படக்குறிப்பு, கடந்த வியாழக்கிழமை ஆமதாபத்தில் இருந்து லண்டன் சென்ற விமானம், புறப்பட்ட 60 வினாடிகளுக்குள் குடியிருப்பு பகுதியில் மோதியதில் அந்த விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.கட்டுரை தகவல்
எழுதியவர், லூசி கிளார்க்-பில்லிங்ஸ்
பதவி, பிபிசி செய்திகள்
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.
இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விபத்து நடந்த 28 மணி நேரத்துக்குள், விமானத்தின் தரவுகளைப் பதிவு செய்யும் கருவியான கருப்புப் பெட்டியை மீட்டெடுத்ததாக ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு உறுதிப்படுத்தினார்.
“[கருப்புப் பெட்டி மீட்பு] விசாரணையில் ஒரு முக்கியமான கட்டத்தைக் குறிக்கிறது”. இது இந்த பேரிடர் குறித்த “விசாரணைக்கும் கணிசமாக உதவும்” என்று கிஞ்சராபு கூறினார்.
கடந்த வியாழக்கிழமை ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 60 வினாடிகளுக்குள், விமானம் உயரத்தை இழந்து பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனையில் மருத்துவர் விடுதி கட்டடத்தின் மீது மோதியது.
இந்த விபத்தின் தொடர்ச்சியாக, 270 பேரின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாக கல்லூரியின் ஜூனியர் மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் தவால் கமேட்டி கடந்த சனிக்கிழமை உறுதிப்படுத்தினார்.
விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் (அதாவது 241 பேர்) உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கெனவே உறுதிப்படுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், AFP via Getty Images
விமானங்களில் வழக்கமாக இரண்டு கருப்புப் பெட்டிகள் இருக்கும். அளவில் சிறிய அவையிரண்டும், உறுதியான மின்னணு தரவுப் பதிவுக் கருவிகளாகச் செயல்படும்.
ஒன்று விமானத் தரவைப் பதிவு செய்கிறது, அதாவது விமானம் எந்த உயரத்தில் பயணிக்கிறது, எந்த வேகத்தில் பயணிக்கிறது போன்ற விவரங்களை அது பதிவு செய்யும்.
மற்றொன்று விமானி அறையிலில் ஒலியைப் பதிவு செய்கிறது, இதனால் புலனாய்வாளர்கள் விமானிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும், ஏதேனும் அசாதாரண சத்தங்கள் இருந்தால் அதனையும் கேட்க முடியும்.
விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) நடத்துகிறது, இதற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த குழுக்களின் உதவி தேவைப்படுகிறது. போயிங் தலைமை நிர்வாகி கெல்லி ஆர்ட்பெர்க், அந்த நிறுவனம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறினார்.
ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 13:39 மணிக்கு (08:09 GMT) புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், ஏழு போர்த்துகீசியர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவர் இருந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
AI171 விமானம் லண்டனின் கேட்விக் விமான நிலையத்தை 6:25 BST மணிக்கு சென்று சேர திட்டமிடப்பட்டது.
வெள்ளிக்கிழமை, விமானத்தின் கருகிய இறக்கை உள்ளிட்ட விமானத்தின் பகுதிகள், விபத்து நடந்த இடம் முழுவதும் இடிபாடுகளுக்குள் சிதறிக் கிடந்தன. விமானத்தின் சிதைந்த பெரிய துண்டுகள் சில கட்டடங்களில் சிக்கிக்கொண்டன.
சம்பவ இடத்தை புலனாய்வு அதிகாரிகள் அடைந்தனர். அங்கிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ-வை நம்பியிருப்பதாக ஒரு மருத்துவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Siddharaj Solanki/Bloomberg via Getty Images
தப்பிப் பிழைத்த நபர் கூறியது என்ன?
விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர், விமானத்தில் 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த பிரிட்டிஷ் நாட்டவரான விஸ்வாஸ் குமார் ரமேஷ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.
“நான் எப்படி உயிருடன் மீண்டேன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை,” என்று வியாழக்கிழமை டிடி நியூஸிடம் பேசுகையில் விஸ்வஷ்குமார் ரமேஷ் கூறினார் .
