பட மூலாதாரம், Getty Images
“செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் செயின்ட் டேவிட் கோட்டை பிரெஞ்சுகாரர்களால் கைப்பற்றப்பட்டபோது முகமது அலி அளித்த உதவியும் ஆதரவும்தான் ஆங்கிலேயர்களின் வலிமைக்குக் காரணம்.
இன்று இந்த நாட்டில் ஆங்கிலேயர்கள் இருக்கிறார்கள் என்றால் ஆற்காடு நவாபின் உதவியின்றி அது சாத்தியமாயிருக்காது, இந்த நாட்டின் விவகாரங்களில் நம் மக்களுக்கு[ஆங்கிலேயர்கள்] பதிலாக, பிரெஞ்சுகாரர்கள் அதிக அதிகாரத்துடன் சக்தி வாய்ந்தவர்களாக இருந்திருப்பார்கள்” – சர் அயர்கூட்
ஆங்கிலேயர் ஆதரவின்றி நவாப் முகமது அலி தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்று செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆளுநர் ஜார்ஜ் மக்கர்ட்னி (1781-85) கூறியபோது, பிரெஞ்சுபடையை வந்தவாசி போரில் (1760) தோற்கடித்து இந்தியாவில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் தலைமைத் தளபதி சர் அயர்கூட் தெரிவித்த கருத்து இது.
யார் இந்த ஆற்காடு நவாப்?
தக்காணத்தில் மராத்தியர்களின் ஆதிக்கத்தைத் தடுக்க ஔரங்கசீப் சுல்பிகர் அலிகான் தலைமையில் படை ஒன்றை அனுப்பினார். மராத்தியர்களுடன் நடந்த சண்டையில்(1698) சுல்பிகர் அலி வெற்றி பெற்று செஞ்சி கோட்டையைக் கைப்பற்றினார். அதற்காக அவருக்கு கர்நாடக நவாப் பதவி வழங்கப்பட்டது.
சுல்பிகர் அலி கிழக்கிந்திய கம்பெனியுடன் நெருங்கிய தொடர்பு வைத்து, அதன் முக்கிய நிர்வாகிகளுக்கு நிறைய வெகுமதி வழங்கி நட்பை வளர்த்தார். டெல்லியில் அவருக்கு மற்றொரு உயர் பதவி வழங்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக 1701இல் தாவூத் கான் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
தாவூத் கான் தனது தலைமையகத்தை ஆற்காட்டுக்கு மாற்றினார். அவருக்குப் பின் அவரது நிர்வாகத்தில் திவானாக பணியாற்றிய பாரசீகத்தில் இருந்து குடியேறி கொங்கன் பகுதியில் வாழ்ந்த “நாவாயத்” சமூகத்தைச் சேர்ந்த முகமது சயீத் சாதத்துல்லா கான் ஆற்காடு நவாப் ஆனார் (1708-1738). அவரே நாவாயத் வம்சத்து ஆட்சியை ஆற்காட்டில் நிறுவியவர்.
தமிழ்நாடு, தெற்கு திருவாங்கூர், ஆந்திராவில் தற்போது உள்ள சித்தூர், நெல்லூர் ஆகியவை நவாப் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். சாதத்துல்லா கானுக்கு வாரிசு இல்லாததால் பேரரசரின் அனுமதி பெற்று தத்தெடுத்திருந்த தனது சகோதரர் குலாம் அலி கானின் மகன் தோஸ்த் அலி கானை நவாப் ஆக சாத்துல்லா கான் பதவியில் அமர்த்தினார்.
தோஸ்த் அலிக்கு இரு மகன்கள்: சப்தார் அலி, ஹாசன் அலி. தோஸ்த் அலி நவாப் ஆவதை ஹைதராபாத் நிஜாம் விரும்பவில்லை. நிஜாமின் தூண்டுதல் காரணமாக மராத்தியர்கள் தோஸ்த் அலிக்கு எதிராகப் போர் தொடுத்தனர். ஆம்பூரில் நடந்த சண்டையின்போது (1740) மராத்தியர்கள் தோஸ்த் அலியை கொன்றனர்.
பட மூலாதாரம், Getty Images
வாலாஜா ஆட்சியின் தொடக்கம்
கடந்த 1742இல், சப்தார் அலி, தோஸ்த் அலியின் மைத்துனர் முர்தாஸ் அலியால் படுகொலை செய்யப்பட்டார். சப்தார் அலியின் இளைய மகன் முகமது சையது ஆங்கிலேயர் ஆதரவுடன் நவாப் ஆக பிரகடனம் செய்யப்பட்டார்.
