45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்திரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் விலையை உயர்த்தியிருப்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது எனவும், நிலக்கரி கொள்வனவின்போது இடம்பெற்ற பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகளினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே அரசாங்கம் மக்கள் மீது இந்தச் சுமையை ஏற்றியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசாங்கம் முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் காலத்தை இழுத்தடித்தமையே இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த நெருக்கடிகளுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயத்துறை குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் அறுவடையில் ஈடுபட்டுள்ள போதிலும், நெல்லுக்கான நியாயமான விலையைத் தீர்மானிக்க அரசாங்கம் தவறியுள்ளதோடு, உர விநியோகத்திலும் பெரும் தாமதங்கள் நிலவுவதாகக் குறிப்பிட்டார். உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுவதாக அவர் சாடினார்.
மேலும், நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் சர்வதேச ரீதியிலான தொடர்பாடல் பலவீனங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர், தகுதியற்ற நபர்கள் பொறுப்புகளில் இருப்பதாலேயே இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுவதாகவும், இது குறித்து ஜனாதிபதி உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அரசியல் கூட்டணிகள் அல்லது மே தினக் கொண்டாட்டங்கள் குறித்து சிந்திப்பதற்கு முன்னதாக, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான தீர்வுகளை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
The post அரசின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் மீது பொருளாதாரச் சுமைகள் | நாமல் கண்டனம் appeared first on Vanakkam London.