“முதலில், நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். நான் கண்களைத் திறந்து, என் இருக்கையின் பெல்ட்டை அவிழ்த்துவிட்டு விமானத்தை விட்டு வெளியேற முயற்சித்தேன்.”
40 வயதான ரமேஷுக்கு இடது கையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. விமானக் குழுவினரும், விமானப் பயணிகளும் தனது கண்களுக்கு முன்பாக இறப்பதை கண்டதாக அவர் கூறினார்.
விடை தேடி காத்திருக்கும் உறவுகள்
உறவினர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால், பல குடும்பங்கள் இன்னும் கவலையுடன் காத்திருக்கின்றன.
விமானத்தில் தனது சகோதரர் ஜாவேத் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணித்ததாகத் தெரிவித்த இம்தியாஸ் அலி, சகோதரரின் உடலை நேரில் பார்க்கும் வரை அவர் இறந்துவிட்டார் என்பதை நம்ப மாட்டேன் என்று கூறினார்.
“நான் சோகமாகி, அழத் தொடங்கினால், என்னைக் கட்டுப்படுத்த முடியாது” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“யாராலும் என்னைத் தடுக்க முடியாது… என் இதயம் வெடித்துவிடும்.”
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டிருந்தாலும், விபத்தின் பாதிப்பு கடுமையாக இருந்தது. விமானத்தின் இடிபாடுகள் 200 மீட்டர் (656 அடி) வரை பரவியதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனையின் டீன், மருத்துவர் மினாக்ஷி பரிக் பேசுகையில், “விமானம் வளாகத்தில் உள்ள கட்டடங்கள் மீது மோதியதில் 4 மாணவர்கள் இறந்துவிட்டனர்” என்று குறிப்பிட்டார்.
“விமானம் விபத்துக்குள்ளானபோது வளாகத்தில் இருந்த எங்கள் மருத்துவர்களின் நான்கு உறவினர்களும் இங்குதான் இருந்தனர். அவர்களும் உயிரிழந்துள்ளனர்,” என்று மருத்துவர் பரிக் கூறினார்.
“நாங்கள் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனையை மட்டுமே நம்பியுள்ளோம், அதில் நாங்கள் அவசரப்படவோ அல்லது தவறுகளை அனுமதிக்கவோ முடியாது. நாங்கள் நேர்மையுடன் பணியாற்றி வருகிறோம். உறவினர்கள் புரிந்துகொண்டு, கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். [உடல்களை] விரைவில் ஒப்படைக்க விரும்புகிறோம்.”
வெள்ளிக்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி விமான விபத்து நடந்த இடத்தில் சுமார் 20 நிமிடங்கள் செலவிட்டார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசவில்லை. ஆனால் அவரது யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி, அவர் அந்த இடத்தைச் சுற்றி நடந்து சென்று இடிபாடுகளை ஆய்வு செய்வதைக் காட்டியது.
விபத்துக்குள்ளான விமானத்தின் வால் பகுதி ஒரு கட்டடத்தில் சிக்கியிருப்பதைக் காட்டும் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த இடத்தையும் பிரதமர் மோதி நேரில் பார்வையிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
வெள்ளிக்கிழமை காலை, ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் அந்த அனுபவம் “மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது” என்று விவரித்தார்.
கண்காணிப்பு வலைத்தளமான ஃபிளைட்ரேடார்24ன் (Flightradar24) தரவுகளின்படி, போயிங் ட்ரீம்லைனர் 787-8 வியாழக்கிழமையன்று நடந்த பேரழிவுக்கு முந்தைய ஆண்டில் 700க்கும் மேற்பட்ட விமானப் பயணங்களை நிறைவு செய்திருந்தது.
அந்த விமானம் 11 ஆண்டுகள் பழமையானது.
மும்பை–துபை மற்றும் புது டெல்லி–மிலன், பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களுக்கு இடையேயான பயணங்கள், அதன் முக்கிய வழித்தடங்களாக இருந்தன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த விமானம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் வரை 25 முறை சென்றுள்ளது.
இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), ஏர் இந்தியாவின் போயிங் 787-8 மற்றும் 787-9 விமானக் குழுக்களில் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது, இது ஒரு “தற்காப்பு நடவடிக்கை” என்றும் கூறியுள்ளது.