அவருக்கு அரச பொறுப்பை ஏற்கும் அளவுக்கு வயதில்லாத காரணத்தால் அன்வருதின் கான் அவரது பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் நிஜாம் அவரை கர்நாடக நவாப் ஆக 1744இல் நியமனம் செய்தார். “நாவாயத்” வம்ச ஆட்சிக்குப் பிறகான முதல் ஆற்காடு நவாப் அன்வாருதின் ஆவார். அவர் கிழக்கிந்திய கம்பெனியுடனும் நட்புறவைப் பேணி வந்தார்.
கடந்த 1746ஆம் ஆண்டில், கர்நாடகத்தில் இந்திய நிலப்பரப்பின் மீதான மேலாதிக்கத்திற்காக ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுகாரர்களும் போட்டி போட்டனர். இது முதல் கர்நாடக போராக வெடித்தது (1745).
கடந்த 1746இல் புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சு படை முற்றுகையிட்டுக் கையகப்படுத்திய போது, ஆங்கிலேயர்கள் நிஜாமின் உதவியை நாடினர். நிஜாம் ஆசப் ஷாவின் மகன் நாசிர் ஜங் அன்வருதினை ஆங்கிலேயருக்கு உதவுமாறு வேண்டினார்.
அதன்படி அன்வருதீன் தனது இரண்டாவது மகன், மாபஸ் கான், மூன்றாவது மகன் முகமது அலி கான் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். நவாபின் படை சாந்தோமில் நடைபெற்ற போரில் தோற்கடிக்கப்பட்டது.
இருப்பினும் இரு இளவரசர்களும் புனித டேவிட் கோட்டைக்கு (புதுச்சேரி) விரைந்து அங்கிருந்த ஆங்கிலேய படை வீரர்களுக்கு உதவ கோட்டைக்கு அருகில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தனர். ஆங்கிலேயருடனான நிஜாம், நவாப் கூட்டணியும் பிரெஞ்சுகாரர்களுடனான பகைமையும் அன்றிலிருந்து தொடங்கியது. ஆங்கிலேயருடனான நட்பு நாவாயத் அரசுக்கு முடிவு கட்டி வாலாஜா குடும்ப ஆட்சிக்கு வழிவகுத்தது.
பட மூலாதாரம், Getty Images
முகமது அலி நவாப் ஆக பிரகடனம்
அன்வருதின் பிரெஞ்சுகாரர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்களை ஆதரித்தார். இதனால் அன்வருதின் கானுக்கு எதிராக நவாப் பதவிக்கு தோஸ்த் அலி மருமகன் சந்தா சாகிப்பை பிரெஞ்சுகாரர்கள் ஆதரித்தனர். ஆங்கிலேயர்களின் ஆதரவுடன் அன்வருதின் ராணுவம் 1749இல் ஆம்பூரில் பிரெஞ்சு ராணுவத்தை சந்தித்தது; அங்கு அன்வருதின் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்.
அப்போது தந்தையுடன் அங்கிருந்த மூன்றாவது மகன் முகமது அலி தப்பி ஓடி திருச்சிராப்பள்ளியில் தன்னை வாலாஜா (கண்ணியமான) என்ற பெயரைச் சேர்த்துக்கொண்டு நவாப் முகமது அலி கான் வாலாஜா எனப் பிரகடனம் செய்தார்(1749).
ஆனால் சந்தாசாகிப்-ஐ (உசைன் தோஸ்த் கான்) ஆற்காடு நவாப் ஆக ஹைதராபாத் நிஜாம் அறிவித்தார். முகமது அலி தனக்கு ஆதரவாக ஆங்கிலேயரின் உதவியை நாடினார், அவர்களும் அதற்கு இசைந்தார்கள். பிரெஞ்சுகாரர்கள் ஆதரித்த சந்தா சாகிப் 1752இல் தஞ்சாவூர் அரசரின் படைத்தளபதியால் கொல்லப்பட்டார். முகமது அலி அரியணை ஏறினார். மூன்றாவது கர்நாடக போரின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி முகமது அலி நவாப் ஆக சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டார்.
