பட மூலாதாரம், X/AXIOM SPACE
- எழுதியவர், ஶ்ரீகாந்த் பக்ஷி
- பதவி,
-
சர்வதேச விண்வெளி மையத்திற்கு இது வரை 270 விண்வெளி ஆய்வாளர்கள் சென்றுள்ளனர். ஆனால் ஒரு இந்தியர் கூட அங்கே செல்லவில்லை. இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுபான்ஷு சுக்லா இந்த கவலையை நிவர்த்தி செய்யப் போகிறார். இவரின் இந்த பயணம் மூலமாக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி புதிய மைல்கல்லை எட்டப் போகிறது.
சோயுஸ் விண்கலத்தின் மூலமாக, சோவியத் யூனியனின் உதவியோடு ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்ணுக்குச் சென்றார். 1984-ஆம் ஆண்டு இந்த பயணம் நிகழ்ந்தது. விண்ணுக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் அவர்.
அதன் பின், கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் போன்றோர் விண்ணுக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் இந்திய வம்சாவளிகளே அன்றி இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்ல.
ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்தைத் தொடர்ந்து 40 ஆண்டுகள் கழித்து சுக்லா விண்ணுக்குச் செல்கிறார். விண்ணுக்குச் செல்லும் இரண்டாவது இந்தியராகவும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியராகவும் அவர் இருப்பார்.
ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுக்லா செல்கிறார். அவருடைய பயணம் சரியாக ஜூன் 10-ஆம் தேதி மாலை 5.52 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந்த பயணத்தில் அவர் குரூப் கேப்டனாக பணியாற்ற உள்ளார்.
பட மூலாதாரம், Axiom Space
ஆக்ஸியம் திட்டம் என்றால் என்ன?
விண்வெளி ஆய்வுகளுக்காக பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையம் (ISS) பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை நிறுத்த நாசா திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு ஆக்ஸியம் மையம் ஒன்று அங்கே உருவாக்கப்படுகிறது. மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையமாக அது இருக்கும்.
அந்த மையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக ஒவ்வொரு பொருட்களும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்படும். ஆக்ஸியம் விண்வெளி மையம் முழுமையாக கட்டப்பட்ட பிறகு இந்த உபகரணங்கள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டு ஆக்ஸியம் மையத்துடன் இணைக்கப்படும். பிறகு சர்வதேச விண்வெளி மையத்தின் (ISS) செயல்பாடு நிறுத்தப்படும்.
இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வீரர்கள் ஆக்ஸியம் 3 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்படுகின்றனர்.
கடந்த 40 ஆண்டுகளில் இந்த நாடுகளில் இருந்து யாரும் விண்வெளிக்கு சென்றதில்லை. ஆக்ஸியம் 4 திட்டத்தின் கமாண்டராக இருக்கும் பெக்கி விட்சனுக்கு இது ஐந்தாவது விண்வெளி பயணமாகும். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார். நூறு நாட்களுக்கும் மேலாக அங்கே இருந்த அவர் 10 முறை விண்வெளி நடை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த திட்டத்தில் சுக்லா விமானியாக செயல்பட உள்ளார். அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சார்பில் செல்கிறார். திட்ட நிபுணர்களான ஹங்கேரியின் திபோர் காப்பும், போலந்தின் ஸ்லாவோஜ் உஸ்னான்ஸ்கி விஸ்னிவ்ஸ்கியும் இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றனர்.
ப்ளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியாவின் இயக்குநர் ரகுநந்தன் பிபிசியிடம் பேசிய போது, விமானியின் பங்கு விண்கலத்தின் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது. தலைமைக்கு அடுத்தபடியாக விமானி செயல்படுவதால் விண்ணில் ஏவப்படுவது முதல் மீண்டும் பூமிக்கு திரும்புவது வரை அனைத்து செயல்பாடுகளிலும் அவர் முக்கியப் பங்கைக் கொண்டிருப்பார் என்று கூறினார்.
பட மூலாதாரம், Axiom Space
ஐந்தாவது உறுப்பினர் அன்னப் பறவை
ஏற்கனவே நான்கு குழு உறுப்பினர்கள் தேர்வாகியுள்ள நிலையில் ஜாய் என்ற சிறிய அன்னப் பறவை பொம்மையும் ஐந்தாவது நபராக விண்வெளிக்கு செல்கிறது.
மே 25 முதல் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள குழு உறுப்பினர்கள், ஜூன் 3 அன்று நடத்திய ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்தின் போது ஜாயை உலகிற்கு அறிமுகம் செய்தனர்.
புவி ஈர்ப்பு விசையை தாண்டி வெளியே செல்லும் போது இந்த பொம்மைதான் ஒரு குறிப்பானாக செயல்படும். விண்ணுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும், அனைத்துவிதமான பயிற்சிகளும் நிறைவு பெற்றுவிட்டதாகவும் பெக்கி விட்சன் தெரிவித்தார்.
குழு கேப்டன் சுக்லா தனது ஆர்வத்தை விளக்க வார்த்தைகளே இல்லை என்று கூறினார். அவர் விண்ணுக்குச் செல்லும் போது வெறும் ஆய்வுப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லவில்லை, இந்தியர்களின் நம்பிக்கைகளையும் எடுத்துச் செல்வதாக கூறினார். பயணம் வெற்றி பெற பிரார்த்தனை செய்யுமாறும் அவர் இந்தியர்களிடம் கேட்டுக் கொண்டார்.
