21
இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை அரச வாரிசு வரிசையிலிருந்து நீக்குவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் இங்கிலாந்து அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ஆண்ட்ரூ திடீரென கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பிபிசி ஊடகத்திடம் கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் லூக் பொல்லார்ட் (Luke Pollard), எந்தச் சூழ்நிலையிலும் ஆண்ட்ரூ மன்னராக மாறும் வாய்ப்பை முற்றாகத் தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மன்னர் சார்ள்ஸின் சகோதரரான ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டம் உட்பட அரச மரியாதைப் பட்டங்கள் தற்போது பறிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அரியணை ஏறும் வரிசையில் அவர் எட்டாவது இடத்தில் உள்ளதால், அதனை மாற்றும் நோக்கிலேயே இந்தச் சட்ட முன்மொழிவு பரிசீலிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி – அரச பதவியில் முறைகேடு செய்ததாக சந்தேகம்: விசாரணைக்குப் பிறகு ஆண்ட்ரூ விடுவிப்பு
முன்னதாக, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான ஆண்ட்ரூ, பொதுப் பதவியில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டார். அவரது கைது குறித்து மன்னர் சார்ள்ஸுக்கும் முன்கூட்டியே தகவல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திலேயே ஒரே ஒரு அதிகாரிக்கு மட்டுமே இந்த விவகாரம் முன்பே அறிவிக்கப்பட்டதாகவும், அந்த அதிகாரி இங்கிலாந்து உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் எனவும் தகவல்கள் கூறுகின்றன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில், தேம்ஸ் பள்ளத்தாக்கு பொலிஸார் பக்கிங்காம் அரண்மனைக்கு முன்கூட்டியே தகவல் வழங்காமல் நடவடிக்கை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.