பட மூலாதாரம், Getty Images
மே 29ஆம் தேதி இரவு, சண்டிகர் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
பெங்களூருவின் இந்த வெற்றிக்குப் பிறகு, முல்லன்பூர் மைதானத்தில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நடந்தன.
ஒருபுறம், 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் வெற்றிக்காகப் போராடி வந்த விராட் கோலி, பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த அனுஷ்கா சர்மாவை பார்த்து, ‘இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும்’ என்று சூசகமாகக் கூறினார்.
மறுபுறம், போட்டியில் தோல்வியடைந்த பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “நாங்கள் ஒரு போரில் தோற்றுவிட்டோம், ஆனால் முழு போர் இன்னும் முடிவடையவில்லை” என்று கூறினார்.
தனது வார்த்தைகளை உண்மையாக நிரூபித்த ஸ்ரேயாஸ் ஐயர், குவாலிஃபையர்–2 ஆட்டத்தில் வலிமையான மும்பை இந்தியன்ஸ் அணியைத் தோற்கடித்து ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தனது அணியை அழைத்துச் சென்றார்.
இன்று (ஜூன் 3) ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த ஆண்டு, ஐபிஎல் தொடரில் ஒரு புதிய அணி சாம்பியனாக சாதனை படைக்கும்.
பட மூலாதாரம், Getty Images
கடந்த 18 ஆண்டுகளாக 18வது எண் ஜெர்சியுடன் களமிறங்கிய விராட் கோலியால், இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்ல முடியவில்லை. மறுபுறம், ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரண்டு வெவ்வேறு அணிகளை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு, ஐபிஎல் தொடரை வென்ற அனுபவமுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் வெற்றியின் பாதையில் அழைத்துச் சென்றார். ஆனால் அதன் பிறகு நடைபெற்ற ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அவரைத் தங்கள் அணியில் இணைத்துக்கொண்டது.
இன்று, இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத அந்த பஞ்சாப் அணியை ஸ்ரேயாஸ் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
லீக் கட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ள இந்த இரண்டு அணிகளின் செயல்திறனில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் முக்கியப் பங்கு வகித்திருந்தாலும், இந்த இரண்டு அணிகளும் இளமையும், திறமையும் நிரம்பிய வீரர்களின் பங்களிப்பால் மேலும் வலுப்பெற்றுள்ளன.
குவாலிஃபையர்-1இல், பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் பெங்களூரு அணியின் பந்துவீச்சுக்கு ஒரு சவாலாக இருந்தனர். இருப்பினும், இறுதிப் போட்டியில், இந்த இரு அணிகளும் இதுவரையிலான பயணத்தை மறந்து, இதுவரையிலான தோல்விகளை மறந்து, இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லத் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்திப் போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
‘ஈ சாலா கப் நம் தே’ பாடல் உண்மையாகுமா?
பட மூலாதாரம், Getty Images
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை மூன்று ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளது. 2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று ஐபிஎல் இறுதிப் போட்டிகளிலும் ஆர்சிபி தோல்வியடைந்துள்ளது.
கடந்த 18 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் உயர்தர வீரர்களைக் களமிறக்கிய இந்த அணியால் ஒருபோதும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இந்த அணிக்காக விராட் கோலி, கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், ஷேன் வாட்சன், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் பங்கேற்றனர். ஆனால் எந்த வீரர்களாலும் ஐபிஎல் பட்டத்தை வெல்லும் கனவை நிறைவேற்ற முடியவில்லை.
ஒரு முக்கியமான தருணத்தில் தோல்வியை ஏற்றுக்கொண்ட பிறகு பெங்களூரு அணியின் வீரர்கள் மைதானத்தில் உணர்ச்சிவசப்படுவதைப் பல கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்திருக்கக் கூடும்.
இருந்தபோதிலும், விராட் கோலி மற்றும் பெங்களூரு அணிக்கான ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வந்தது.
“ஈ சாலா கப் நம் தே” என்ற பாடல், ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆவலிலில் இருந்து உருவானது. ‘இந்த ஆண்டுக்கான கோப்பை நமதே’ என்பதுதான் இந்தப் பாடலின் பொருள்.
