1
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளுக்கமைய 7,456 பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங் கண்டு அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
குறித்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களால், அவற்றின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டு, அக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நிலவும் 3,000 பதவி வெற்றிடங்களையும், பாதுகாப்பு அமைச்சில் நிலவும் 9 பதவி வெற்றிடங்களையும், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சில் நிலவும் 179 பதவி வெற்றிடங்களையும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் நிலவும் 132 பதவி வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400 பதவி வெற்றிடங்களையும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் நிலவும் 161 பதவி வெற்றிடங்களையும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நிலவும் 3,519 பதவி வெற்றிடங்களையும், மேல் மற்றும் கிழக்கு மாகாணசபைகளில் நிலவும் 39 பதவி வெற்றிடங்களையும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிலவும் 17 பதவி வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.