22
2001ஆம் ஆண்டு இங்கிலாந்து வர்த்தகத் தூதராக ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் நியமிக்கப்பட்டமை தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.
2001 முதல் 2011 வரை 10 ஆண்டுகள் வர்த்தகத் தூதராகப் பணியாற்றிய ஆண்ட்ரூவுக்கு, உலகெங்கிலும் உள்ள மூத்த அரசாங்க மற்றும் வணிகத் தொடர்புகளை அணுகும் தனிச்சலுகை வழங்கப்பட்டது. குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) உணர்திறன் மிக்க தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக அவர் மீது தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பொது அலுவலகத்தில் தவறான நடத்தை (misconduct in public office) என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஆண்ட்ரூ, பின்னர் விடுவிக்கப்பட்டார். எப்ஸ்டீன் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் ஏற்கெனவே மறுத்துள்ள போதிலும், சமீபத்திய குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை பதில் அளிக்கவில்லை.
லிபரல் டெமக்ராட்ஸ் (Liberal Democrats) கட்சி கொண்டு வந்துள்ள இந்தத் தீர்மானம், ஆண்ட்ரூவின் நியமனம், அவர் குறித்த பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பீட்டர் மேண்டல்சன் (Peter Mandelson) வழங்கிய ஆலோசனைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிடக் கோருகிறது. இந்த தீர்மானத்தை அரசாங்கம் எதிர்க்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவாதத்தைத் தொடங்கி வைத்த லிபரல் டெமக்ராட்ஸ் தலைவர் சர் எட் டேவி, ஆண்ட்ரூ நமது நாட்டிற்கும் மன்னர் குடும்பத்திற்கும் அவமானத்தை தேடித்தந்துள்ளார் என்று விமர்சித்தார். “பதவி அல்லது நண்பர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல” என்றும் அவர் கூறினார்.
நடந்து வரும் காவல்துறை விசாரணையைப் பாதிக்கும் வகையில் எம்.பிக்கள் பேச வேண்டாம் என்று சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல் எச்சரிக்கை விடுத்தார். பிரதமர் கீர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அரசாங்கம் வெளிப்படைத்தன்மையை ஆதரித்தாலும், காவல்துறை விசாரணையைப் பாதுகாப்பதில் சமநிலையைப் பேணும் என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து நாடாளுமன்ற வரலாற்றில், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் செயல்பாடுகள் குறித்த இத்தகைய விரிவான விவாதம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.