கடந்த 1761இல் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் ஒழிந்ததோடு அதே ஆண்டு நடந்த மூன்றாம் பானிபட் யுத்தத்தில் ஆப்கானிய படையெடுப்பாளர் அகமது ஷா அப்தலியிடம் மராத்தியர்கள் அடைந்த தோல்வி, அதைத் தொடர்ந்து அவர்களது ஆதிக்கத்தின் வீழ்ச்சி கர்நாடகத்தில் முகமது அலிக்கு போட்டியாக வேறு எந்தப் பிராந்திய அரசும் இல்லை என்ற நிலையை உருவாக்கியிருந்தது.
அப்படியிருக்க முகமது அலி எப்படி ஆங்கிலேயரின் சூழ்ச்சிக்குப் பலியானார்? அப்போதும் அதன் பிறகும் நடந்தது என்ன? எவ்விதத்தில் தமிழ்நாடு அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிமையானது?
பட மூலாதாரம், Getty Images
கம்பெனியின் கொள்கைகளிலும் நடவடிக்கைகளிலும் ஏற்பட்ட மாற்றம்
பிளாசி யுத்தத்தின்போது (1757) வங்காளத்தில் சிராஜ் உத்தவுலாவுக்கு எதிராக ஆங்கிலேயருக்கு துணைபோய் துரோகம் செய்த மீர் ஜாபரால் (மீர்காசிமின் மாமனார்) ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். அதே பிரித்தாளும் உத்தியைக் கடைப்பிடித்து இதர இந்திய பிரதேசங்களைக் கைப்பற்ற முடியும் என்ற முடிவுக்கு ஆங்கிலேயர்கள் வந்தனர்.
அதைத் தொடர்ந்து துணிச்சல் மிக்க இங்கிலாந்து நாட்டு வர்த்தகர்களின் பிரதிநிதிகள் போர் வீரர் உடையில் இங்கிலாந்து நாட்டுக் கொடியேந்தி இந்தியா வரத் தொடங்கினர். அவ்வாறு வந்த வியாபாரிகள் இந்திய வர்த்தகர்களை தங்கள் பொருட்களை 30-50 சதவிகிதம் அதிக விலையில் வாங்கக் கட்டாயப்படுத்தினர். இதுவே மீர் காசிம் தொடுத்த பக்சார் போருக்கு (1764) முக்கியக் காரணமாக இருந்தது.
அதே காலகட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் சென்னைக்கு ஐரோப்பிய வீரர்களும் வியாபாரிகளும் வரத் தொடங்கியிருந்தனர். கம்பெனி படைவீரர்களின் எண்ணிக்கையில் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கம்பெனியின் நோக்கத்திலும் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது.
சிற்றரசர்கள், பாளையக்காரர்களுடனான முகமது அலியின் பகையால் அதிகரித்த ராணுவ செலவு
கிழக்கிந்திய கம்பெனி வங்காளத்தில் திவானாக பொறுப்பேற்றது போலன்றி (1765), சென்னை மாகாணத்தில் ராணுவப் பொறுப்பை மட்டும் ஏற்றது. இதற்கான செலவை நவாபின் வருமானத்தின் ஒரு பகுதியிலிருந்து பெற்றது. வாரிசுரிமைப் போரின்போது கம்பெனி நவாபுக்கு ராணுவ செலவுக்காக 1761இல் கொடுத்திருந்த கடன் ரூ.25,98,801 ஆக இருந்தது.
கடனின் சுமையைக் குறைப்பதற்காக அருகில் சுதந்திரமாகச் செயல்பட்ட தஞ்சாவூர் போன்ற சிற்றரசுகளை முகமது அலி கையகப்படுத்த நினைத்தார். டச்சுக்காரர்கள் தஞ்சாவூர் மன்னருக்குக் கொடுத்திருந்த கடனுக்காக நாகப்பட்டினம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பெற பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.