பட மூலாதாரம், Axiom Space
தற்போது என்ன நடக்கிறது?
ஆக்ஸியம் 4 திட்டத்தின் உறுப்பினர்கள் தங்களை சில நாட்களாக தனிமைப்படுத்தியுள்ளனர். விண்ணுக்கு செல்வதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழு ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டின் மூலம் டிராகன் கலனில் விண்ணுக்குச் செல்கிறது.
28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய இருக்கும் அவர்கள் அங்கே 31 நாடுகளுக்கு சொந்தமான 60 ஆராய்ச்சிகளை 14 நாட்கள் மேற்கொள்வார்கள்.
நிலைத்தன்மையுடன் மனிதன் விண்ணில் வாழ்வது எப்படி என்பது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வார்கள் இவர்கள் என்று பெக்கி விட்சன் கூறினார். இது விண்ணில் இருக்கும் மனிதனுக்கு மட்டுமின்றி பூமியில் உள்ளவர்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
வருங்காலத்தில், நீரிழிவு நோய் உடையவர்கள் விண்வெளிக்கு செல்ல அனுமதிக்கும் வகையிலான ஆராய்ச்சி, விண்வெளியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உருவாக்கப்பட்டிருக்கும் இரண்டு புதிய மருந்துகளின் செயல்திறனை ஆராய்வது போன்ற முக்கிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பெக்கி கூறுகிறார்.
விண்வெளியில் நுண்ணீர்ப்பு தொடர்பாக இந்திய ஆய்வு நிறுவனங்கள் மேற்கொண்ட 7 சோதனைகளை சுக்லா விண்ணில் ஆய்வுக்குட்படுத்துவார். விண்ணில் இருந்த வண்ணம், இந்திய மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் அனுபவங்கள் யாவும் இந்தியாவின் ககன்யான் மற்றும் இந்திய விண்வெளி மையம் தொடர்பான திட்டங்களில் பயனுடையதாக இருக்கும் என்றும் சுக்லா தெரிவித்தார்.
பூஜ்ஜிய ஈர்ப்பு விசையைக் குறிக்கும் ஒரு குறிப்பானாகவே அன்னப்பறவை பொம்மை எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் கூறினார். அன்னப்பறவை இந்திய கலாசாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று கூறினார்.
யார் இந்த சுபான்ஷு சுக்லா?
அக்டோபர் 10, 1985-ஆம் ஆண்டு சுபான்ஷு சுக்லா உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தார். இந்திய விமானப்படையில் போர் விமானியாக 2006-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஆக்ஸியம் ஸ்பேஸ் வழங்கும் தகவலின் படி 2000 மணி நேரம் அவர் பல்வேறு போர் விமானங்களை ஓட்டிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
பிபிசியிடம் பேசிய அவருடைய சகோதரி சுச்சி மிஸ்ரா, சுபான்ஷு இந்திய விமானப்படையில் சேர்ந்தது எதிர்பாராத ஒன்று என்று கூறினார்.
“அவருக்கு 17 வயது இருக்கும் போது அவருடைய நண்பர் ஒருவர் தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்திற்கு (NDA) விண்ணப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் விண்ணப்பிக்கத் தேவையான வயதை தாண்டிவிட்டார் என்பதால் அவர் விண்ணப்பிக்கவில்லை. அப்போது அந்த விண்ணப்ப படிவத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதால் சுபான்ஷு அதனை பூர்த்தி செய்தார். அதில் தேர்வும் ஆனார். அதன் பின்னர் அவருடைய வாழ்க்கையே மாறிவிட்டது,” என்றும் கூறினார் மிஸ்ரா.
பட மூலாதாரம், Axiom Space
விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படும் ரகசிய பொருள் என்ன?
ககன்யான் திட்டத்தை 2018-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த பிறகு இஸ்ரோவில் பயிற்சி பெற விண்ணப்பித்ததாகக் கூறுகிறார் சுக்லா.
ஆக்ஸியம் வேர்ல்ட் மீடியாவுக்கு அளித்த பேட்டியில், ராகேஷ் சர்மாவைப் பார்த்து தான் விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகக் கூறினார் சுக்லா. சிறு வயது முதலே விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
ராகேஷ் ஷர்மாவுக்கு சிறப்புப் பரிசு ஒன்றை தர விரும்புவதாக தெரிவிக்கும் சுக்லா, அப்பொருளை விண்ணுக்கு எடுத்துச் சென்று, பூமிக்குத் திரும்பிய பிறகு தர இருப்பதாக தெரிவித்தார். தற்போது அது என்ன பொருள் என்பது ரகசியம் என்றும் அவர் கூறினார்.
தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் மட்டுமின்றி அவர்களுக்கு பிடித்த உணவுகளையும் விண்வெளிக்கு இந்த வீரர்கள் எடுத்துச் செல்கின்றனர். சுக்லா மாம்பழச்சாறு, பருப்பு அல்வா மற்றும் கேரட் அல்வா போன்றவற்றை எடுத்துச் செல்வதாக கூறினார். இந்த உணவுகளை அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் இதர விண்வெளி வீரர்களோடு பகிர்ந்து கொள்வார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு