0
தென் கொரியாவில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்ட இறுதிப் போட்டியில் பங்குபற்ற இலங்கை தகுதிபெற்றுள்ளது.
வியாழக்கிழமை (29) முற்பகல் நடைபெற்ற 4 x 400 மீற்றர் தொடர் ஓட்ட இரண்டாவது தகுதிகாண் போட்டியை 3 நிமிடங்கள், 07.66 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தைப் பெற்றதன் மூலம் இன்று மாலை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை பங்குபற்றவுள்ளது.
எவ்வாறாயினும் மூன்று தகுதிகாண் போட்டிகள் முடிவில் இலங்கை 3ஆம் இடத்தில் இருப்பதால் பதக்கம் ஒன்றை வென்றெடுப்பதற்கு கடும் பிரயாசை எடுக்க வேண்டி வரும்.
ஒட்டுமொத்த நிலையில் இந்தியா (3:06.28) முதலாம் இடத்திலும் சீனா (3:06.79) இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.
இதேவேளை, பெண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்ட இறுதிப் போட்டியில் இலங்கை நேரடியாக பங்குபற்றவுள்ளது. இந்த இறுதிப் போட்டியும் இன்று மாலை நடைபெறவுள்ளது.
இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான உயரம் பாய்தல் இறுதிப் போட்டி நாளை பிற்பகல் 4.40 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அப் போட்டியில் இலங்கை வீரர் லெசந்து அர்த்தவிது பங்குபற்றுகிறார்.
லெசந்து அர்த்தவிது தனது அதிசிறந்த உயரப் பெறுதியான 2.22 மீற்றர் உயரத்தை அல்லது அதற்கு மேல் பாய்ந்தால் அவருக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.