அந்தத் தருணத்தில் தனது முன்னோர்களில் ஒருவரான தோஸ்த் அலி கான் மராத்தியர் துணையுடன் தஞ்சாவூர் மன்னரால் கொல்லப்பட்டிருந்ததை மனதில் வைத்து தஞ்சாவூர் மன்னர் துளஜாஜி தனக்கு 1748ஆம் செலுத்த வேண்டிய கப்பம் ரூபாய் 136,50,000 பாக்கி இருப்பதாகவும், அதில் ரூபாய் 700,000க்கான பத்திரம் மட்டுமே எழுதிக் கொடுத்திருப்பதாகவும் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
மேலும் 1758இல் பிரதாப் சிங் ஆட்சியின்போது பிரெஞ்சுகாரர்கள் லாலி தலைமையில் தஞ்சாவூர் மீது தாக்குதல் நடத்திய தருணத்தில் தஞ்சாவூர் மன்னருக்கு ஆதரவாக நவாப் ஒரு படையை மேஜர் பிரஸ்டன் தலைமையில் அனுப்பினார். அதற்குக் கைமாறாக முதல் மைசூர் போர் ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே தொடங்கியபோது, ஹைதர் அலிக்கு எதிராக தஞ்சாவூர் மன்னர் தனக்கு உதவி செய்வார் என எதிர்பார்த்து ஏமாந்த நவாப் அதற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 25 லட்சம் கொடுக்குமாறும் தஞ்சாவூர் மன்னரை வேண்டினார்.
பின்னர் துளஜாஜி டச்சுகாரர்களுக்கு விற்ற சில பகுதிகள் நவாப் வசம் இல்லாவிட்டால் மற்றொரு மராத்திய, மைசூர் பிரெஞ்சு கூட்டு உடன்படிக்கை ஆங்கிலேயருக்கு எதிராக அமையும் என்று கம்பெனி இயக்குனர்களை எச்சரித்தார்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை கவர்னர்-கவுன்சில் டச்சுகாரர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காது, நவாப் கோரிய பகுதியை பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிவிடுமாறு வேண்டினர். ஏற்கெனவே கடனில் மூழ்கியிருந்த நவாப் அவருக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் பால் பென்பீல்டு ஆலோசனையை நாடினார்.
அவரும் கவர்னரை சந்தித்து டச்சுகாரர்களுக்கு 194,000 பவுண்ட் கொடுத்து நாகப்பட்டினத்தை தஞ்சாவூர் மன்னரின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர ஏற்பாடு செய்தார். நவாபின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் மராத்திய, மைசூர் ஆட்சியாளர்களாலும், பிரெஞ்சு கம்பெனியின் படைகளாலும் ஆபத்து இருந்ததால் 1768-1779 ஆண்டுகளுக்கான ராணுவ செலவு 2,831,057 பவுண்ட் ஆக உயர்ந்திருந்தது.
ஆங்கிலேயருடன் கூட்டு வைத்திருந்த தஞ்சாவூர் மன்னர் ராஜா பிரதாப் சிங் தஞ்சாவூரை நவாபுடன் சேர்ந்து 1771இல் கைப்பற்றினார். தான் சுதந்திரமாக ஆட்சி செய்ய ராஜா 900,000 பவுண்ட் கொடுந்திருந்த போதிலும், நவாப் அவரையும் அவரது குடும்பத்தையும் கைது செய்து சிறையிலடைத்தார்.
நவாப் 1773இல் தனக்கு கடன் கொடுத்திருந்த பால் பென்பீல்டு மற்றும் அவரது சகாக்களுக்கு அப்பகுதியை வழங்கினார். வழமையான நிலங்களைக் கொண்டு சிறப்பாக வேளாண்மை, வணிகம், உற்பத்தி நடைபெற்ற மக்கள்தொகை அடர்த்தியாக இருந்த அப்பகுதி முழுமையாகச் சீரழிந்தது. வாழ்வாதாரைத்தைத் தேடி ஒரு பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
நவாபின் மீது வட்டிக்குக் கடன் கொடுத்து செல்வந்தரானவர்களின் ஆதிக்கம்
கிழக்கிந்திய கம்பெனி அலுவலர்களுக்கு இந்திய வட்டி விகிதத்தில் கடன் வழங்குவது லாபகரமான தொழிலாக இருந்தது. நவாப் 20 சதவிகித வட்டி கொடுத்ததால் ஐரோப்பிய வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவருக்குக் கடன் வழங்க முன் வந்தனர்.
ஐரோப்பியர்கள், அவர்களோடு வர்த்தகரீதியாக தொடர்பு வைத்திருந்தவர்கள் நவாபை ஒரு பொன்முட்டையிடும் வாத்தாகக் கருதினர். மாவட்ட ஆட்சியர்கள்கூட தனிப்பட்ட முறையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். 1793ஆம் ஆண்டு சாசனச் சட்டம் வருவாய்த் துறையை நீதித்துறையில் இருந்து பிரித்த பிறகுதான் கம்பெனி அலுவலர்கள் வர்த்தகத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டது.
