சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், ஆகாஷ் பாஸ்கரனிடமிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தடை விதித்தது.
இந்நிலையில், தடையை மீறி மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறி ஆகாஷ் பாஸ்கரன் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதில் அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில்,இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு ஆணையத் தலைவர் பிரதீப்குமார் உபாத்யாயா, நிர்வாகப் பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.