்தியங்களில் ஒருவருக்கொருவர் முதன்மை சந்தை அணுகலை நிலையான அடிப்படையில் வழங்க உறுதிபூண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் பலன்கள் முக்கியமாக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் சென்றடையும் வகையில் இரு நாடுகளும் ‘ஆரம்ப விதிகளை’ தீர்மானிக்கும்.
அமெரிக்காவும் இந்தியாவும் இருதரப்பு வர்த்தகத்தைப் பாதிக்கும் வரி அல்லாத தடைகளை நீக்கும். அமெரிக்க மருத்துவ உபகரணங்களின் வர்த்தகத்தில் நீண்டகாலமாக இருந்த தடைகளை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டது.
தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான அமெரிக்க தயாரிப்புகளின் சந்தை நுழைவைத் தாமதப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் இறக்குமதி உரிம நடைமுறைகளை இந்தியா நீக்கும்.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு வருடமாக நடந்து வந்தன.
அமெரிக்காவும் இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் சந்தை அணுகலை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் செயல்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையின் போது இந்திய தயாரிப்புகள் மீதான வரிகளைக் குறைப்பதற்கான கோரிக்கையை அமெரிக்கா பரிசீலிக்கும் என்று கூறியுள்ளது.
விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும், கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் பொருளாதார பாதுகாப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இதில் மூன்றாம் தரப்பு சந்தை அல்லாத கொள்கைகளை கையாள்வதற்கான நடவடிக்கைகள், முதலீட்டு மதிப்பாய்வில் ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு ஆகியவையும் அடங்கும்.
வலுவான, லட்சியமான மற்றும் இருதரப்புக்கும் பயனளிக்கும் டிஜிட்டல் வர்த்தக விதிகளுக்கான தெளிவான பாதையை இரு நாடுகளும் அமைக்கும்.
அமெரிக்காவும் இந்தியாவும் இந்த கட்டமைப்பை விரைவாகச் செயல்படுத்தும்.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட செயல்திட்டத்தின்படி, பரஸ்பரம் பயனளிக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையை முடிக்க ஓர் இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்வதை நோக்கிச் செயல்படும்.
இந்த ஒப்பந்தம், இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து வந்துள்ளது.
அந்த ஒப்பந்தத்தின் கீழ், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை பல ஆண்டுகளில் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
இந்தியாவின் எதிர்க்கட்சிகள் அமெரிக்காவுடனான இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி வந்தன.
ஆனால் பியூஷ் கோயல், “இந்த ஒப்பந்தம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் கிராமப்புற வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கும் இந்தியாவின் உறுதியைக் காட்டுகிறது. இதன் கீழ், உணர்திறன் வாய்ந்த விவசாய மற்றும் பால் பொருட்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதில் மக்காச்சோளம், கோதுமை, அரிசி, சோயா, கோழி, பால், சீஸ், எத்தனால் எரிபொருள், புகையிலை, சில காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்ற பொருட்கள் அடங்கும்” என்று கூறியுள்ளார்.
மறுபுறம், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘விவசாயப் பொருட்கள் மீதான வரிகளை நீக்க அல்லது குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது மற்றும் நீண்டகாலமாக உள்ள வரி அல்லாத தடைகளை நீக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.