பட மூலாதாரம், Getty Images
இப்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜத் பட்டிதரின் தலைமையில் மற்றும் விராட் கோலியின் முன்னிலையுடன் பெங்களூரு அணி இறுதிப்போட்டியை எட்டியுள்ளது.
குவாலிஃபையர்-1இல் பஞ்சாப் அணியை வீழ்த்திய பின்னர், பெங்களூரு அணிக்கு நிச்சயமாக வேறு மாதிரியான நம்பிக்கை கிடைத்திருக்கும்.
ஆனால் மும்பையிடம் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு பஞ்சாப் அணியைக் குறைத்து மதிப்பிடும் தவறை அவர்கள் நிச்சயம் செய்ய மாட்டார்கள்.
பெங்களூரு அணியில் விராட் கோலி, ரஜத் பட்டிதார், ஜிதேஷ் ஷர்மா, லியாம் லிவிங்ஸ்டன், ரொமாரியோ ஷெப்பர்ட் என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். குருனால் பாண்டியா, யஷ் தயாள், சுயாஷ் ஷர்மா போன்ற பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.
தேவ்தத் படிக்கலின் காயம் காரணமாக அணிக்குள் வந்த மயங்க் அகர்வாலும் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்.
எனவே, இந்த வீரர்கள் அனைவரும் ஐபிஎல் பட்டத்தை வெல்லத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இரு அணிகளையும் ஐபிஎல் வெற்றிக்கு வழிநடத்தும் முதல் கேப்டனாக ஸ்ரேயாஸ் மாறுவாரா?
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகிய இருவரும் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸின் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ள இரண்டு நபர்கள்.
இறுதி வரை விடாமல் போராடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் மனப்பான்மையை, பஞ்சாபின் இளம் வீரர்களுக்கு ஏற்படுத்துவதில் ரிக்கி பாண்டிங் வெற்றி பெற்றுள்ளார் என்பது அணியின் செயல்பாட்டில் இருந்து தெளிவாகிறது.
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியில் அறிமுகமாகாமல், இந்த அணிக்காக விளையாடும் வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
பஞ்சாப் அணிக்கு ஆக்ரோஷமான தொடக்கத்தை அளித்த இளம் பந்து வீச்சாளர்கள் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், விஜய்குமார் விஷாக் ஆகியோர் மிக முக்கியமான தருணங்களில் அணிக்காக அற்புதமாக விளையாடுவதில் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர்.
இதனுடன், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.
இந்த இளம் அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வதில் மும்பை வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். இந்தப் போட்டியில் 16 போட்டிகளில் 603 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி 54.82, ஸ்டிரைக் ரேட் 175.80 வைத்துள்ளார்.
குவாலிஃபையர்-2 போட்டியில், மும்பை அணியின் சக்தி வாய்ந்த பந்துவீச்சை எதிர்கொண்டு ஸ்ரேயாஸ் நிதானமாக 41 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆக்ரோஷமான இன்னிங்ஸை ஆடினார்.
அதில், அவர் 8 சிக்ஸர்கள் வரை அடித்தார்.
ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், வெற்றிக்குப் பிறகு, அவரிடம் எங்கும் எந்த ஆக்ரோஷமும் இல்லை. அவர் மிகவும் அமைதியாகத் தனது கையுறைகளைக் கழற்றி, எதிரணி வீரர்களுடன் கைகுலுக்கி, ‘பாதி வேலை முடிந்தது’ என்று கூறினார். (இருப்பினும் மீதமுள்ள பாதி வேலை முடிய வேண்டும்.)
பஞ்சாப் அணி இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. அதற்குப் பிறகு, 2015ஆம் ஆண்டு, ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் ஐபிஎல் ஆட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
பஞ்சாப் அணியில் இரண்டு வீரர்கள் மட்டுமே ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர். முதலாவது வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டாவது வீரர் யுஸ்வேந்திர சஹல்.
சஹல் ஏற்கெனவே பெங்களூரு அணிக்காக இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளார். எனவே மற்ற வீரர்கள் இறுதிப்போட்டியில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பார்ப்பது முக்கியம்.