இந்திய மன்னர்கள், சிற்றரசர்கள் மூலம் பெரும் செல்வம் சேர்த்து இங்கிலாந்துக்கு திரும்பியவர்கள் பகட்டான வாழ்வு வாழ்ந்தனர். அங்கு மக்கள் அவர்களை “நவாபுகள்” என கிண்டல் செய்தனர். நவாப் என்ற சொல் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் ஒவ்வொரு வீட்டிலும் பேசும் சொல்லானது.
நவாபின் மீது சுமத்தப்பட்ட மீள முடியாத கடன் சுமை
நவாபுக்கு கடன் கொடுத்தவர்கள் சென்னை மற்றும் சுற்றியிருந்த பகுதிகளை வாடகையின்றி அவர்களுக்கு வழங்கிட வற்புறுத்தினர். பெரும் எதிர்ப்புக்குப் பிறகு ஜாகிர் (பின்னாளைய செங்கல்பட்டு மாவட்டம்) கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஜாகிரில் வரி வசூலிக்கும் பொறுப்பு நவாபிடம் இருந்தது. 1780இல் இருந்து அந்த அதிகாரத்தை கம்பெனி எடுத்துக்கொண்டு 14 பெரிய எஸ்டேட்டுகளாக பிரித்து ஒன்பது ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது. குத்தகைதாரர்கள் வாடகையைச் செலுத்தத் தவறியதால் பின்னர் கம்பெனியே எடுத்துக்கொண்டது.
அதுபோல் 1781இல் திருநெல்வேலி மாவட்டத்தின் வருவாயை வசூலிக்கும் உரிமையை கம்பெனிக்கு நவாப் வழங்க நேரிட்டது. அதற்கு பாளையக்காரர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்ததால் அந்தப் பொறுப்பு மீண்டும் நவாபிடமே ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நவாபின் நிதிநிலை மிகவும் மோசமானதால் மீண்டும் கம்பெனியிடமே ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி, வேலூர், ஆற்காடு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நவாப் கையாண்ட நில அடமான முறை பொருளாதார சீரழிவை உண்டாக்கியது. வரி பாக்கியை வசூலிக்க நிர்வாகம் அடக்குமுறைகளைக் கையாண்டதால் பாளையக்காரர்கள் கிளர்ச்சி வெடித்தது.
பட மூலாதாரம், Getty Images
நவாபின் தரகர் மற்றும் வட்டிக்குக்கடன் வழங்கிய பால் பென்பீல்ட்
வட்டிக்குக் கடன் கொடுத்து செல்வம் சேர்த்திருந்தவர்கள் இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து ஆதிக்கம் செலுத்தினர். அதில் குறிப்பிடத்தக்கவர் பால் பென்பீல்ட்.
நவாப் தனது மகனை (அமீர்-உல்-உமாரா) தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இரு இடங்களில் 2000 வீரர்களுடன் துளஜாஜி அமைச்சரவையில் வருவாய்த்துறைக்கு தலைவராக்கத் திட்டமிட்டார். பிறகு கவர்னர் பொறுப்புக்கு வந்த பிகாட் பிரபு தஞ்சாவூரை மீண்டும் மன்னரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
தனது முயற்சியை முறியடித்த பிகாட் பிரபுவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தனது கட்டுப்பாட்டில் இருந்த பால் பென்பீல்டு மற்றும் அவரது சகாக்களின் மூலம் சதி செய்து இருமுறை ஆளுநராக இருந்த (1755-1763; 1775-1776) பிகாட் பிரபுவை கவுன்சில் உறுப்பினர்கள் மூலம் கைது செய்து சிறையிலடைக்கும் அளவுக்கு நவாப் செல்வாக்கு பெற்றிருந்தார்.
