• Sun. Jun 15th, 2025

24×7 Live News

Apdin News

அல்காட்ராஸ்: அமெரிக்க சிறையிலிருந்து சமையல் கரண்டி மூலம் 3 கைதிகள் தப்பித்தது எப்படி? விலகாத மர்மம்

Byadmin

Jun 12, 2025


அல்காட்ராஸ், அமெரிக்க சிறை, கைதிகள், தப்பிய கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறையில் இருந்து தப்பிய மூவர்

1962 ஜூன் 12 அன்று, மூன்று கைதிகள் அமெரிக்காவின் அல்காட்ராஸ் சிறையிலிருந்து தப்பினர். அதன் பிறகு அவர்களை ஒருபோதும் காணவில்லை. அங்கிருந்து தப்பிச்சென்ற ஃபிராங்க் மோரிஸ் மற்றும் ஆங்லின் சகோதரர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. ஆனால் அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான சிறையிலிருந்து புத்திசாலித்தனமாக அவர்கள் தப்பிய விதமும், உறுதியும் இன்று வரை கவனத்தை ஈர்க்கிறது. சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகள் கழித்து பிபிசி அந்த இடத்துக்குச் சென்றது.

மே 1964ல், பிபிசியின் பனோரமா நிகழ்ச்சியின் நிருபர் மைக்கேல் சார்ல்டன், “குற்றவாளிகள் உலகில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய பயணம்” என்று அழைக்கப்படும் பயணம் ஒன்றை மேற்கொண்டார். சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவின் ஆக்ரோஷமான நீர்நிலைகளைக் கடந்து, அல்காட்ராஸ் தீவுக்குச் சென்றார்.

“தி ராக்” என்று அழைக்கப்படும் இந்தச் சிறை, அமெரிக்காவின் மிகவும் ஆபத்தான குற்றவாளிகளை அடைத்து வைத்த இடமாக இருந்துள்ளது. இந்த சிறை, ஒரு அசைக்க முடியாத கோட்டையாகவே கருதப்பட்டது. ஆனால் 1962 ஜூன் 12ஆம் தேதி அதிகாலை, சாத்தியமே இல்லை என்று நம்பப்பட்ட ஒரு விஷயம் நடந்தது. அல்காட்ராஸ் சிறையில் இருந்து, மூன்று கைதிகள் தப்பிச் சென்றனர்.

அல்காட்ராஸ் முதலில் கடற்படையின் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட ஒரு கோட்டையாக இருந்தது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, இந்தத் தீவு தனியாகவும், அதன் பாறைகள் செங்குத்தாகவும், தீவைச் சுற்றி குளிர்ந்த, வேகமான நீரோட்டமும் இருந்ததால், பிடிபட்ட கூட்டமைப்புப் படை வீரர்களை இங்கே சிறைவைக்கப்பட்டனர்.

By admin