• Wed. Mar 11th, 2026

24×7 Live News

Apdin News

அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறது

Byadmin

Mar 10, 2026


நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் அரசாங்கம் மக்களின் பணத்தை பகிரங்கமாக கொள்ளையடித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் 26 நாட்களுக்குத் தேவையான பெற்றோலும் 30 நாட்களுக்குத் தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதி சபையில் கூறியிருந்த நிலையில், திடீரென டீசல் விலையை 22 ரூபாவினாலும் 92 ரக பெற்றோல் விலையை 24 ரூபாவினாலும் அதிகரித்தது அநீதியானது எனக் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், தற்போதைய விலை அதிகரிப்பானது பழைய கையிருப்புகளை அதிக விலைக்கு விற்பனை செய்து இலாபம் ஈட்டும் ஒரு சூழ்ச்சியாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக இலங்கையின் தேயிலை, ஆடை உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கும் டொலர் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் முறையான பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்கவில்லை என மரிக்கார் சாடினார்.

அவுஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுடன் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தி முதலீடுகளை ஈர்க்கவேண்டியது அவசியம் எனவும், வரி தடைகளை நீக்கி டொலர்களை நாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், தேர்தல் காலங்களில் அநுர குமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாக, கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் விலைக்கே எரிபொருளை வழங்க முடியும் என்ற கூற்றை அரசாங்கம் தற்போது நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், இது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நிலக்கரி கொள்வனவில் பாரிய ஊழல் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், 11ஆவது கப்பலில் கொண்டுவரப்பட்ட நிலக்கரி தரமற்றது என்பதால் லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி 25 நிலக்கரி கப்பல்களும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள நட்டமானது சுமார் 35,000 மில்லியன் ரூபாவைத் தாண்டும் என அவர் மதிப்பிட்டார். இந்த ஊழல் மற்றும் நட்டத்தின் காரணமாக எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என எச்சரித்த அவர், இதற்குக் காரணமான மின்சக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் எனவும், ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.

இந்த ஊழல்களுக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூறவேண்டும் எனத் தெரிவித்த மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தி இந்த மோசடிகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

By admin