படக்குறிப்பு, திங்கட்கிழமை அன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன” என்று கூறினார்.
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பாகிஸ்தான் ஒரு சாத்தியமான மத்தியஸ்தராக உருவெடுக்கக்கூடும் என்று பிபிசியின் வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்ன்ட் டிப்ஷ்மேன் ஜூனியர், ஃபைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஆக்ஸியோஸ் ஆகிய இதழ்களின் செய்திகளை மேற்கோள் காட்டி கூறுகிறார்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா மற்றும் இரானின் மூத்த தலைவர்களின் சந்திப்பை இஸ்லாமாபாத்தில் நடத்தலாம் என்று பாகிஸ்தான் முன்மொழிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அமெரிக்காவோ அல்லது இரானோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராக உருவெடுத்திருப்பது ஆச்சர்யமளிக்கவில்லை என்று பல அமெரிக்க உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான் இரானுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது, ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க நிர்வாகத்துடன் இணக்கமான உறவைக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் டிரம்பைச் சந்தித்தார்.
செப்டம்பர் மாதப் பயணத்தின் போது, ஜெனரல் முனீருடன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பும் சென்றிருந்தார்.
இந்தியாவுடனான மோதல்களின் போது டிரம்ப் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகளுக்காக, பாகிஸ்தான் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
ஷெரீப்பின் இந்த நடவடிக்கை டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பலருக்கும் பிடித்திருந்தது.
பெசெஷ்கியனிடம் பேசிய ஷெரீஃப்
பட மூலாதாரம், Iranian Presidency / Handout/Anadolu via Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் டிசம்பர் 12, 2025 அன்று நடைபெற்ற சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை மன்றத்தில் கலந்துகொண்டனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் திங்களன்று தொலைபேசியில் பேசினார்.
ஷாபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் தளப் பதிவில், “எனது சகோதரர் அதிபர் முனைவர் மசூத் பெசெஷ்கியானுடன் பேசி அவருக்கு ஈத்-உல்-பித்ர் மற்றும் நவ்ரூஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஓர் அண்டை நாடாகவும் சகோதர தேசமாகவும், துணிச்சலான இரானிய மக்களுக்கு பாகிஸ்தானின் ஒற்றுமையை வெளிப்படுத்தினேன். விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்காக பிரார்த்தித்தேன்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
“நாங்கள் வளைகுடா பிராந்தியத்தின் தீவிரமான சூழல் குறித்து விவாதித்தோம். பதற்றங்களைக் குறைக்கவும், பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் மற்றும் ஒரு விவேகமான தீர்வைக் காணவும் அவசரத் தேவை உள்ளது என்பதில் இருவரும் உடன்பட்டோம்.”
“இஸ்லாமிய சமூகத்தினரிடையே ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்றும், அமைதியை மேம்படுத்துவதில் உதவிகரமான பங்கை ஆற்ற பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது என்றும் நான் கூறினேன்” என ஷாபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் இரானுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் இரானின் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி காலமான பிறகு, முதன்முதலில் இரங்கல் தெரிவித்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.
போரின் முடிவு குறித்த முரண்பட்ட தகவல்கள்
பட மூலாதாரம், Olmo Blanco/Getty Images
படக்குறிப்பு, ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட்டில் இரான் போருக்கு எதிரான போராட்டம்
பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னரின் கூற்றுப்படி, இரான் போர் முடிவுக்கு வருவது குறித்து திங்கள் கிழமையும் முரண்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தது.
அமெரிக்காவிலிருந்து வெளிவந்த ஒரு செய்தியின்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் டொனால்ட் டிரம்பின் நெருக்கமான தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தர்களாக செயல்பட்டதாக மற்ற நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன என்று கார்ட்னர் கூறுகிறார்.
கடந்த வாரம், சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அரபு மற்றும் இஸ்லாம் பெரும்பான்மை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூடினர்.
அங்கு அவர்கள் போரில் இரானின் நடவடிக்கைகளைக் கண்டித்ததோடு, இஸ்ரேலின் தாக்குதல்களையும் விமர்சித்தனர். குறிப்பாக, ‘சௌத் பார்ஸ்’ எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு அவர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.
போரின் இந்த போக்கு தான் இப்பகுதியை அதிகம் சீர்குலைத்து வருகிறது. முன்னதாக ராணுவத் தளங்கள் தாக்கப்பட்ட நிலையில், இப்போது பொருளாதார தளங்கள் தாக்குதல் இலக்குகளாகி வருகின்றன.
முன்னதாக, போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக திங்கள்கிழமை டிரம்ப் கூறியிருந்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுகுறித்து டிரம்புடன் பேசியதாகவும், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் இரான் போர் குறித்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நோக்கங்கள் ‘நிறைவேற்றப்படும்’ என்றும் கூறினார்.
ஆனால் இரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் இதனை மறுத்துள்ளார். இது ‘போலிச் செய்தி’ என்றும், எண்ணெய் சந்தையில் ‘தாக்கத்தை ஏற்படுத்த’ இது பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
தொடரும் தாக்குதல்கள்
பட மூலாதாரம், Fatemeh Bahrami/Anadolu via Getty Images
படக்குறிப்பு, தெஹ்ரானில் உள்ள 8 மாடிக் கட்டிடம் ஒன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் அழிக்கப்பட்டது (புகைப்படம்: மார்ச் 23, 2026)
பேச்சுவார்த்தைகள் குறித்த டிரம்பின் அறிக்கை ஒருபுறம் இருக்க, லெபனான், இரான் மற்றும் வளைகுடா நாடுகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பிறகு லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் பல இடங்களிலிருந்து புகை மூட்டம் எழுவதைக் காண முடிந்தது.
இதற்கிடையில், சௌதி அரேபியா தனது கிழக்கு மாகாணத்தில் நான்கு டிரோன்களை பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது.
அதேவேளையில், இரானுடனான பேச்சுவார்த்தை குறித்த டிரம்பின் அறிக்கையைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததாக பிபிசி செய்தியாளர் அந்தோணி ஜூர்ச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பது இப்போதைக்கு மிக முன்கூட்டிய ஒன்றாகிவிடும் என்று பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.