1
இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இளைய மகன் இளவரசர் ஹரி.
தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹரி, தனது மனைவி, குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே இங்கிலாந்து நீதிமன்றில் நடந்து வந்த தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழக்கில் இளவரசர் ஹரி தோல்வி அடைந்தார். அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2020ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம், ஹரி இங்கிலாந்தில் இருக்கும்போது தானாகவே பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்தது. இதை எதிர்த்துதான் ஹரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக ஹரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “எனது குடும்பத்தினருடன் சமரசம் செய்துகொள்ள விரும்புகிறேன். இனிமேல் தொடர்ந்து போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்தப் போராட்டத்தை என் தந்தை இன்னும் எவ்வளவு காலம் வைத்திருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை.
“எனது பொலிஸ் பாதுகாப்பை இரத்து செய்வதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டில் தோல்வியடைந்தது என்னை பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளது. இந்தப் பாதுகாப்பு விஷயங்களால் தந்தை சார்லஸ் என்னுடன் பேசமாட்டார். ஆனால், நான் இனி சண்டையிட விரும்பவில்லை.
“ஒரு புத்தகம் எழுதியதற்காக என் குடும்பத்தில் சிலர் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். நிச்சயமாக, அவர்கள் பல விஷயங்களுக்கு என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால், என் குடும்பத்துடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றார்.