43
இலங்கைத் தமிழ் திரையுலகை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு மைல்கல்லாக, இசைஞானி இளையராஜா முதல்முறையாக இசையமைக்கும் ஈழத்துத் திரைப்படம் ‘அந்தோனி’ (Anthany) படத்தின் முதல் பார்வை (First Look) தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் மிரட்டலான First Look போஸ்டரை தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான், தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் இயக்குனர்களான சுகிர்தன் மற்றும் ஜெனோசன் வணக்கம் இலண்டன் இதழின் ஒரு நிமிட நேர்காணலுக்காக இக் கேள்வியைத் தொடுத்தோம்.

ஈழத்துக் கதைக்கு இசைஞானி இளையராஜாவின் இசை… இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
“ஏதோ ஒரு மண்ணுக்காகவும் ஏதோ ஒரு கதை களத்துக்காகவும் அவர் இசையமைத்ததையே காலம் காலமாக கேட்ட எமக்கு எம் மண்ணை பார்த்து எம் மக்களை பார்த்து
அதற்கு அவரின் விரல்கள் அசைந்து இசை அமைத்தது காலம் எமக்குத் தந்த கொடை. அவரின் இசையில் எம் மண் இன்னும் அழகாக தெரிகிறது. கதைகள் காவியமாவது அவரின் இசையால். ஈழத்தில் ஒருகாதல் கதை என்னிடம் இருந்தது என் கதையை அவர் காவியமாக்கினார். இதுவே ஈழ சினிமாவிற்கான முதல் தடமாக மீண்டும் மாறுகின்றது.
இசைக்கடவுளை இரண்டாம் முறை பார்க்கின்றோம். முதல்முறை சந்திப்பில் அறிமுகம் மட்டுமே. ராஜா – என்ன பெயர் என கேட்க அவன் ஜெனோசன் “ ம், ஜெனோ என்கிறார் ராஜா. நான் சுகிர்தன் என்று சொல்ல , ராஜா- சுகி என்கிறார். இருவரும் ராஜா சார் காலினைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றோம். படம் பாப்பமா….? என்று அவர் கேட்டதும் அவரது திரையில் படத்தை போட்டோம். நான் எடுத்த படத்தை பல தலை முறை பார்த்த இசைக்கடவுள் காண்கிறது. முதல் பாடல் வரும் வேளை கேட்கிறார் – என்ன “சிட்டிவேசன்” என்று….! எனக்கு உண்மையிலே கதை சொல்ல பயம். படத்தின் கதைநாயகன், கதாநாயகிக்கு கூட கதையை ஜெனோசன் தான் சொன்னான். முதல்முதலா அவருக்குதான் சொல்ல வேண்டும் என்று எழுதி இருக்கும் என நினைத்தேன். அழகா சிட்டிவேசனைச் சொன்னன். பாத்துச் சிரிச்சார்.
இதுபோல ஆரம்பித்த அந்த பத்து நாள் பயணம். எங்கள் வாழ்வில் மிக முக்கியமான தருணங்களாக உணர்ந்தோம். அவர் இசைத்தேவன், இசைஞானி அவரன்றி இசையில்லை என்கிற அளவுக்கு இசையோடு ஐக்கியமானவர் அவர். அவரோடு பணிபுரிந்ததிலும் அவர் அருகில் இருந்ததும் எப்போதும் எங்களுக்கு பெருமை தான்…”