சிறையில் அடுத்த ஆண்டு (1777) பிகாட் பிரபு இறந்தார். அவர் இறப்புக்குக் காரணமான அரசியல்வாதிகள் மீது பின்னர் நாடாளுமன்றத்தால் விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்குத் தலா 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆங்கிலேய-இந்திய உயர்குடியினரிடையே சமூக நல்லுறவுக்கான நவாபின் நடவடிக்கைகள்
ஆங்கிலேயரது அடக்குமுறைக் கொள்கைகள், சுரண்டல்கள் அனைத்திற்கும் மத்தியில் நவாப் ஐரோப்பியர்களோடு கொண்டிருந்த நட்புறவைப் பாதுகாக்கத் தவறவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியா வந்திருந்த ஆங்கிலேய வர்த்தகர்கள் தொழிற்கூடங்களிலிலேயே தங்கியிருந்தனர்.
இந்தியர்களை தங்களுக்குச் சமமாகக் கருதாததால் அவர்களுடன் அதிக சமூக உறவை வைத்திருக்கவில்லை. அவர்களுடைய தொடர்பு சிற்றரசர்களோடும் பாளையக்காரர்களோடும் தங்கள் தொழிற்கூடங்களுக்கு வருகை தந்த துபாஷிகள் அல்லது அவர்களது சிப்பந்திகளோடும் மட்டுமே இருந்தது. சாதாரண மக்களுடன் தொடர்போ அல்லது உறவோ வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு கலாசார இடைவெளி இருந்தது.
கிறிஸ்தவ சமயப் பரப்பாளர்களின் நடவடிக்கைகளும் இதற்கு ஒரு காரணம். சமத்துவ அடிப்படையில் அவர்கள் மக்களிடம் பழகினாலும் இந்து மதத்தின் மீதும், இஸ்லாம் மீதும் அவர்களுக்கு ஒரு வெறுப்பு இருந்தது. இந்து சமுதாயம் மீட்க முடியாத அளவுக்கு அவல நிலையில் இருப்பதாக அவர்கள் எண்ணினர். நவாப் முகமது அலிதான் முதன்முதலில் ஐரோப்பியர்கள் இந்திய உயர் வர்க்கத்தினருடன் கூடி மகிழ்வதற்குரிய சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்தவர்.
பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பிய வர்த்தகர்களும் கம்பெனி நிர்வாக அலுவலர்களும் இந்திய பெண்களின் நடனம், யானைச் சண்டை போன்ற கேளிக்கைகளை ரசித்தனர். முகமது அலி ஐரோப்பிய உயர்குடியினரை விருந்துக்கு அழைத்து பெண் கலைஞர்களின் நடனத்திற்கு ஏற்பாடு செய்தார். தான் வேட்டைக்குச் செல்லும்போது ஐரோப்பிய அதிகாரிகளையும் அழைத்துச் செல்வதை வாடிக்கையாக்கினார்.
கம்பெனி ராணுவத்தின் அதிகாரியாகப் பணியாற்றிய சர் மார்ட்டின் ஹன்டர் (1783-1794) நவாப் வேட்டைக்குச் சென்றதைப் பதிவு செய்துள்ளார்: “ஒரு கைவிரல் பருமன் தடித்த பின்னலைக் கொண்ட வலையை ஒரு மைல் நீளத்திற்கு, எட்டடி உயர கம்புகளால் தாக்கம் கொடுத்து, விரித்து வைப்பர்; யானை ஒன்றின் மீது சவாரி செய்து நவாப் வந்தவுடன் ஆயிரக்கணக்கான வனவாசிகள் கூக்குரலிட்டுக் கொண்டும், வெடி வெடித்துக் கொண்டும், பறை அடித்துக் கொண்டும் செல்லும்போது மான், ஓநாய், கழுதைப்புலி, நரி, முயல் கும்பலாகப் பயந்து ஓடி வலையில் சிக்கும். அவை அனைத்தும் எவ்வித பாகுபாடுமின்றி சுட்டுக்கொல்லப்படும்.”
நவாபின் தர்பார்
நவாப் முகமது அலியின் பகட்டான ஆடம்பரமிக்க அரசவையை ஆசியா டைம்ஸ் பத்திரிகை இவ்வாறு விவரித்தது: “இரு லெப்டினன்டுகள், ஆறு இசைக்கருவி கலைஞர்கள், சுபேதார், ஜமேதார் என இருந்த அவரது [நவாபின்] பாதுகாப்புக்கான படைத் தலைவர் ஒரு ஐரோப்பியர். ஆதாயமிக்க பணியில் அவருக்கு உதவப் பலர் சந்திப்பர். வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் தினமும் அவரைச் சந்தித்தனர். விடிந்து சூரியன் உதயமானவுடன், அரண்மனைப் பகுதி எங்கும் பல்லக்குகள், குதிரை பூட்டிய வண்டிகள்.
