0
ஆஸ்திரேலியாவின் தேசிய தினத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்ட சம்பவம் பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் ஜனவரி 26ஆம் திகதி பெர்த் நகரில் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் 31 வயதுடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த இடத்தில் வீசியதாக கூறப்படுகிறது.
ஆனால், வெடிகுண்டு வெடிக்காததால் எந்தவித உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பழங்குடி மக்களில் உள்ள இரண்டு முக்கியக் குழுக்களில் ஒன்றை குறிவைத்து இந்தத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
1788ஆம் ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை காலனித்துவ ஆட்சிக்குள் கொண்டு வந்ததை நினைவுகூரும் நாளாக தேசிய தினம் அனுசரிக்கப்படுகிறது. அதேவேளை, பழங்குடியினர் உள்ளிட்ட சிலர் அந்த நாளை தங்கள் நாட்டின் ஆக்கிரமிப்பு நாளாகக் கருதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவது வழக்கமாகும்.