பட மூலாதாரம், Kamal Saini/BBC
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்பால் சிங். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் இவரும் ஒருவர்.
தனது கனவு தேசமான அமெரிக்காவை எப்படியாவது சென்றடைந்திட வேண்டும் என்ற தீராத ஆசையும் வளமான வாழ்க்கைக்கான கனவுகளையும் கொண்டிருந்தார் அவர். அந்த ஆசை நிறைவேறியது என்று ஆசுவாசப்பட்ட 11 நாட்களில் மீண்டும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அரசு கொள்கை காரணமாக, பல மாதங்களாக மேற்கொண்ட கடுமையான பயணம், செலவு செய்த ரூ.40 லட்சம் பணம், அமெரிக்க மண்ணை தொட்டுவிட்டோம் என்ற ஆசுவாசம் எல்லாம் 11 நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் நகரில் ஃபத்தேகர் சுரியன் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜஸ்பால் சிங். லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எதிர்கால கனவுகளுடன் பஞ்சாப்பிலிருந்து கிளம்பினார்.