அதேபோல மாலையில் அதே முகங்கள் அதே தோற்றம். நவாப் அனைவரையும் பணிவுடன் வரவேற்று, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதில் ஏற்பட்ட கால தாமதத்திற்கு வருத்தம் தெரிவிப்பதோடு, அதற்குக் காரணமாக பிகோட் பிரபுவின் இரக்கமற்ற கொடிய நடவடிக்கையால் தஞ்சாவூரை இழந்தது என்பார். நவாபின் கொடுக்கல்-வாங்கல் பரிவர்த்தனை சந்தேகத்திற்கு உட்பட்டதாக இருந்தபோதிலும் அவரது பெருந்தன்மை, விருந்தோம்பல், அவரது வசீகர தோற்றம், நடவடிக்கைகள் சந்திக்கச் சென்றவர் எவராயிருந்தாலும் அவரைக் கவரும்.”
இங்கிலாந்திலிருந்து போர்க்கப்பல் ஒன்றில் இந்தியா வந்திருந்த எட்வர்டு ஈவ்ஸ் (A Voyage from England to India என்ற நூலின் ஆசிரியர்) ஆற்காடு நவாப் பற்றி எழுதும்போது “சிறப்பாக எதுவும் அவரிடம் தென்படாவிட்டாலும், கம்பீரமான தோற்றம், இனிமையான நல்லியல்பு கொண்டவர் அவர்” எனக் குறிப்பிடுகிறார்.
கிழக்கிந்திய கம்பனியின் அறுவை சிகிச்சை நிபுணரும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியருமான ராபர்ட் ஓர்ம் “எவ்வளவோ குறைபாடுகள் அவரிடம் இருந்தாலும் இந்த பூமியிலுள்ள பிற எவரைக் காட்டிலும் இவரைப் பார்த்துதான் நான் பரிதாபப்படுகிறேன்” எனத் தனது கடிதம் ஒன்றில் எழுதினார்.
பட மூலாதாரம், Getty Images
நவாபின் சமயக் கொள்கை
நவாப் இஸ்லாம் மதத்தில் பற்றுள்ளவராக இருந்தபோதிலும் இந்துக்களின் நல்லெண்ணத்தை இழந்திடாதவாறு தனது சமயக் கொள்கையைப் பின்பற்றினார். போரின்போது இந்து கோவில்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்.
கர்நாடக போர் ஒன்றின்போது ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் கோவில் சேதமடைந்தது. கோவிலைக் கொள்ளையடித்து கோவில் வளாகத்தைச் சூறையாடி எதிரிகளின் படை சென்ற பிறகு கோவிலை மீண்டும் புதுப்பித்ததோடு அதன் பாதுகாப்புக்காக கோட்டையையும் கட்டினார்.
சிதம்பரத்தில் சிவாலயத்தில் விஷ்ணு கோவில் இருப்பதற்கு சைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வைணவர்களோடு மோதல் ஏற்பட்டபோது இந்த சர்ச்சையைத் தீர்த்து வைப்பதில் நவாப் முக்கியப் பங்கு வகித்தார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கநாதர் கோவில், திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் மற்றும் பல வழிபாட்டுத் தலங்களுக்கு புரவலராக இருந்தார்.
முத்து மீன்பிடி துறைமுகங்களின் பகுதியில் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் நிலைநாட்டப்படாதவாறு கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றிய மீனவர்களின் நலனைக் காப்பதில் நவாபின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
ஆற்காடு நவாப் முகமது அலி பற்றிய வரலாற்று அறிஞர்களின் மதிப்பீடு
ஆற்காடு நவாப் ஆட்சி பற்றி வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இரு விதமான கருத்துகள் நிலவுகின்றன. முகமது அலி தனது ராஜ தந்திரத்தின் மூலம் நீண்ட காலம் (42 ஆண்டுகள்) ஹைராபாத் நிஜாமுக்கு கட்டுப்பட மறுத்து தன்னுடைய சொந்த வழியில், தனக்கான பாணியில் ஒரு வலுவான பிராந்திய சக்தியாக விளங்கியவர். தனது பெயரில் நாணயத்தை வெளியிட்ட முதல் நவாப்.