இறுதிப் போட்டிக்கு முன் அறிய வேண்டிய புள்ளிவிவரங்கள்
பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு ஆமதாபாத் மைதானம் ரன்களால் நிரம்பி வழிகிறது. இங்கு விளையாடப்பட்ட போட்டிகளில், அணிகள் 11 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மேலும் ஒரு இன்னிங்ஸில் 196 ரன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாப் அணி இதற்கு முன்பு இங்கு இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. லீக் போட்டியில் அந்த அணி 243 ரன்கள் குவித்திருந்தது. இந்த மைதானத்தில் பெங்களூரு அணி விளையாடும் முதல் போட்டி இதுவாகத்தான் உள்ளது.
இங்கு இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இரவில் நடைபெற்ற ஒரேயொரு போட்டியில், அதாவது குவாலிஃபையர்-2இல் சேஸிங்கில் ஒரு அணி வென்றுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மொத்தமாக மூன்று முறை மோதியுள்ளன. அந்த மூன்று போட்டிகளிலும் பெங்களூருவின் அதிரடி பந்துவீச்சாளர்கள் பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசையை முற்றிலுமாகத் தகர்த்துள்ளனர். மூன்று போட்டிகளிலும் பஞ்சாபின் நிலை முறையே 53/4, 76/4 மற்றும் 38/4 என்ற நிலையில் இருந்தது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய 36 போட்டிகளில், பஞ்சாப் 18 போட்டிகளிலும், பெங்களூரு 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஆண்டு நடந்த மூன்று போட்டிகளில், பெங்களூரு 2 போட்டிகளிலும், பஞ்சாப் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் எதிரணியின் சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றிருப்பதும் தனிச் சிறப்பு.
இந்த ஆண்டு ஐபிஎல் இந்திய கிரிக்கெட்டின் ஒரு சகாப்தம் முடிவுறுவதை குறிக்கிறதா?
ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்தாலும், இந்த ஆண்டின் ஐபிஎல் ஒரு சகாப்தத்தின் முடிவாகத் தெரிகிறது.
மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு பற்றிய குழப்பமான சூழலைத் தக்கவைத்துக் கொண்டாலும், இந்த ஐபிஎல் தொடரில் வெளிப்பட்ட அவரது செயல்திறன், அவரது கிரிக்கெட் பயணம் நிறைவுக்கு வரக்கூடிய கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதைக் காட்டுகிறது.
மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணியை நான்கு முறை ஐபிஎல் பட்டம் வெல்லச் செய்த ரோஹித் ஷர்மா, கடந்த ஆண்டு கேப்டனாக இருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது அவர் மும்பை அணிக்காக வெறும் ‘இம்பாக்ட் பிளேயராக’ (impact player) விளையாடுகிறார்.
ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே, விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட்டில், 21ஆம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்திய இந்த முன்னணி வீரர்களின் பயணத்தின் பிற்பகுதி தொடங்கிவிட்ட நிலையில், சுப்மன் கில், சாய் சுதர்சன், பிரசித் கிருஷ்ணா, வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட பல திறமையான இளம் வீரர்கள் இந்திய கிரிக்கெட் மேடையில் ஒளிரத் தொடங்கியுள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளை நீங்கள் கூர்ந்து கவனித்தால், இப்போது ஒவ்வொரு அணியும் எதிர்காலத்திற்கான தயாரிப்பாகத் தங்கள் அணியின் முக்கியப் பொறுப்புகளை இளம் வீரர்களுக்கு அளித்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ரிதுராஜ் கெய்க்வாட் கையிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை ரஜத் பட்டிதாரிடமும், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ரிஷப் பந்திடமும், டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் பொறுப்பை அக்சர் படேலிடமும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பொறுப்பை சஞ்சு சாம்சனிடமும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியாவிடமும், குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் பொறுப்பை சுபம்ன் கில் கையிலும் ஒப்படைத்துள்ளது.
எனவே, 2025 ஐபிஎல் போட்டியை உண்மையிலேயே ஒரு மாற்றத்தை நோக்கிய போட்டி என்று கூறலாம். இப்போது இறுதிப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் களத்தில் இறங்கும்.
ஒருபுறம், நாட்டின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த பெங்களூரு அணி, 18 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருக்கும் தங்கள் கனவை நிறைவேற்ற முயலும்.
மறுபுறம், பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் தொடரின் வெற்றியைச் சுவைக்க கடுமையாகப் போராடும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு