படக்குறிப்பு, 17 வயதான ஆர்யன் அசாரி தனது வீட்டின் கூரையில் இருந்து விமான விபத்தின் வீடியோவை படம்பிடித்து தனது சகோதரி நீலத்திடம் காட்டினார்
ஏர் இந்தியா விமானம் ஒன்று ஆமதாபாத்தில் கடந்த வியாழனன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
விமானம் பிஜே மருத்துவ கல்லூரியின் கேண்டீன் மற்றும் விடுதியில் விழுந்து நொறுங்கியதால் உயிரிழப்பு அதிகரித்தது.
இதுவரை இந்த துயரமான விபத்தில் குறைந்தது 270 பேர் உயிரிழந்தனர்.
பிற்பகலில் விமானம் விபத்துள்ளானதன் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த சிறு காணொளியில், உயரத்தை எட்ட போராடிய அந்த ஏர் இந்தியா விமானம், இறுதியில் தரையில் மோதி நொறுங்கியது பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச ஊடக அமைப்புகளை ஆமதாபாத்தில் விபத்து நேர்ந்த இடத்திற்கும் அதில் பாதிக்கப்பட்டவர்களின் பரிதாப கதைகளுக்கும் ஈர்த்தது.
அந்த வீடியோவை எடுத்த நபர் விபத்தின் முதல் சில சாட்சிகளில் ஒருவராக இருக்க வாய்ப்பு இருப்பதால் அவரை தேடும் பணி உடனே தொடங்கியது.
படக்குறிப்பு, நீலம் அசாரி
நாடு முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வைரலாகி கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்த இந்த வீடியோவை எடுத்த நபரை பிபிசி குஜராத்தின் குழுவினரும் தேடினர்.
இந்த வீடியோவை எடுத்த நபரை பிபிசி குஜராத்தி அடைந்தது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம். முடிவாக இந்த வீடியோவை எடுத்த நபர் யார் மற்றும் இந்த வீடியோவை எடுக்க காரணம் என்ன?
வீடியோவை எடுத்தவரை கண்டுபிடிக்க கூகுள் எர்த் உதவியை எடுத்துக்கொண்டோம்.
வீடியோவை பார்க்கும் போது, வீடியோவை எடுக்கும் நபருக்கு இடதுபுறமிருந்து புறப்பட்டு வலதுபுறத்திற்கு பறப்பது தெளிவாகிறது.
இந்த தகவலுடன், பிபிசி குஜராத் குழு, ஆமதாபாத்தின் மெகானியில் குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு செய்தது. இறுதியில் கிஷோர் ஆரியன் அசாரி என்ற நபர் அந்தப் பகுதியில் இந்த வீடியோவை எடுத்தார் என்பதை கண்டுபிடித்தோம்.
இந்த தகவலின் அடிப்படையில், பிபிசி குஜராத் குழுவினர் 17 வயதான கிஷோர் ஆரியனை கண்டுபிடித்து அவருடன் பேசினர்,
பிபிசி குஜராத்தியுடன் ஒரு உரையாடலில், ஆரியன் அசாரி என்ற அந்த பதின்ம வயது சிறுவர் அந்த இடத்தில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார், இந்த வீடியோவை எடுக்க அவர் எப்படி திட்டமிட்டார் என கேட்டோம்.
அதற்கு பதிலளித்த ஆரியன் சொல்கிறார்,”எனது கிராம மக்களுக்கு காட்டுவதற்காக அந்த வீடியோவை பதிவு செய்தேன்.”
பிபிசி குஜராத்தி செய்தியாளர் ராக்ஸி காகாடேகர் சாஹராவிடம் தன்னுடைய வீட்டு மாடியில் பேசிய அவர், சம்பவ இடத்தில் விமானத்தை பார்த்ததாக தெரிவித்தார்.
மெகானி விமானநிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் தரையிறங்கும் விமானங்கள் மாடியை தினமும் கடக்கின்ற இடத்தில் ஆரியன் அசாரியின் வீடு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மக்கள் அந்த சத்தத்திற்கு பழக்கப்பட்டுவிட்டனர்.
பேசிக்கொ ண்டிருந்தபோது கடந்த ஒரு விமானத்தை சுட்டிக்காட்டிய ஆரியன், “சம்பவம் நடந்த தினத்தில், விமானம் இவ்வளவு உயரத்தில் இருக்கவில்லை;அது தாழ்வாக பறந்துகொண்டிருந்தது. விமானம் இறங்கிக்கொண்டிருந்தது. பின்னர் அந்த மொத்த விமானமும் குலுங்கிக்கொண்டிருப்பதாக தோன்றியது.”
இந்த வீடியோவை எடுத்ததற்கான காரணத்தை கேட்டபோது,”இந்த விமானம் நொறுங்கப்போகிறது என நினைத்தேன், எனவே அந்த வீடியோவை எடுத்தேன்,” என கூறினார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து
ஆரியன் விமான விபத்தை பார்த்ததை உறுதி செய்த ஆரியனின் சகோதரி நீலம் அசாரி, “சம்பவம் நடந்தபோது நான் உள்ளே இருந்தேன். ஆனால் அந்த விமானம் விழுந்தபோது ஆரியன் அனைத்தையும் பார்த்து என்னை வெளியே அழைத்தான்,” என்றார்.
ஆரியனின் அண்டை வீட்டுக்காரரான அருண்குமார், பிபிசி குஜராத்தியுடன் பேசும்போது, ஆரியன் வீடியோ எடுத்ததை உறுதி செய்தார். “சம்பவத்தின் வீடியோவை முதலில் செல்போனிலும், தொலைக்காட்சியிலும் பார்த்தபோது அது இந்தப் பகுதியில் இருக்கும் ஏதேனும் ஒரு மாடி மீதிருந்து எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என நினைத்தேன். ஆரியன் அந்த வீடியோவை எடுத்ததை நான் பின்னர் கண்டுபிடித்தேன்.”
இந்த விபத்து நடந்தது எப்படி என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள உதவியாக இருந்தது என்பதால் இந்த வீடியோவை எடுத்தது மிகவும் தைரியமான காரியம் என அவர் ஆரியனிடம் தெரிவித்தார்.
ஆரியனின் மற்றொரு அண்டை வீட்டுகாரரும் வீடியோவை முதலில் பார்க்கவில்லை என்றும், வீடியோவை பார்த்தபோது அது அவர்கள் பகுதியில் உள்ள வீட்டு மாடி ஒன்றின் மீதிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என உணர்ந்ததாக தெரிவித்தார்.
“முதலில், இந்த வீடியோவை யார் எடுத்திருக்கமுடியும் என யோசித்துக்கொண்டிருந்தேன். பின்னர், எதிரில் வசிக்கும் இந்த சிறுவன் இங்கு வந்து மாடி மீதிருந்து வீடியோவை பதிவு செய்தது கண்டுபிடித்தேன்,” என தெரிவித்தார்.
இந்த வீடியோவை முதலில் பதிவு செய்த ஆரியனிடம் ஆமதாபாத் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருந்தனர். சம்பவத்தின் சாட்சியாக அவரது வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்தனர்.
(சட்டப்படி ஆரியன் ஒரு சிறார் என்பதால், ஆரியனின் வீடியோ பற்றி தகவல் பெறுவதற்கும் அவரது நேர்காணலை வெளியிடுவதற்கும் அவரது தந்தை மகன்பாயிடமிருந்து தேவையான அனுமதிகளை பிபிசி குஜராத்தி பெற்றது.)