அவர் ஓர் எதார்த்தவாதி. ஆங்கிலேயர்களின் ஆயுத பலத்தைச் சரியாக மதிப்பிட்டே அவர் அவ்வாறு அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது போலப் பாசாங்கு செய்து ஒரு மன்னருக்கு உரிய அனைத்து உரிமைகளையும், அந்தஸ்தையும் இழக்காது தனது இறுதிக் காலம் வரை, தான் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆங்கிலேயரோடு நட்புறவு கொண்டிருந்தார் என்பது ஒரு பகுதியினர் வாதம்.

ஆனால் ஒரு தரப்பினர் ‘நவாப் ஒரு கோழை; ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய நோக்கங்களைப் புரிந்திருந்தும் துணிச்சலின்றித் தனது சுயநலத்திற்காக நாட்டையே அடமானம் வைத்து, நாட்டு மக்கள் பட்ட இன்னல்களையும் அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளையும் பொருட்படுத்தாது, தனக்கு நேர்ந்த அவமானங்களைப் பொறுத்துக்கொண்டு பகட்டான வாழ்க்கையில் காலத்தைக் கழித்து, நாட்டை அந்நியர் கையில் தாரை வார்த்தவர்” என்று வாதிடுகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் குடிமைப்பணி அதிகாரியாகப் பணியாற்றியவரும், பொருளாதார வரலாற்று அறிஞருமான ரொமேஷ் சந்திர தத் பல விதங்களில் ஆற்காடு நவாப், வங்காள நவாப் மீர் காசிம்-ஐ விட முற்றிலும் மாறுபட்டு எவ்வாறு செயல்பட்டார் என்பதை இவ்வாறாக வர்ணிக்கிறார்: “ஆங்கிலேயர் செல்வாக்கில் இருந்து விலகித் தனது சொந்த நிர்வாகத்தை ஒழுங்கமைக்க மீர் காசிம் தனது அரசாங்க இடத்தை மோங்கிருக்கு மாற்றினார்; முகமது அலி பிரிட்டிஷ் நகரமான மெட்ராஸின் ஆடம்பரத்தில் வாழத் தனது சொந்த தலைநகரான ஆற்காட்டை விட்டு வெளியேறினார். மீர் காசிம் ஒரு பொருளாதார வல்லுநர், ஆங்கிலேயர்களுக்கான அனைத்து நிதிக் கடமைகளையும் அவர் அரியணை ஏறிய இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றினார்.
முகமது அலியால் கம்பெனியின் உரிமை கோரல்களை ஒருபோதும் நிராகரிக்க முடியாமல் மேன்மேலும் கடனில் மூழ்கினார். வங்காளத்தின் உள்நாட்டு வர்த்தகத்தைத் தனது சொந்த குடிமக்களின் கைகளில் வைத்திருக்க மீர் காசிம் ஆங்கிலேயர்களுடன் போராடினார்; முகமது அலியோ தனது நில வருவாயைத் தனக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தவர்களுக்கு வழங்கி நிதி ஆதாரத்தை இழந்தார். கிட்டத்தட்ட அவரது பிரதேசங்கள் அனைத்தும் அவருக்குக் கடன் வழங்கியவர்களின் கைகளுக்கு மாற்றப்படும் வரை கவலையின்றி இருந்தார். மீர் காசிம் தனது ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டார்; முகமது அலி ஆங்கிலேயரைச் சார்ந்திருந்து, ஆடம்பரம் மற்றும் கடனில் வாழ்ந்து, முதுமையில் இறந்தார்.”
“கீழை நாடுகளில் பிரிட்டிஷ் மேலாதிக்கத் திட்டத்தில் ஒரு வலிமையான ஆட்சியாளருக்கு இடமில்லை; ஒரு பலவீனமான ஆட்சியாளர் வாழவும், கடன் வாங்கவும், தனது ராஜ்ஜியத்தின் வருவாயில் இருந்து வட்டியைச் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டார்கள். குணாதிசயங்களில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், இரு ஆட்சியாளர்களும் வேறு வழியின்றி, அந்தந்த மாகாணங்களில் இருந்து பெரும் செல்வத்தை கொள்ளையடிப்பதற்குத் தொடர்ந்து தலைமை தாங்கினர்.”
கா.அ. மணிக்குமார், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் ஓய்வுபெற்ற வரலாற்று பேராசிரியர்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு