• Sat. Jun 14th, 2025

24×7 Live News

Apdin News

ஆமதாபாத் விமான விபத்து: உயிர் தப்பியவர் பயணித்த 11ஏ இருக்கை விமானத்தில் எங்கே இருக்கும்? அவசர காலத்தில் பயணிகள் என்ன செய்ய வேண்டும்?

Byadmin

Jun 14, 2025


ஆமதாபாத் விமான விபத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

ஆமதாபாத் விமான விபத்தில் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் உயிர் தப்பியுள்ளார். தன்னுடன் பயணித்த 241 பேரும் உடல் கருகி நொடிகளில் உயிரிழந்த நிலையில், இவர் மட்டும் விமான விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து சிறு காயங்களுடன் எழுந்து ஆம்புலன்சை நோக்கி நடந்து சென்ற காட்சிகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த இருக்கையில் அமர்ந்திருந்ததே அவருக்கு நல்வாய்ப்பாக அமைந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இருக்கை 11ஏ , போயிங் விமானத்தின் அவசர கால வழிக்கு அருகில் அமைந்திருப்பதாகும். அதாவது விஸ்வாஸ் குமாரின் இடது புறத்தில் கை நீட்டும் தூரத்தில் அவசர கால வழி இருந்துள்ளது.

விமானத்தின் முதல் பத்து வரிசைகளுக்கும் விஸ்வாஸ் குமாரின் 11 வது வரிசைக்கும் இடையே மற்ற வரிசைகளுக்கு இடையில் இருப்பதை விட அதிகமான இடைவெளி இருக்கும். ஒருவர் நடந்து செல்லும் அளவிலான இடைவெளி இருக்கும் என்பதால், அந்த இடத்தில் தடைகள் எதுவும் இல்லாமல் ஒருவரால் உடனே எழுந்து நிற்க முடியும்.

அவசர கால வழிகளுக்கு அருகில் அமர்பவர்கள் பொதுவாக நல்ல உடல்நிலையுடன் இருப்பவர்களா என்பதை விமானக்குழுவினர் உறுதி செய்துக் கொள்வர். முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அந்த இருக்கையில் அமர வழக்கமாக அனுமதிக்க மாட்டார்கள். ஒரு அவசர நிலையில் பயணிகள் என்ன செய்ய வேண்டும் என்று பொதுவாக வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் போக, அவசர காலவழிக்கு அருகில் இருப்பவர் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தனியாக அறிவுறுத்தப்படும். அந்த அவசர கால கதவை அவரால் திறக்க இயலுமா என்பதை கேட்டறிந்து கொண்டு, அதை எப்படி இயக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் விமானக்குழுவினர் அவருக்கு தெரிவிப்பார்கள். இவை எல்லாம் விமானம் புறப்படுவதற்கு முன் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பவருக்கு சொல்லப்படும்.

By admin