• Mon. Dec 22nd, 2025

24×7 Live News

Apdin News

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டம் ; தகவல் புதுப்பிப்பு கால அவகாசம் மாத இறுதியுடன் நிறைவு

Byadmin

Dec 22, 2025


அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைவரும் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரி நன்மைகள் சபை திங்கட்கிழமை (22) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தற்போது கொடுப்பனவுகளைப் பெற்று வருபவர்கள் மட்டுமன்றி, விண்ணப்பித்தும் இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் என அனைவரும் இந்தத் தகவல்களைப் புதுப்பித்தல் கட்டாயமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்ட விதிகளுக்கு அமைவாக, கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களின் பெயர்ப் பட்டியலை ஆண்டுக்கு ஒருமுறை மீளாய்வு செய்து புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

அந்த சட்ட ரீதியான தேவையினைப் பூர்த்தி செய்யும் பொருட்டே இந்தத் தகவல் புதுப்பிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. குறித்த காலப்பகுதிக்குள் தகவல்களைப் புதுப்பிக்கத் தவறும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் எதிர்காலத்தில் நிறுத்தப்படும்.

தகவல்களைப் புதுப்பிப்பதற்கான இறுதித் திகதி டிசம்பர் 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் இந்தக் கால எல்லை மேலும் நீடிக்கப்படமாட்டாது. இதுவரை இச்செயற்பாட்டை முன்னெடுக்காதவர்கள் விரைவாகச் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயனாளிகள் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்குப் பல்வேறு இலகுவான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று நேரடியாகவோ அல்லது கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக அஸ்வெசும உத்தியோகத்தர்களின் தொழில்நுட்ப உதவியைப் பெற்று இணையம் வழியாகவோ தகவல்களைப் புதுப்பிக்க முடியும்.

மேலும், உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட அஸ்வெசும விண்ணப்பப் படிவங்களை அந்தந்தப் பிரதேச செயலகங்களில் உள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவிடம் கையளிப்பதன் மூலமும் அல்லது அருகிலுள்ள தொலைத்தொடர்பு மத்திய நிலையங்களுக்குச் சென்று இணைய வசதியைப் பயன்படுத்துவதன் மூலமும் இச்செயற்பாட்டை நிறைவு செய்ய முடியும்.

அஸ்வெசும முதற்கட்டப் பயனாளிகள் அனைவரும் தமக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கடைசிச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது தகவல்களைப் புதுப்பித்துத் தொடர்ச்சியான நலன்புரி உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள் சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

By admin