ராணிப்பேட்டை: சென்னையில் இருந்து காட்பாடி சென்ற மின்சார ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
9 பெட்டிகள் கொண்ட அந்த ரயில் சித்தேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் மூன்றாவது பெட்டி தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
தண்டவாளம் உடைந்திருப்பதை கண்டு ரயிலை சாமர்த்தியமாக நிறுத்திய ஓட்டுநரால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தண்டவாளத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ரயில் விபத்து காரணமாக காட்பாடி செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.